திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 10 #Margazhi,#Thiruppaavai
திருப்பாவை - 10
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்:
ஒவ்வொரு தோழியாக எழுப்பிக் கொண்டு வருகையில் நந்தகி என்ற தோழியின் வீடு அடுத்து வருகிறது. அவளும் உள்ளே உறங்கிக்கொண்டிருக்கிறாள். அத்தோடு கதவும் அடைத்திருக்கிறது. அவளை வெளியிலிருந்தே அழைக்கின்றாள் ஆண்டாள்.
முற்பிறவியில் எம்பெருமான் நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக்கின்ற பெண்ணே! உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான்.
சொர்க்கம் என்பதற்குப் பொருள் நல்ல சுற்றம். அதாவது நல்லவர்களே நம்மைச் சுற்றியிருக்கும் நிலை. அது இறப்புக்குப் பின் கிடைக்கும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒன்று அறியமாட்டார்கள். நான் செய்யும் நோன்புகளின் பலன் இன்பம். நோன்புகள் மட்டுமல்ல நாம் செய்யும் சேவைகளின் பலனும் இன்பம். அந்த இன்பநிலையை எய்தினால் நாம் இருக்கும் இடமே சுவர்க்கமாகும்.
முன்னொரு காலத்தில், கும்பகர்ணன் என்பவனை தூக்கத்திற்கு உதாரணமாகச் சொல்வார்கள். உன் தூக்கத்தைப் பார்த்தால், நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது. தீராத சோம்பல் உடையவளே! பொற்கலம் போல் ஒளிர்கின்றவளே! எழுந்து தெளிவுடன் வந்து கதவைத் திறந்து நான் சொல்வதைக் கேட்பாய் எம் பாவையே என்று ஆண்டாள் அழைக்கிறாள்.
திருவெம்பாவை - 10
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்.
பாடல் விளக்கம்:
இறைவன் சிவபெருமான் அடி முடி அறிய முடியாதவன். வானுக்கும் பூமிக்குமாய் உயர்ந்து நின்றவன். அவனது திருவடிக் கமலங்கள், கீழ் உலகம் ஏழுக்கும் கீழாய், சொல்லுக்கு அளவு படாதவையாய் இருக்கும்; மலர்களால் அழகு செய்யப்பட்ட அவனது திருமுடியும், மேலுள்ள உலகங்கள் அனைத்திற்கும் மேலானதாய் முடிவிடமாய் இருக்கிறது.
உமையை ஒருபாகத்தில் கொண்ட இறைவன் ஒரேவகையானவன் அல்லன்; அவன் எல்லாமும் ஆனதால் ஒருவனேயும் அல்லன்.
வேதங்களும் வானவரும் மானுடரும் துதித்த போதும் அவன் புகழ் வற்றாதது; அவனோ இணையற்ற உயிர்த்தோழன். அவனுக்கு அடியாரோ கணக்கற்றவர். அத்தகைய குற்றமற்ற குலத்தவனான அரனின் கோவிலைச் சார்ந்த பெண்பிள்ளைகளே! அவனது ஊர் எந்த ஊர்! எதை அவனது பெயர் என்று கூறுவது? அவனுக்கு யார் உறவினர், யார் அயலவர். அவனை என்னவென்று சொல்லிப் பாடுவது!' என்று சிவபெருமானின் பெருமைகளைப் போற்றிக் கூறுகின்றனர் தோழியர்.