இனிமேல் தடையில்லை.. உன் அன்பை தெரியப்படுத்திடு.(காகிதப் பூக்கள் -13)
எழுத்தாளர் லதா சரவணனின் புதிய நெடுந்தொடர் காகிதப் பூக்கள். தொடரின் 13வது அத்தியாயம் இது.
- லதா சரவணன்
"நன்றி ரத்னா,, கஷ்டத்தில் உதவுவதுதான் உண்மையான நட்பு குழப்பத்தில் இருந்த என்னை தெளிவாக்கிட்டே ரொம்பவும்......!"
"இரு....இரு.... நன்றி சொல்லி அந்நியமாக்கித் தொலைக்காதே ?! நீ நல்லா இருக்கணும் மீனா,,,, உன் வாழ்க்கை நல்லா அமையணும்!" தோழியின் தோளை ஆதரவாய் கட்டிக் கொண்டாள் ரத்னா..
"நீ சொன்னபடியே நான் நடந்து கொள்கிறேன் ரத்னா...!"
"கட்டாயம் ... இது என் உத்தரவு!" என்று மன்னர் தோரணையில் அவள் பேசிட புன்னகையில் கட்டிக் கொண்டனர் பெண்களிருவரும்!
அன்றைய தினத்திற்குப் பிறகு படிப்பில் கவனம் செலுத்தினாள். ரத்னாவின் பேச்சிற்கு மரியாதை கொடுத்து தன் பணியை கவனிக்கலானாள். அவ்வப்போது நிறைய பத்திரிகைகள், மேகஸின்கள் எல்லாம் ஈஸ்வர் பெயர் வரும் நேரம் மனம்
அலைபாயும்... தனிமையில் அவன் நினைவுகளில் இருந்து தன்னை மீட்டுக் கொள்ள இயலாமல் தவியாய் தவிப்பாள். வலுக்கட்டாயமாய் ஒதுங்குவாள். இதோ படிப்பையும் ஆராய்ச்சியையும் முடிக்கும் தருவாய்க்கு வந்துவிட்டது.
அவர்கள் வீட்டிற்கு எதிர் புறம் உள்ள வீட்டில் யாரா புதிதாய் குடி வருவதாய்தாய் சொல்லிட கேட்டு, மாலையில் கல்லூரி முடித்து திரும்பி வரும் போது ஈஸ்வர் ஏ,ஸி என்ற பெயர் பலகையைக் கண்டவுடன் வியப்பு தொற்றிக்கொண்டது இருவருக்கும்.
"ஏய் ?! இது உன் ஆளுதான் மீனா ரத்னா காதைக் கடித்தாள்."
"கத்தாதேடி ! யார் காதிலாவது கேட்டுடப் போவது?"
"நடிக்காதே மீனா உன் மனசிலே ஈஸ்வர் மேலுள்ள நேசம் மறையாமல் இருக்குன்னு எனக்குத் தெரியும் மீனா, என்ன? வாய் விட்டுச் சொல்லாம எப்படித் தெரியுமின்னு பாக்குறீயா? ஈஸ்வர் பத்தின ஒவ்வொரு விஷயங்களை நீ சேகரிக்கிறதும்,
பத்திரப்படுத்தி வைக்கிறது. இதோ இப்போ அவர் உன் வீட்டுக்கு எதிரே வந்து இருக்கார்ன்னு தெரிஞ்சதும், உன் கண்களின் ஒளி முகத்தின் சிரிப்பு எல்லாமே உன் இறவாத நேசத்தை உணர்த்துதே !"
"அன்னைக்கும் உண்மையான அன்பு இருந்தது ரத்னா,."
"இருக்கலாம். ஆனா மனசு சீக்கிரம் உணர்ச்சி வசப்படக்கூடியது. சட்டுன்னு ஏத்துக்கிட்டதை உதற முடியாது. இந்தக்கால இடைவெளியில் உனக்கு நல்லது கெட்டது எதுன்னு புரிந்திருக்கும். ஈர்ப்புக்கும், அன்பிற்கும் உள்ள வித்தியாசம் தெரிந்திருக்கும். எதார்த்தத்தை ஏற்கும் மனப்பக்குவம் வந்திருக்கும். புரியுதா? ஏன் அன்னைக்கு அப்படி பேசினேன் என்று?!"
தலையசைத்தாள் மீனா!
"இனிமேல் தடையில்லை, கூடுமான வரையில் சீக்கிரமே உன் அன்பை அவருக்குத் தெரியப்படுத்திடு..!"
"எப்படிடீ...." உடனே முடியும்
"லூசு! ஏற்கனவே 2 வருடங்களுக்கு மேலும் கடந்தாகி விட்டதே?! தைரியமா டிரை பண்ணு.,!"
ஈஸ்வர் எதிர்வீட்டில் இருந்து வருவது போவதையெல்லாம் தினமும் கவனித்துக் கொண்டுதான் வருகிறாள். ஆனால், அவனிடம் பேசும் சந்தர்பபம் தான் வாய்க்காமலேயே போனது..,,!
(தொடரும்)