ஷார்ஜாவில் ஸ்டாலின்: சர்வதேச புத்தக விழாவில் பங்கேற்கிறார்
ஷார்ஜா: ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்ள ஸ்டாலின் அங்கு சென்றுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகங்கள், ஷார்ஜா அரசாங்கம் தொடர்ந்து 36 ஆண்டுகளாக மிகப்பெரும் புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகின்றன. இதில் உலகம் முழுவதிலும் இருந்து அரசியல் தலைவர்கள், அனைத்து மொழிகளைச் சார்ந்த எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளிகள் ஷார்ஜா அரசின் விருந்தினர்களாக பங்கேற்றிருக்கின்றனர்.
இந்த ஆண்டுக்கான கண்காட்சி இன்று துவங்கி 11 நாட்கள் நடக்கிறது. இதில் தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினை சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு ஷார்ஜா அரசு அழைப்பு விடுத்திருந்தது.
இந்த அழைப்பை ஏற்று ஸ்டாலின் சென்னையில் இருந்து ஷார்ஜா கிளம்பிச் சென்றார். நிகழ்ச்சியில் உரையாற்றும் அவர் தன் சார்பில் ஆயிரம் தமிழ் புத்தகங்களை ஷார்ஜா புத்தக ஆணையத்திற்கு பரிசாக அளிக்கிறார்.
முன்னதாக கடந்த 2013ம் ஆண்டு நடந்த புத்தக விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.