மஸ்கட் வாழ் தமிழர்கள் பங்கேற்ற 'சகலகலா குடும்பம்'
மஸ்கட்: மஸ்கட் வாழ் தமிழ்க் குடும்பங்களின் உறவுப் பிணைப்பாக இருக்கும் மஸ்கட் தமிழ்ச் சங்கம் 'சகலகலாக் குடும்பம்' என்னும் ஒரு பல்திறன் போட்டியை நடத்தியது. இந்நிகழ்ச்சி இந்தியன் ஸ்கூல் மஸ்கட் வளாகத்தில் மாலை 6 மணிக்குத் தொடங்கியது.
போட்டி விதிகளாக குடும்ப அங்கத்தினர்கள் மற்றும் கண்டிப்பாக ஒரு குழந்தை பங்கேற்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு குடும்பத்திலிருந்து மூன்று நபர்களும் மற்றும் அதிக பட்சமாக நான்கு நபர்களும் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைக்கப்பட்டிருந்தது.
நகைச்சுவை, நடனம், நாடகம், பல்குரல் வித்தை, இசை, பாடல், தந்திர விளையாட்டு மற்றும் பார்த்ததில் ரசித்தது எனும் திரைப்பட காட்சி படைப்பு என இவற்றுள் ஏதாவது மூன்றை எடுத்து மேடையில் திறன்வெளிப்படுத்தல் இதன் முக்கிய நோக்கமாகும். புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்ற பின் நடக்கும் முதல் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மஸ்கட் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் திருமதி. விஜயலட்சுமி மற்றும் திரு. மணிகண்டன் ஆகியோர் பொறுப்பேற்று நடத்த, சங்க வழிகாட்டி முன்னாள் தலைவர் திரு.ஜானகி ராமன் ஆலோசனையின் பேரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் நடுவராக பிரபல நாடக நடிகர் பீலிசிவம் அவர்களும், நாட்டிய ஆசிரியை பத்மினியும் கலந்து கொண்டார்கள்.
சுமார் மூன்று மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மஸ்கட் வாழ் தமிழ்குடும்பங்கள் அனைவரும் திரளாகப் பங்கேற்றனர். முடிவில் வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
சங்கத்தின் புதிய உறுப்பினர்களை முன்னாள் தலைவர் திரு. ஜானகிராமன் அறிமுகம் செய்து வைக்க, சங்கத்தின் இலக்கிய அணிச் செயலாளர் திருமதி. விசாலம் சுவாமிநாதன் நன்றி கூற விழா இனிதே முடிந்தது.
சங்கத்தின் அடுத்த நிகழ்ச்சியாக, பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளக் கூடிய 'பூவையர் பூங்கா' எனும் நிகழ்ச்சி நாளை(ஜூன் 5ம் தேதி) நடக்கிறது. அந்நிகழ்ச்சியில் திரைப்பட நடிகை நளினி மற்றும் மார்பக புற்று நோய் நிபுணர் மருத்துவர் சுமனா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.