திரை விலக்கி நீ முத்திரை பதிக்க.. (காகிதப் பூக்கள்- 15)
எழுத்தாளர் லதா சரவணனின் புதிய நெடுந்தொடர் காகிதப் பூக்கள். தொடரின் 15வது அத்தியாயம் இது.
- லதா சரவணன்
அதிசயமாய் அன்று வரவேற்பரையில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டு இருந்தான் ஈஸ்வர். ரகசியமாய் அவனை விழிகளால் வருடினாள் மீனாட்சி. நீலநிற ஷெர்வானி அவனை சற்று உயர்த்திக் காட்டியது. நொடிக்கு ஒருமுறை அவனிடம் பல உடல்மொழி மாற்றங்கள், அபிநயங்கள் தலைமுடியைப் கோதிக் கொள்வதில் ஆகட்டும், புத்தகப் பக்கங்களை ஒற்றை விரல் கொண்டு திருப்பும் லாவகமாகட்டும் அவளை அசைத்துப் பார்த்தன.
ரத்னா சொன்னது போல் இப்போது அவனிடம் போய் நின்று பேச்சுக் கொடுப்போமா? ஆனால் என்னவென்று சொல்வது ? முதலில் அவனைக் கண்டால் எனக்குப் பேச்சு வருமா ? அப்படியில்லையெனில் அசடுவழிய நிற்கவேண்டுமே ? அய்யோ அது அசிங்கமல்லவா? வேண்டாம். நான் அவர் மேல் கொண்ட அன்பு நிஜம் அது கட்டாயம் அவரிடம் என்னைக்
கொண்டு சேர்க்கும் என்று கண்களை மெல்ல மூடினாள் அவனின் பிம்பத்தை அதில் நிரப்பிக்கொண்டு ...!
என் விழிக்குள் இருக்கும் உன் பிம்பம் வெளிவரா வண்ணம் பாதுகாக்கிறேன் ஏன் எனைக் கொல்லும் பார்வை, மாலை நேரமிது, மலர்களின் சூட்டைத் தணிக்க வண்டுகளின் அணிவகுப்பு, நான் கன்னி மாடத்தின் மேல் காளை உனக்கென நீலநிற பட்டுடுத்தி பிறை நெற்றியில் செந்தூரத்திலகமிட்டு, விழிகளில் ஏக்கத்தையும் விரல்களில் உன் வருகைக்கென தீபத்தையும் சுமந்து காத்திருக்கிறேன்.!
நீயும் வந்தாய்! நம்மிருவருக்கும் இடையில் மெல்லிய வெண்திரை! மருதாணி பூசிய விரல்களில் மட்டுமல்ல சிவப்பு என் மலர் முகத்திலும்தான்.! திரை விலக்கி நீ முத்திரை பதிக்க பதறிய நெஞ்சம் இடறிய இடம் உன் மலர் மஞ்சம்.!
இதோ கட்டிலின் மேல் நான் உனக்காக பறித்த ஆசை ரோஜா என் சங்கு கழுத்தினை அலங்கரிக்க நீ அளித்த முத்துக்கள். நின் வருகையையெண்ணி பூத்து காத்திருக்கும் மலர்கள் எங்கே நீ...!
காற்றாய் சுவாசமாய்... மிதந்து வருகிறாயா? காலை புலர்ந்து மாலை மலர்ந்து மேகக்கூட்டம் சிதறி கலைந்து ஓடி ஒளிந்து இருந்த நிலவைக் கொண்டு வந்துவிட்டது வானம். ஆனால், நான் மட்டும் மூடிய விழிகளும், மெளனித்த இதழ்களுமாய் அலையலையாய் பரவும் எண்ணங்களோடு காத்திருக்கிறேன்.
"மீனா..!". ரத்னா வந்து அவள் முதுகில் ஓங்கி அடித்தாள். " ஸ்ஆ,,,,!"
"எத்தனை தடவை கூப்பிடறேன் . அப்படியென்னத்தை மெய்மறந்து பார்த்திட்டு இருக்கே? தோழியின் பார்வை சென்ற இடத்தினைக் கண்டதும் அவள் கண்களில் குறும்பு குடிகொண்டது. அடிசக்கை பூஜை நேரக் கரடிபோல் வந்து விட்டனோ? அம்மையாருக்கு என்மேல் கோபம் ஒன்றும் இல்லையே?"
"போடி.....!"
"இப்படி பார்த்தே காலம் தள்ளிடப்போறடி நீ?! முறைக்காதே... நம்மை பார்க்க ஒரு விருந்தாளியை அழைச்சிட்டு வந்திருக்கிறேன்.!"
"யாரு? ரத்னா?"
"முதல்ல நீ வெளியே வா! எல்லாம் நமக்கு வேண்டிய விருந்தாளிதான். இந்த ரூமில் ஓரே காதல் காற்று மூச்சடைக்கிறது. வெளியே வா!" இருவரும் வெளியே வந்தனர். சுமார் 38 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி அங்கே அமர்ந்திருந்தார்.
மரியாதை நிமித்தம் இவர்களைக் கண்டு கைகுவிக்க வணக்கம்மா என்றாள் மீனாட்சி.
கனிவு ததும்பும் முகம் அவருக்கு மெல்லிய கரையோடிய காட்டன் புடவை வட்டமான பொட்டு நெற்றியில் விபூதிக்கீற்று! வெள்ளிப் பிரேமிட்ட கண்ணாடி
"மேடம் ஆதம்பாக்கம் அருகில் "சுடர்ஒளிங்கிற" பேரில் ஒரு ஹோம் நடத்திறாங்க. நாம திருநங்கைகள் பற்றி கட்டுரைகள் எழுதறோம் இல்லையா? அவங்க ஹோமிலும் திருநங்கைகள் இருக்காங்களாம். மனசும் உடலும் நொந்து போய் வந்தவங்க! இப்போ ஏதேனும் கைவேலை,தையல் முதியோர்களை கவனித்தல், போன்ற வேலைகளைச் செய்யறாங்களாம். அவர்களை ஒருமுறை நேரில் சந்தித்து பத்திரிகையில் எழுதணுமின்னு கேட்டு வந்திருக்காங்க.!" ரத்னா சொல்லவும், மீனாட்சியின் அம்மா காபியோடு வந்தார்.
காபியை பருகியபடியே,, "உனக்கு சம்மதமாம்மா,,,,,!"
"என்னம்மாயிது? எனக்கு ஒரு நல்ல சந்தர்ப்பத்தை நீங்க உருவாக்கித் தந்து இருக்கீங்க? இதைப் போல் ஒரு நேரடிக் கட்டுரை எழுத வேண்டும் என்று நான் இருந்தேன், அதுக்கு தகுந்த சந்தர்ப்பம் அமைந்து உள்ளது. உங்க ஹோமில் மொத்தம் எத்தனைபேர் இருக்கீங்க?"
"60பேருக்கும் மேலம்மா! சின்னதா ஆரம்பிச்சேன்... இப்போ உங்களைப் போல சமூக அக்கறையும் நல்ல மனமும் உள்ள மனிதர்களால நடந்திட்டு வருது."
"நீங்க ? உங்களுக்கு எப்படி இந்த மாதிரி ஒரு ஹோம் நடத்தணுங்கிற எண்ணம் வந்தது.?"
"என் பெயர் திவ்யா.. நானும் ஒரு அரவாணிதான். அப்பெண்மணி சொல்ல ஹாலில் இருந்த மூவரும் ஒருவரையொருவர் வியப்பாய் பார்த்துக்கொண்டனர். உண்மைதான் மீனாட்சி ! சொந்த ஊர் ஸ்ரீவில்லிப்புத்தூர், பெரிய குடும்பம் அப்பா
அம்மா வெச்ச பேரு ராகவன், என் கூட பிறந்தவங்க ஐந்து பெண்கள், மூணு பையன்கள்.
13வயசிலே எனக்குள்ள சில மாற்றங்கள். என் மார்பு பெரிசாகிகிட்டே வந்தது. பள்ளியிலே எல்லாரும் கிண்டல் பண்ண ஆரம்பிச்சாங்க. என்கிட்டே ஏற்பட்ட நளினங்கள் பார்த்து அப்பாவுக்கு சந்தேகம். ஊரிலேயே பெரிய மனிதர் என்னால ஒவ்வொரு இடத்திலும் அவமானப்பட்டாங்க, அக்காங்க கல்யாணம் எல்லாம் கேள்விக் குறியா இருந்தது. அதனால வீட்டை விட்டு துரத்திட்டாங்க!"
(தொடரும்)