சிட்னியில் மாசி மக உற்சவம்... உற்சாக கொண்டாட்டம்
சிட்னி: இந்துக்களின் மிக முக்கிய பண்டிகையான மாசி மக உற்சவம் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
மாசிமகம் இந்தியாவில் மட்டுமல்லாது... வெளிநாடுகளிலும் தற்போது சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிட்னி மாநகருக்கு அருகில் இருக்கும் மேஸ்ஹில்ஸ் எனும் இடத்தில் உள்ள முருகன் கோவிலில் மாசி மக உற்சவம் கடந்த 15ம் தேதி சனிக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பு பூஜைகள்
மாசி மகத்தை ஒட்டி முருகப் பெருமானுக்கு காலை 7:00 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 2 ஆம் காலசந்திப் பூசை முற்பகல் 10:00 மணிக்கு நடைபெற்றது.
உற்சவர்களுக்கு அபிஷேகம்
இதனைத் தொடர்ந்து 10:30 மணிக்கு உற்சவ மூர்த்திகளான சிவன், அம்மனுக்கு அபிசேகம் இடம்பெற்று பிற்பகல் 12:00 மணி உச்சிகாலப் பூசையுடன் பகல் திருவிழா நிறைவு பெற்றது.
சிவன் அபிஷேகம்
மாலை 4:30 மணிக்கு சாயரட்சை பூசையினைத் தொடர்ந்து 4:45 மணிக்கு சிவன், அம்மனுக்கான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மீனாட்சி திருக்கல்யாணம்
இதனைத் தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு தொடங்கிய பூசையினைத் தொடர்ந்து 6:15 மணிக்கு சோமசுந்தர பெருமானுக்கும் மீனாட்சி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் வீதி உலா
தொடர்ந்து இரவு 7:45 மணிக்கு சோமசுந்தரப் பெருமானும் மீனாட்சி அம்மனும் தவில் நாதஸ்வர மங்கல இசையுடன் உள்வீதி மற்றும் வெளிவீதி எழுந்தருளி வந்தனர்.
கொட்டும் மழையிலும் பக்தர்கள்
இரவு 8:30 மணிக்கு இடம்பெற்ற அர்த்த சாமப்பூசையுடன் மாசி மக உற்சவம் இனிதே நிறைவு பெற்றது. சிட்னியில் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழைக்கும் மத்தியிலும் 600-க்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.