வயதேது இந்த மூன்றெழுத்துக்கு!.. #அன்னையர்தினம்
உலக அன்னையர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை: உலக அன்னையர் தினம் இன்று!
அம்மா!
எல்லை ஏது? ஈடு ஏது?
வரம்பு ஏது? வயதேது?
இந்த மூன்றெழுத்துக்கு!
பல யுகங்களானாலும்
களங்கமே அடையாத
வலிமை சொல்!
உலக உறவுகளை
அறிமுகப்படுத்திய
முதல் உறவு அது!
வாழ்நாளெல்லாம்
மனதில் மையம்
கொண்ட இன்ப புயல்!
எச்சிலோடு கொடுத்த
கன்னத்தின் ஈர முத்தம்
சிலிர்ப்பின் ஊற்று!
காட்டிய பரிவும்
புகட்டிய தாய்ப்பாலும்
ஒரே தரமன்றோ!
ஊட்டும் கவள சோற்றின்
ருசிக்கு மட்டும்.. இதுவரை
விடை கிடைக்கவில்லை!
பிசைந்து வைத்த மிச்சம்
சோறும் அமுதமாகும்
அவளுக்கு மட்டும்!
கிறுக்கல்கள்கூட
காவியமாகும்
அவளுக்கு மட்டும்!
துன்பகுவியல் மறைந்தே
போகும் அவள்
அணைப்பில் மட்டும்!
அளவில்லாத தவறுகளை
அளவின்றி மன்னிக்கும்
அண்ட சராசரம்!
மனித மனங்களில்
என்றுமே கழன்றுவிடாத
மாண்பின் சிகரம்!
உணர்வும் ஊக்கமும்
ஒருசேர அளிக்கும்
சமநிலைவாதி!
கற்றதிலும் கண்டதிலும்
பட்டதிலும் படித்ததிலும்
கலந்து கரைந்து போவாள்!
இன்னலும் தெறித்து
ஓடும்-தெய்வத்தின்
மாதிரியை கண்டு!
உலகின் தலைசிறந்த
தியாகி தன்னலமற்ற
ஈடில்லா அன்னையே!
முழம் போட்டு அளக்க
முடியாத அன்பை
கொட்டி திணறடிப்பவள்!
உலக உருண்டையில்
கலந்துவிட்ட தாய்மையே
வியப்பின் உச்சம்!
"அன்னையர் தினம்"
நாள் ஒன்று போதுமா?
இதயம் துடிக்க
ஒருநாள் போதுமா?