லாஸ்ஏஞ்சல்ஸ் ஹாலிவுட் தமிழ் பள்ளியில் அமெரிக்கா டூ ஆன்டிபட்டி
ஹாலிவுட் தமிழ் பள்ளியின் இரண்டாம் ஆண்டு விழா கடந்த ஞாயிறு அன்று மிகச்சிறப்பாக கலிபோர்னியா மாநிலம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளி மாணவர்கள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.
லாஸ்ஏஞ்சல்ஸ்: கலிபோர்னியா மாநிலம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட் தமிழ் பள்ளியின் இரண்டாம் ஆண்டு விழா கடந்த ஞாயிறன்று நடைபெற்றது.
இந்த விழாவில் பள்ளி மாணவர்கள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். இறுதி நிகழ்ச்சியாக அமெரிக்கா டூ ஆண்டிபட்டி எனும் நகைச்சுவை நாடகம் நடத்தப்பட்டது. இதில் குழந்தைகள் கலந்து கொண்டு தமிழ் மொழியின் பெருமை பற்றி விளக்கி கூறினர்.
பெற்றோர்களால் நடத்தப்படும் இப்பள்ளியில் குழந்தைகளுக்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ் மொழி கற்றுக்கொடுக்கப்படுகிறது. இப்பள்ளியின் இரண்டாமாண்டு விழா மிகவும் சிறப்பாக குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை பெற்றோர்கள் தொடங்கி வைத்தனர், அதன்பின் அனைத்து குழந்தைகளும் தமிழ்த்தாய் வாழ்த்து பாட நிகழ்ச்சி இனிதே ஆரம்பமானது.
முதலில் குழந்தைகளின் நடன நிகழ்ச்சியும், பரதநாட்டியமும், பாடலும் நடந்தேறியது. அதைத் தொடர்ந்து வள்ளுவர் வழி எனும் நாடகத்தை குழந்தைகள் நடத்திக் காட்டினார். இந்நாடகத்தின் மூலம் தற்கால விவசாயிகளின் நிலைமை, அரசியல் நிலைமை முதலியவற்றை மேடையில் குழந்தைகள் பிரதிபலித்தனர். வள்ளுவர் தோன்றி விவசாயிகளின் பெருமையை எடுத்து உரைப்பது போல் இந்நாடகம் அமைந்திருந்தது.
அதன் பிறகு குழந்தைகளின் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் நடந்தேறியது. இறுதி நிகழ்ச்சியாக அமெரிக்கா டூ ஆண்டிபட்டி எனும் நகைச்சுவை நாடகம் நடத்தப்பட்டது. இதில் குழந்தைகள் கலந்து கொண்டு தமிழ் மொழியின் பெருமை பற்றி விளக்கி கூறினர். தமிழை தவறாமல் படிக்கவும் தப்பில்லாமல் பேசவும் வலியுறுத்தி இந்த நாடகம் நிகழ்த்திக் காட்டப்பட்டது. அமெரிக்காவிலிருந்து கோடை விடுமுறைக்கு தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் பேரன் பேத்தி தங்களது தாத்தா பாட்டியுடன் ஆங்கிலம் கலந்த தமிழில் உரையாடுவதை நகைச்சுவையுடன் கூறியிருந்தனர்.
அதன் பிறகு இப்பள்ளியின் ஆசிரியர் ஆசிரியைகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. அதன்பிறகு இப் பள்ளியில் படித்த குழந்தைகளுக்கு சான்றிதழ்களும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியாக நன்றியுரை கூறி நிறைவுற்றது. விழா ஏற்பாட்டை இப்பள்ளியின் நிர்வாகிகளும், ஆசிரியர்களும், பெற்றோர்களும், தன்னார்வலத் தொண்டர்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். அனைவரின் உதவியுடன் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. பள்ளியின் பணிகள் மென்மேலும் சிறக்க, இப்பணி பல ஆண்டுகள் தொடர வாழ்த்தி வணங்குகிறோம்.