"நீயிருக்கும் இடம் தானே என் இடமும்....!" (காகிதப் பூக்கள் - 16)
எழுத்தாளர் லதா சரவணனின் புதிய நெடுந்தொடர் காகிதப் பூக்கள். தொடரின் 16வது அத்தியாயம் இது.
- லதா சரவணன்
"அம்மா மட்டும் ரொம்பவும் அழுதாங்க! சென்னைக்கு வந்து ஒரு ஜமாவில் சேர்ந்திட்டு மும்பை போனேன். அங்கேயும் பிடிக்கலை, சில விஷயங்களால வரக் கூடாத நோயும் வந்திட்டு, அப்போதான். என் மூளையில் சிறு தீப்பொறிபோல்
பளிச்சிட்டது நாம் ஏன் மெழுகுபோல் உருகணும். எல்லாரும் ஒருநாள் போகிறவர்தான் இருக்கும்வரை நல்லது செய்ய நினைத்து இதைத் துவங்கினேன் 12 வருஷமாச்சு!"
"இப்போ திடுமென்று உங்க ஹோமைப்பற்றி எழுதணுமின்னுங்கிற எண்ணம் ஏன் வந்தது?"
"விரக்தியிலும் வேறு வழியின்றி என்போல் வெளிவருபவர்கள் தவறான இடங்களில் சிக்கி சீரழியாம ஒரு விழிப்புணர்வா இருக்கட்டுமேன்னுதான்! மீடியாக்கள் மூலமா பேசினா இன்னமும் நிறைய பேர் பார்வையில் பட வாய்ப்பு இருக்குமே மீனாட்சி, எனக்கும் ஆயுள் குறைவு இருக்கும்போதே ஏதாவது செய்துடணும், ஆதரவில்லாம இருப்பவர்களுக்கு நானும் என் அமைப்பும் உதவ தயாரா இருக்கோன்னு புரிய வைக்கணும்மா!"
"எனது இனத்தவரும் மற்றவரைப்போல் முன்னுக்கு வந்து நல்ல வாழ்க்கை நடத்தணும். நாங்களும் சமுதாயப்பிரஜை ஏன் விலகி வாழணும். பிறருடைய கேலிக்கு ஆளாகாமல் குறுகிய மனதோட இல்லாமல் நெஞ்சுறுதியோட சொற்ப வருமானம்
ஆகஇருந்தாலும், நிறைவா வாழறோன்னு காட்டணும். எங்கமேல சமூகத்திற்கு ஒரு மதிப்பு வரணும். வெளிச்சத்தில் சுடர்விடும் விளக்கா இல்லாமல், துன்பம் எனும் இருளை விலக்கும் தீபமாய் மாறணும்!" அவருடைய கண்களில் நீர் பெருகியது.
மீனாட்சி அருகில் வந்து அவர் தோளினைப் பற்றினாள். "உணர்ச்சிவசப் படாதீங்கம்மா?! சமூகத்தில் நலிந்தவர்களுக்கென என் குரல் கட்டாயம் ஒலிக்கும். அவசியம் நாங்க உங்க ஹோமிற்கு வருவோம். எப்போன்னு மட்டும் தெரிவிங்க?!"
"வர்ற ஞாயிறு எல்லோரும் இருப்பாங்க. நீங்க ப்ரீயா இருந்தா அன்னைக்கே.....!"
"அவசியம் வர்றோம்....!"
"அப்போ நான் கிளம்பறேன்.. ரொம்ப நன்றி! அந்தப் பெண்மணி கைகூப்பி வணங்கிவிட்டு சென்றார்.
"ரத்னா வர்ற ஞாயிறு உனக்கு வேறெதுவும் வேலையில்லையே?"
"கழுதை கெட்டா குட்டிச்செவரு.! நீயிருக்கும் இடம் தானே என் இடமும்....!"
"உன்னை....! சாரி ஒரு காமிரா.....!அப்புறம் கைக்கு அடக்கமா ஒரு சின்ன டேப் ரெடி பண்ணிடு !"
"யெஸ்! அம்மா என்ன டின்னர் இன்னைக்கு வாசனை கமகமன்னு வருதே,,,,!"
"வெஜிடேபிள் ரைஸ், தயிர் வெள்ளரிப் பச்சடி,!"
"அப்ப டின்னர் இங்கேதான். ஏய் நீ வர்றீயா? இல்லை உன்னோடதையும் சேர்த்து நானே காலி பண்ணட்டுமா?" ரத்னா சாப்பாட்டு மேஜைக்கு ஓட இவளும் சிரித்தபடி பின்னாலேயே சென்றாள்.
ஈஸ்வர் எழுந்து உள்ளே சென்றான்.." ம்...!". சாப்பாட்டு மேஜையருகில் சென்றான் ஹாட்பேகில் பரோட்டாவும் சென்னாமசாலாவும், இருந்தது. ஹோட்டல் சாப்பாடுதான். போஸ்டிங்கில் மாறி சென்னை வந்ததில் இருந்தே பழகிப்போனது. அம்மாதான் மாய்ந்து கொள்வாள். "என்னடா எத்தனை நாளைக்கு இப்படி எடுப்புச் சாப்பாடே சாப்பிடுவே வயசுப்பிள்ளை அதிலும் நீ பார்க்கும் உத்தியோகத்திற்கு நல்லா சாப்பிடணும். முன்னேயாவது குவாட்டர்ஸில் இருந்தே மெஸ் சாப்பாடுதான்னாலும் அக்கம் பக்கத்தில் உள்ளவங்க எல்லாம் தாயா பிள்ளையா பழகினாங்க..... இப்போ என்னடான்னா தனியா வீடு எடுத்திட்டே சாப்பாட்டு என்னடா பண்ணப்போறே?"
"அதெல்லாம் நான் மேனேஜ் பண்ணிப்பேன் அம்மா! நீங்க ரிலாக்ஸா இருங்க!"
"இல்லேண்ணா நா வேணுன்னா அங்கே வந்து தங்கியிருக்கட்டுமா?"
"வேணாம்மா! இங்கே இருக்கிறே காத்து, பொல்லியூஷன்ஸ் இதெல்லாம் உங்க உடம்பிற்கு ஒப்புக்காது. டாக்டர் சுத்தமான மலைக்காற்று வேணுன்னு சொன்னதால்தான் நீங்க கோயம்புத்தூர் எஸ்டேட்டிலேயே இருங்கன்னு சொன்னேன். நான் என்ன சின்னப்பையனா ?"
"எத்தனை வயசானாலும் தாய்க்குப்பிள்ளை குழந்தைதான்டா! எனக்கென்ன பத்தா பனிரெண்டா? நீ மட்டும் தானேடா?! சரி உடம்பை நல்லா பார்த்துக்கோ அங்கலாய்ப்போடு போனை வைத்துவிடுவார். ஒரே பிள்ளை கவனிக்க முடியவில்லையே என்ற எண்ணம். எத்தனையோ முறை இந்த உத்தியோகம் உனக்குத் தேவையா? என்றிருக்கார்!"
"இல்லேம்மா...!" உன் அளவிற்கு நான் இத்தொழிலை நேசிக்கிறேன். அது உங்களுக்கேத் தெரியுமேம்மா!" என்று கெஞ்சிக் கொஞ்சிய பிறகுதான் டிரான்ஸ்பருக்கே சம்மதித்தார். ஏனோ பழகிய ஊர் உறவுகள் மற்றும் அன்னையை விட்டு
முதலில் மனம் இடம் தரவில்லை என்றாலும், மனம் தனிமையைத்தான் எதிர்பார்த்தது.
அமைதி, தனிமை இவை இரண்டு மட்டுமே அப்போதைக்கு தனக்கு நிம்மதி தரும் என்பதை அவன் உணர்ந்தான். இங்கு வந்த சில வருடங்களில் முதலில் போலீஸ் குவாட்டர்ஸில் தங்கினான். தொழில் முறையில் எதையும்¨தைரியத்தோடு செய்து நேர்மையான குணமும் இவற்றாலும், மேன்மேலும் உயர்ந்தான். சக ஆபீஸர்களிடையே நன்மதிப்பைப் பெற்றுத் தந்ததோடு பிரமோசனும் வந்தது.
என்கெளண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்ற பெயரும் வந்தது. குவாட்டர்ஸிலும் எல்லோரும் அன்பாய் பழகிய போதும் யாரிடமும் அதிகம் ஒட்டாமலேயே இருந்தான் ஈஸ்வர். காலை உடற்பயிற்சி, தியானம் டிபன் ஆபீஸ் என்று வேலை எல்லாம் முடித்து
இரவு நேரம் முழுவதுமே அவனுடைய நேரம் அங்கு மட்டுமே அவன் மனம் விரும்பியபடி நடக்க முடியும். எல்லாருக்கும் கருப்பு பக்கங்கள் இருக்கும் இல்லையா?
நம்மில் அனைவருக்குமே ஏன் உலகிற்கு வெகு பரிச்சயமான செலிபரிட்டீஸ் இவர்களுக்கு கூட கருப்புப்பக்கங்கள் உண்டு. நம் அடிதட்டு மனதில் எத்தனையோ ஆசைகள் புதைந்திருக்கும். அவை அனைத்துமே நிறைவேறி இருக்காது. அப்படி
நிறைவேறாத நிகழ்களை மனிதன் தனிமையில் நிறைவேற்றிக் கொள்வான் .அல்லது அவை நிறைவேறுவதாய் கற்பனையாவது செய்வான். மனோதிட இயல்புப்படி, மனிதன் அது ஆணோ அல்லது பெண்ணோ வீட்டிலோ அல்லது தனக்கு தன் செயல்களுக்கு பாதுகாப்பான இடம் என்று உணரும் இடங்களில் தங்களின் உண்மை நினைவுகளை வெளிப்படுத்துவார்கள். ஆசைகளுக்கு அஸ்திவாரம் போடுவார்கள்.
(தொடரும்)