செவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டாண்டா... !!!!
சென்னை: பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே.. இப்படி ஒரு பாட்டு இருக்கிறது சினிமாவில்.
கவிதைக்கு பொய் அழகு.. இது வைரமுத்து வரி...
பொய்மையும் வாய்மையுடைத்து ... இது வள்ளுவர் வாக்கு.
இப்படி பொய்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே போய் விட்டது. ஆனால் சிலர் சொல்கிற பொய்களைப் பார்க்க வேண்டுமே.. அடேங்கப்பா.. மெய்யாலுமே கலக்கி விடும்.. நிஜம் போலவே...
போரடிக்குதே.. எதையாவது தேடலாமே என்று கூகுள் சர்ச்சில் பொய் என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் அடித்துத் தேடியபோது அத்தனை 'ஸ்டோரிஸ்' கொட்டிக் கிடக்கிறது.. பொய்கள் குறித்து. உலகம் முழுவதும் எப்படியெல்லாம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்கள் என்று ஒரு லிஸ்ட்டே போட்டுள்ளனர். அதாவது உலகில் 52 வகையான பொய்களை சொல்கிறர்களாம்... அதிலிருந்து சிலவற்றைப் பார்ப்போம்...
மெயில் வரவே இல்லையே...
நீ அனுப்பிய மெயில் எனக்கு வரவே இல்லைப்பா.. ஒரு வேளை சர்வர் டவுனா இருக்குமோ.. இல்ல நெட் ஸ்லோவா இருக்குமோ என்னவோ.. என்னா மாதிரியான டகாய்ச்சி பொய் பாருங்க.
போன் செஞ்சியா.. எப்படா.. ரிங்கே அடிக்கலையே...??
இதுவும் ஒரு வகை பொய். போனை அட்டெண்ட் பண்ணாமல் விட்டதற்கு சிலர் சொல்லும் காரணம் - போன் ஒர்க் பண்ணலைப்பா, சிக்னல் கிடைக்கவி்லை... ரிங் வரலையே... எங்க மறுபடியும் பண்ணு.. இதுபோல.
உன்னைத் தவிர வேற யாரையும்
இதுவும் நிறையப் பேர் சொல்லும் பொய்யாம்.. அதாவது தனக்குப் பிடித்தமானவர்களிடம் அடிக்கடி சொல்லும் பொய்யும் கூடவாம்.. உன்னைத் தவிர வேறு யாரிடமும் நான் அதிகம் பேசுவதில்லை தெரியுமா... இப்படி நிறைய.
நீ என்னை தப்பா புரிஞ்சிட்டிருக்கே!
இது இன்னொரு பொய்.. அதாவது அவர்கள் செய்வதுதான் சரியாம்.. அவர்களைத்தான் மற்றவர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனராம்.
உனக்காகத்தான் செய்தேன் தெரியுமா...??
இதுவும் அடிக்கடி வாய்களில் புழங்கும் பொய் வார்த்தை.. உனக்காகத்தான் அதைச் செய்தேன்.. உனக்காகத்தான் இதைச் செய்கிறேன்... இப்படி....
நான் மத்தவங்க மாதிரி கிடையாது தெரியுமா...?
இதுவும் மெகா பொய்களில் ஒன்றாம். நான் மத்தவங்க மாதிரி கிடையாது தெரியுமா... என்பது மாதிரி நிறைய வார்த்தைகளைப் போட்டு அடுக்கி வண்டி வண்டியாக புழுகுவார்களாம்.
நான் பொய் சொன்னதே இல்லை தெரியுமா...?
இதுதாங்க உலக மகா பொய்யாம்.. உன்னிடம் நான் பொய்யே சொன்னதில்லை தெரியுமா... என்று ஒருவர் கூற ஆரம்பித்தாலே அவர் உங்கள் காதுகளில் பொய்ப் பூக்களை செம சுற்று சுற்றப் போகிறார் என்று அர்த்தமாம்.
மறுபடியும் பேசுகிறேன்...!
இதுவும் ஒரு உட்டாலக்கடி கிரிகிரி டைப் பொய்களில் ஒன்று.. சரி நான் அப்புறம் பேசுகிறேன் என்று உங்களது பேச்சைக் கட் செய்வார்கள்.. ஆனால் மறுபடியும் கூப்பிடவே மாட்டார்கள்.
நீ சொல்றதை மதிக்கிறேன்
இதுவும் அதிகம் புழங்கும் பொய்களில் ஒன்றாம்.. அதாவது நீ சொல்வதை மதிக்கிறேன். நீ சொல்வதை கேட்கிறேன் என்று ஒருவர் கூறினாலே பெரும்பாலும் அது பொய்யாகத்தான் இருக்குமாம்.
நண்பர்களாக இருப்போமே...!
இதுவும் செமத்தியான பொய்தான். நடந்தது நடந்து விட்டது.. இனிமேல் நாம் நல்ல நண்பர்களாக இருப்போம் என்று யாராச்சும் கூறினால் அதை நம்பவே நம்பாதீர்கள்.. காரணம், அது பெரிய சைஸ் பொய்யாக இருக்குமாம்.
உனக்காகத்தாண்டா நான் இருக்கேன்!
இதுவும் பெரிய்ய பொய்தானாம். உனக்காகத்தாண்டா நான் இருக்கிறேன்.. உன்னை அவ்வளவு நேசிக்கிறேன் என்று யாராவது கூற ஆரம்பித்தால் அது பொய்யாக இருக்குமாம்.
நான் அப்படி நினைக்கலையே...
நான் அந்த மாதிரியே நினைக்கலை.. நீயாக நினைத்துக் கொண்டால் எப்படி என்று யாராவது கூறினாலும் அது பொய் வார்த்தையாக இருக்குமாம்.. ஜாக்கிரதை.
சரி, சரி எனக்குத் தூக்கம் வருது
நாம் ஏதாவது சீரியஸாக பேசிக் கொண்டிருப்போம். அப்போது பார்த்து நம்மிடம் பேசிக் கொண்டிருப்பவர், சரி சரி எனக்கு தூக்கம் வருது, டயர்டா இருக்கு. அப்புறம் பேசலாமா என்று கட் செய்தால் அது பொய்யாக இருக்குமாம்.
ஓ.கே., ஓ.கே. இனிமேல் அப்படிச் செய்ய மாட்டேன்
இந்த வார்த்தையை யாராவது கூறினால் சத்தியமாக நம்பாதீர்கள். காரணம், இனி்மேல்தான் அதை அவர் மிகத் தீவிரமாக செய்யப் போகிறார் என்று அர்த்தமாம்.
நான் நல்லாருக்கேன்...
இதுவும் பொய் மொழிகளில் ஒன்றுதானாம்.
நான் பொய் சொல்லவே மாட்டேன்....
இதுதாங்க உலகத்திலேயே அல்டிமேட் பொய்யாம்.. இதுக்கு விளக்கமெல்லாம் தரத் தேவையே இல்லை...
உண்மை அழகானது...
உண்மைக்கும், பொய்க்கும் என்ன வித்தியாசம்.. ஏன் பலர் பொய்களையே வாழ்க்கையாக்கிக் கொள்கிறார்கள்.. உளவியலாளர்கள் சொல்வது என்னவென்றால், உண்மை அழகானது. பெருமையானது, பயப்படத் தேவையே இல்லாதது.. மறு பரிசீலனைக்கே இதில் இடமில்லை. காரணம் அது தூய்மையானது.
உண்மையை மதிக்க வேண்டும்
பிறந்த குழந்தையின் மனது எப்படி சுத்தமாக இருக்கிறதோ, அப்படித்தான் உண்மையும் பரிசுத்தமானது. குழந்தைகள் பொய் பேசாது என்று கூறுவதற்குக் கூட காரணம் இதுதான்.
உண்மை பேசுகிறவர்களை ஈசியாக ஏமாற்றலாம்
உண்மை பேசுகிறவர்கள்தான் உலகின் நம்பர் ஒன் ஏமாளிகளாகவும் இருக்கிறார்கள். இதுவும் கூட கசப்பான உண்மைதான். அதனால்தான் குழந்தைகளை நாம் எளிதில் ஏமாற்றி திசை திருப்ப முடிகிறதாம். அதேசமயம், வளர வளர மனிதனின் மனதுக்குள் பொய்கள் குடியேறத் தொடங்கி விடுகின்றன. இதற்குக் காரணம், தனது தேவைக்கேற்ப அவனது மனதும் மாறுவதே...
ஏன் பொய் சொல்கிறார்கள்...?
காரணம், அது உண்மையைச் சொல்வதை விட எளிதானது என்பதால்.. உண்மையாக இருந்தால், உண்மையைச் சொன்னால் பிரச்சினை வரும் என்பதால்தான் பலர் பொய் சொல்லித் தப்ப நினைக்கிறார்களாம். இது ஒரு வகை சுய கழிவிரக்கம் என்பது உளவியலாளர்களின் கருத்து.
சுயநலக்காரர்கள்
உளவியாளர்கள் சொல்லும் இன்னொரு கருத்து.. இப்படி பொய் சொல்கிறவர்கள் பெரும்பாலும் சுயநலமானவர்களாகவே இருப்பார்கள். சமூகம் குறித்தோ, பிறர் குறித்தோ அவர்களுக்கு உண்மையான அக்கறை இருக்காது. தம் வரைக்கும் எல்லாம் சரியாக இருந்தால் போதும் என்ற மனப்பான்மை கொண்டவர்களாக அவர்கள் இருப்பார்கள் என்கிறார்கள்.
ஒரு பொய் சொல்லப் போக பல பொய்கள்
ஒரு பொய் சொல்லி, அதை சரி செய்ய, மேலும் மேலும் பொய்களை அடுக்கி கடைசியில் பொய் என்னும் பள்ளத்தாக்கில் அவர்கள் வீழ்ந்து விடுகிறார்கள் என்று கூறுகிறார் சர் வால்ட்டர் ஸ்காட். இவர் ஒரு பிரபல உளவியலாளர். பொய் சொல்பவர்கள், அதிலிருந்து கடைசி வரை மீளாமலேயே போய் விடுகிறார்கள் என்பதும் ஸ்காட்டின் கூற்றாகும்.
வாழ்க்கை கசந்து போகும்
ஸ்காட் மேலும் கூறுகையில், பொய்கள் உங்களை மற்றவர்களிடமிருந்து பிரித்து தனிமைப்படுத்தி விடும். நீங்கள் சொல்லும் பொய்களே உங்களை குற்ற உணர்ச்சி மிக்கவர்களாக மாற்றி விடும். உங்கள் மீதே உங்களுக்கு ஒரு கட்டத்தில் வெறுப்பு வந்து விடும். உங்களது வாழ்க்கை நரகமாகி விடும். மாறாக உண்மைக்கு மாறும்போது மனசும் சரி, உடலும் சரி, பேச்சும் சரி சந்தோஷத்தில் பூரிப்படையும். பார்க்கும் எல்லாமே சந்தோஷமாக தெரியும்.. குறிப்பாக மனதுக்கு நிம்மதி கிடைக்கும். தைரியமாக தலை நிமிர்ந்து நடக்கும் தெம்பை உங்களுக்கு அது கொடுக்கும் என்கிறார்...
மன வியாதியாக மாறலாம்
ஸ்காட் இன்னொரு எச்சரிக்கையும் விடுக்கிறார். அதாவது பொய் சொல்லியே பழக்கப்பட்டவர்களுக்கு கடைசியில் அது ஒரு மன வியாதி போல மாறி விடுமாம்.
அப்ப பொய் சொல்லவே கூடாதா...??
ஸ்காட்டிடம் இதற்கும் பதில் உள்ளது. பொய் சொல்லாமல் இருக்க முடியுமா என்பதை விட நாம் சொல்லும் பொய்யின் தன்மை, இடம், அவசியம் ஆகியவற்றைப் பொறுத்தது அது. சில நல்ல விஷயங்களுக்காக பொய் சொல்லலாம். தப்பில்லைதான். ஆனால் தேவையில்லாமல் பொய் சொல்லப் பழகும்போது அது உங்களுக்கே எதிராக போய் விடும். எனவே முடிந்தவரை உண்மையாக இருக்கப் பாருங்கள்.. அதுதான் நல்லது என்கிறார் ஸ்காட்.