பொங்கிய பாலில் தெளித்த தண்ணீர் போல..!
-எழுத்தாளர் லதா சரவணன்
எத்தனையோ வார்த்தைகள் நம்மிடம் புழங்குகிறது, ஆனால் சிலது நல்லவையாகவும் சிலது நமக்கே தீங்கு விளைவிப்பவனவாகவும், பொதுவாக ஆராய்ந்து பார்த்தாலே அந்த வார்த்தைகளின் வீரியம் நம்மை செதுக்குபவையாக இருக்கும். அதிகாலையில் இருந்து நல்ல மனநிலையோடு இருப்போம் அழகான உடையோடு வெளியே செல்லும் போது யாரோ ஒருத்தரின் இந்த உடை உனக்குப் பொருந்தவில்லை என்ற ஒற்றைச் சொல் நம்மை சிதைத்து விடும், வெகுஜன உலகில் வார்த்தைகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம் என்பது உண்மை.
பொங்கிய பாலில் தெளித்த தண்ணீர் போல சில வார்த்தைகள் நம்மை நிலைகுலைய செய்து விடும். அதே சமயம் ஒரு புன்னகைக்கு நம்மை அடியோடு மீட்டெடுக்கும் சக்தியுண்டு. ஒரு மருத்துவரின் புன்னகை நோயாளியின் பாதி நோயைக் குணப்படுத்திவிடும். ஒரு ஆசிரியரின் புன்னகை மாணவனை படிக்கத் தூண்டும். ஒரு குழந்தையின் புன்னகை நம் மனதில் நிலைக்கொண்டு இருக்கின்ற குழப்பத்தைப் போக்கும்,
ஆனால் நாம் இதையெல்லாம் செய்கிறோமோ என்றால் இல்லை, எந்தநேரத்தில் சிரிக்க வேண்டும். ஒருவரின் துன்பம் நம்மைச் சிரிக்க வைக்கும் எனில் அது எப்படி உண்மையான இன்பமாய் அமையும். நான்கு பேர் ஒன்றாக சென்று கொண்டு இருக்கிறார்கள். அதில் ஒருவன் தடுக்கி விழுந்து விடுகிறான் முதலில் நம்மில் இருந்து பிறப்பது சிரிப்புதான். அதன் பிறகுதான் கீழே விழுந்த அவனை தூக்க வேண்டும் என்ற சிந்தனையே நமக்கு உருவாகுகிறது. தட்டுத் தடுமாறி நடக்கும் குழந்தைக்கு அன்னை தரும் அன்பும், புன்னகையும் தானே அதை நடக்க ஊக்குவிக்கிறது.
கடவுளின் படைப்பில் புன்னகை என்பது மனிதர்களுக்கு மட்டுமே உகந்தது. சிரிக்கத் தெரிந்த விலங்கு மனிதன் மட்டும்தானே. இன்றைய வட்டத்தில் சினிமாவிலும் கூட சிரிப்பு என்பது சிலரை கிண்டல் செய்வது ஒருத்தரை ஒருத்தர் அடித்துக் கொள்ளுவது, இரட்டை அர்த்தத் தொனியில் பேசுவது என எல்லாமே ஏதோ ஒரு வகையில் யாரையோ கிண்டல் செய்வதைப் போலத்தான் இருக்கிறது.
நான் அன்றாடம் செய்யும் செயல்களையே எடுத்துக்கொள்ளுங்கள். வீட்டில் வேலை செய்யும் மனைவியாகட்டும், மகளாகட்டும், தாயாகட்டும், அலுவலகத்தில பணிபுரியும் சக ஊழியராகட்டும் யாரிடமும் உங்களுக்கான வேலைகள் முடிந்த பிறகு அல்லது சும்மாவோ ஒரு புன்னகையை சிந்திப்பாருங்கள் அது உங்களின் மேல் நல் மதிப்பை உண்டாக்கும். மாறாக சிலரைப் பார்த்திருப்போம், எதையும் எதிர்மறையாகவே புரிந்து கொள்ளும் சிலர், நாம் எப்படியோ நம் மனதை நல்ல நிலைக்கு கொண்டு வருவோம். சிலர் வேண்டுமென்றே அதை புதைப்பர். நலமா என்ற கேள்விக்கு ம்..என்ன குறை ? இந்தக் கட்டைக்கு நீயெல்லாம் பாரு எப்பவும் சிரிச்சிகிட்டே சந்தோஷமா இருக்கே என்னாலே அப்படி முடியுதா ? என்று நம்மையே எதிர்மறைக் கேள்வி கேட்பார்கள். இப்படி கேட்பவர்களிடம் நாம் சற்று ஜாக்கிரதையாகத்தான் இருக்கவேண்டும்.
நாம் கண்ணாடிகளாய் என்றுமே இருக்க முடியாது. நிழல் பிரதிபலிப்பின் வீரியம் நிஜத்தைக் கொன்று விடும். எதிர் மறையான எண்ணங்களைக் கொன்றுவிட்டு, எல்லாரும் எல்லாமுமாய் இருக்க வேண்டும். வசூல்ராஜா படத்தில் கமல் ப்ளோர் கிளீன் பண்ணும் ஒருவர் கோபமாய் பேசிக்கொண்டே இருக்கும்போது புன்னகையோடு அணைத்துக்கொள்வார். உடனே அவரின் கோபம் எல்லாம் பறந்து போகும்.
இத்தனை எழுத்துக்களும் செய்கைகளும் கற்றுத்தராததை, ஐந்து நிமிடங்களுக்கு முன்னால் சிறு தவறுக்காக குழந்தையை அடிக்கிறோம், அடுத்த சில விநாடிகளிலேயே அம்மா என்று நம்மிடம் வந்து நிற்கும் அதனிடம் கற்றுக்கொள்ளலாம் கோபத்தை மறைப்பதையும் புன்னகையை வளர்ப்பதையும். புன்னகையால் உலகை எதிர்கொள்வோம்.