மகத்துவம் நிறைந்த மார்கழி மலர்ந்தது... தீருமா பணப்பஞ்சம்
கார்த்திகை முடிந்து மார்கழியும் வந்துவிட்டது. குருவின் வீட்டை சூரியனும் அடைந்துவிட்டார். கடந்த கால ரணங்களும் ஆறும், தீர்வு கிடைக்கும் என்று ஆறுதல் கூறியுள்ளனர் ஜோதிடர்கள்.
சென்னை: மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்' என்று கிருஷ்ண பரமாத்மாவால் முன்மொழியப்பட்ட மாதம் மார்கழி. வாழ்வின் சின்னச் சின்னச் செயல்களிலும் கடவுளைச் சென்றடைவதற்கான வழியும் இணைந்தே இருக்கிறது என்பதை மார்கழி மாதம் உணர்த்திவிடும். மார்கழி மாதத்தின் மகத்துவம் பற்றி ஜோதிடர் அஸ்ட்ரோ சுந்தரராஜன் கூறியுள்ளதை படியுங்கள்.
கார்த்திகை மாதத்தை "விருச்சிக மாதம்" என கூறுவார்கள். விருச்சிக மாதத்தில் சூரியன் விருச்சிக ராசியில் பயணம் செய்வார். விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய்.
ஜோதிடத்தில் விருச்சிக ராசியை கால புருஷனுக்கு எட்டாம் வீடு என கூறுவார்கள். நீர் ராசி. அதை விஷ ஜந்துக்கள் வாழும் ஆழ்கடலென்றும் கூறுவார்கள்.
அந்த விருச்சிக ராசியை ஒவ்வோரு கிரகமும் கடக்கும்போது தன் இயல்புநிலை மாறிதான் செயல்படுகின்றன. அப்பப்பா! இந்த வருடம் கார்த்திகை மாதத்தில் கிரகங்கள் விருச்சிக ராசியை கடக்கும்போது நமக்கு எத்தனை எத்தனை பிரச்சனைகள்?
இந்த வருட ஆரம்பத்திலிருந்தே சனி விருச்சிகத்தில்தான் பயணம் செய்கிறார்.
கார்த்திகை மாதம் பிறப்பதற்க்கு ஒருவாரம் முன்பு வரை அதாவது நவம்பர் 7, 2016 வரை சுக்கிரன் விருச்சிகத்தில் பயணம் செய்து சரியாக 8 -11 - 2016 அன்று தப்பித்தோம் பிழைத்தோம் என தனுசு ராசிக்கு சென்றுவிட்டார். போகிற போக்கில் ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகளை செல்லாமல் செய்து அனைவருக்கும் பணப்பிரச்சனையை உருவாக்கி சென்றுவிட்டார்.
அவரை தொடர்ந்து வந்த புத பகவான் 9-11-2016 முதல் விருச்சிகத்தில் பயணம் செய்து பணப்பிரச்சனையோடு வியாபாரத்தையெல்லாம் முடக்கி வைத்துவிட்டார். கார்த்திகை 1ம் தேதியிலிருந்து நீச வீட்டை விட்டு சூரியனும் விருச்சிகத்தில் ஏற்கனவே இருக்கும் சனியோடும் புதனோடும் சேர்ந்துக்கொண்டார்.
பணமுமில்லாமல் வியாபாரமும் இல்லாமல் வங்கி வாசலில் மக்கள் தன்னம்பிக்கை இழந்து தவம் கிடக்க ஆரம்பித்தார்கள்.
இதற்கு நடுவில் சந்திரனும் 29-11-16 மற்றும் 30-11-2016
தேதிகளில் விருச்சிகத்தில் பயணம் செய்து நீசமாகி ஒரு சிறு மழையை ஏற்படுத்தி 'நாடா' வருமா வராதா என கலங்க வைத்து சென்றுவிட்டார்.
இது போதாதென்று 5-12-2016ல் அரசியல் பிரபலத்தின் இறப்பு செய்தி வேறு. அந்த காயம் ஆறும் முன்பே பரிவர்தனை பெற்ற செவ்வாயும் சனியும் "வர்தா" எனும் புயலாக கோர தாண்டவம் ஆடிவிட்டனர்.
ஒருவழியாக கார்த்திகை முடிந்து மார்கழியும் வந்துவிட்டது. குருவின் வீட்டை சூரியனும் அடைந்துவிட்டார்.
சரி! இவ்வளவு ரணங்களும் எப்படி ஆறுவது? இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் எப்படி தீர்வு கிட்டும்?
எந்த ஒரு காயத்திற்கும் ஆற சிறிது காலம் ஆகுமல்லவா? இந்த ஒரு மாதகாலம் சூரியன் குருவின் வீட்டில் இருந்து தன்னனையும் பலப்படுத்திக்கொண்டு உலகையும் பலப்படுத்த போகிறார். இந்த காயங்களும் வலிகளும் மறைய நமக்கு சுக்கிர பகவானின் ஆசி (காசு, பணம், மகிழ்ச்சி, குதுகலம், நிம்மதி போன்றவை) தேவைபடுகிறது.
மகாலட்சுமி அவதாரம்
சுக்கிரனின் அதிதேவதையான மகாலக்ஷமியே மனித அவதாரம் எடுத்து பெரியாழ்வாரின் மகளாக அவதரித்து பாவை நோன்பு நூற்று சுக்கிரஸ்தல நாயகனாகிய ஸ்ரீ ரங்கமன்னாரை கணவனாக அடைந்திருக்கும்போது சாமானியர்களான நாமெல்லாம் எம்மாத்திரம்?
மார்கழியின் மகத்துவம்
நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தை மாதம் தொடங்கி ஆனி வரை அவர்களுக்குப் பகல் பொழுதாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி வரை இரவுப்பொழுதாகவும் அமையும். அப்படிப் பார்க்கும்போது அதிகாலையான பிரம்ம முகூர்த்தம் மார்கழியில்தான் வருகிறது. தேவர்களுக்கே பிரம்ம முகூர்த்தமாக இருக்கிறபடியால், மார்கழி மாதம் மானிடர்களுக்கும் சிறந்ததாகிறது. அந்த மாதத்தில் உலக நாட்டங்களைக் குறைத்து, இறைவனிடமும் அவர் திருவடி சார்ந்த செயல்பாடுகளிலுமே மனம் ஒன்ற வேண்டும் என்பதற்காகத்தான் வேறெந்த நிகழ்வுகளையும் நடக்காமல் பார்த்துக் கொண்டார்கள். அதன் வழியொட்டியே மார்கழியில் சுப நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதே நேரம் இறைவனிடம் மனம் ஒன்ற வேண்டும் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.
மார்கழி கோலங்கள்
அதிகாலையில் எழுந்து நீராடி, வாசலில் கோலமிடுவது தொன்றுதொட்டு நடந்துவருகிறது. மாட்டுச்சாணத்தில் பிள்ளையார் பிடித்துவைத்து வழிபடுவதும் நடக்கும். மாட்டுச்சாண உருண்டையில் பூசணிப்பூவை செருகி, கோலத்துக்கு நடுவே வைப்பது மார்கழி முழுக்கவே நடைபெறும். சில வீடுகளில் அந்தப் பூ உருண்டையை வரட்டியாகத் தட்டுவார்கள். வரட்டிகளாக தட்டியதை சேகரித்து சிறுவீட்டு பொங்கலன்று ஆற்றில் விடுவார்கள்.
உடலுக்கு புத்துணர்ச்சி
மார்கழியில் அதிகாலை துயிலெழுவதும், வாசல் தெளிப்பதும் மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் புத்துணர்ச்சி தரும். சூரியனிடம் இருந்து வருகிற ஓசோனின் தாக்கம் மார்கழி அதிகாலையில் நல்லவண்ணமாய் இருக்கும். அதிகாலையில் வெளியே வருவதால் அந்தக் காற்றும், கதிரும் உடலை வன்மைப்படுத்தும்.
சிவனுக்கு ஆருத்ரா தரிசனம்
மார்கழி மாதத்தில்தான் சிவனுக்கு உகந்த திருவாதிரையும் வருகிறது. சிவபெருமானின் பக்தைகள் நோன்பு நோற்பதற்காகத் தோழியை எழுப்பச் செல்லும் காட்சி திருவெம்பாவையிலும் வருகிறது. சிவனுடைய அடியார்களே கணவனாக வர வேண்டும், அவனோடு சேர்ந்து சிவனைத் தொழ வேண்டும் என்பதே திருவெம்பாவையில் வருகிற பாவை நோன்பின் நோக்கம்.
வைகுண்ட ஏகாதசி
அனுமன் ஜெயந்தி வருவதும் வைகுண்ட ஏகாதசி வருவதும் கூட மார்கழியிலுதான். அவ்வளவு ஏன்? கேதுவின் ஆதிக்கம் பெற்ற புனிதர் ஏசுபிரான் பிறந்ததும் மார்கழியில்தான். இவ்வளவு சிறப்புவாய்ந்த மார்கழியில் விடியற்காலம் விஷ்ணுசகஸ்ரநாமம் படிப்பது மற்றும் திருப்பாவை 30 பாடல்களையும் படித்துவந்தால் வரும் புத்தாண்டு மற்றும் பொங்கல் அனைவருக்கும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்குமென்பதில் துளியும் சந்தேகமில்லை.