ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல்...!
சென்னை: கிருஷ்ண ஜெயந்தி.. சந்தோஷத் திருவிழா. வட இந்தியா என்றில்லை. தென்னிந்தியாவிலும் கிருஷ்ண ஜெயந்தி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
வட இந்தியாவைப் போலவே தென் இந்தியாவிலும் கிருஷ்ணர் பாதம் போடுவது முதல் உறியடி வரைக்கும் கோலாகலமாக களை கட்டியிருக்கும் கிருஷ்ணர் ஜெயந்தி கொண்டாட்டங்கள்.
கிருஷ்ணரின் பிறப்புதான் கிருஷ்ண ஜெயந்தி. ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என பல்வேறு பெயர்களில் இது அழைக்கப்படுகிறது. வாசுதேவர் - தேவகியின் 8வது பிள்ளைதான் ஸ்ரீகிருஷ்ணர்.
கிருஷ்ணரின் பிறப்பை பஜன்கள் பாடியும், பகவத் கீதையிலிருந்து ஸ்லோஹங்களைப் படித்தும் மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
வீடுகளை சுத்தம் செய்து, அதிகாலையில் எழுந்து குளித்து, வீடுகளின் வாசல் நிலைகளில் மாவிலைத் தோரணம் கட்டி, முறுக்கு, சீடை, அவல் பாயாசம், வெண்ணை ஆகியவற்றை தயாரித்து உண்டு பிறருக்கு வழங்கி, வீடுகளில் அரிசிக் கோலம், ரங்கோலி, கிருஷ்ணர் பாதம் வரைந்து, கிருஷ்ணர் படம் அல்லது சிலையை அலங்கரித்து, வணங்கி வழிபட்டு, கிருஷ்ணருக்குப் பூஜை செய்து மக்கள் கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடுகின்றனர்.
அருமையான இந்த நன்னாளில் அனைவருக்கும் பகவான் கிருஷ்ணரின் அருளும், ஆசியும் கிடைக்கட்டும்.
எழுத்து: சரண்யா மணிகண்டன்
புகைப்படம்: நலன் கிருத்திக்