இயல் இசை நாடகம்... மினசோட்டா தமிழ் சங்கம் இணையம் வழியாக நடத்திய முத்தமிழ் விழா
மினசோட்டா தமிழ்ச் சங்கம் சார்பில் இணையம் வழியாக முத்தமிழ் விழா நடைபெற்றது.
மினசோட்டா: வட அமெரிக்காவில் உள்ள மினசோட்டா தமிழ்ச் சங்கம், கடந்த நவம்பர் 8 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை முதல் முறையாக இணையம் வழியாக முத்தமிழ் விழாவினை சிறப்பாகக் கொண்டாடியது. இவ்விழா இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும் முன்னிறுத்திய விழாவாக நடைபெற்றது.
மினசோட்டா தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்களுக்காக நடத்தும், முக்கிய விழாக்களில் ஒன்றான முத்தமிழ் விழாவை பெரும்பாலான உறுப்பினர்கள் இணையத்தில் கண்டு மகிழ்ந்ததையும், பின்னூட்டமாக வழங்கினர்.
இயல் - பட்டிமன்றம்
"இன்றைய கொரோனா சூழ்நிலை நமக்கு நன்மையா? தீமையா ?" என்ற தலைப்பில் கலைமாமணி, பேராசிரியர், முனைவர் - கு.ஞானசம்பந்தன் நடுவராக பங்கேற்று நடத்திய பட்டிமன்றம் அனைவரும் இரசிக்கும்படியாகவும் நகைச்சுவையாகவும் இன்றைய சூழலுக்கு தகுந்த கருத்தை தெரிவித்த விதமாக சிறப்பாகவும் இருந்தது.
தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் இரு அணிகளாக பங்கு கொண்ட பெரும்பாலானோர் முதல் முறையாக பட்டிமன்றத்தில் பேசினாலும், திறமையாக கருத்தை எடுத்து வைத்தனர், மிகச் சிறப்பாக பட்டிமன்றத்தை ஒருங்கிணைத்த திருமதி.பிரியா கிருஷ்ணன், திருமதி.இராணி செபஸ்ட்டின், திரு.செந்தில்குமார் கலியபெருமாள் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இசை
தமிழிசை - முனைவர் திரு.மாம்பலம் ராமச்சந்திரன், கலைமணி அடையார் திரு.சிலம்பரசன் அவர்கள் வழங்கிய செவ்விசை மற்றும் தமிழிசை உள்ளத்தை உருக்கும் விதமாகவும், "தமிழே உயரே வணக்கம்" என்ற ஈழத்து கவிஞர் காசி ஆனந்தன் ஐயா அவர்களின் பாடலும் "செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே" - என்ற பாரதியாரின் அருமையான பாடலும் மெய்சிலிர்க்க வைத்தது. ஒருங்கிணைத்த திரு.செந்தில் குமார் கலியபெருமாள் மற்றும் காணொளியை எடுத்து உதவிய திரு.ராஜிவ் பாலசுப்ரமணியன் அவர்களுக்கு விழா குழுவினர் நன்றி தெரிவித்தனர்.
மக்களிசை
நமது வாழ்வியலோடு ஒன்றி நமது இன்ப துன்பங்கள் அனைத்திலும் நம்மோடு இணைந்து பயணிக்கும் மக்களிசை என்றால் மாற்றுக்கருத்தில்லை, அதை எடுத்துரைக்கும் விதமாக தஞ்சை மாரிமுத்து அவர்களின் மக்களிசை குழு வழங்கிய மக்களிசை நிகழ்ச்சி மிக அருமையாக இருந்தது. குழுவில் தஞ்சை மாரிமுத்து நாயனம் வாசித்தார். இரங்கராஜன் பேச்சிமுத்து தவில் வாசிக்க விழா களைகட்டியது. நாகராசு கருப்பையா பறையிசைத்தார். பாடகர் கண்ணாம்பூச்சி பாஸ்கர் திருமதி. பாடகி பரிமளா விற்கு விழா குழுவினர் நன்றி தெரிவித்தனர். இந்த மக்களிசைக்கு சிறப்பாக முன்னுரை வழங்கிய திரு.சிவானந்தம் மாரியப்பன் அவர்களுக்கு மிக்க நன்றி.
நாடகம்
முரசு கலைக்குழு, தமிழ்நாடு வழங்கிய "பூமியின் நாதம்" நவீன நாடகம் குழந்தைகளும், பெரியவர்களும் மேடையில் தோன்றி நடித்ததுடன், ஆடிப்பாடியது சிறப்பாக இருந்தது.. அழகாக தமிழ் வார்த்தை உச்சரிப்புடன் வலுவான கருத்தை முன்னிறுத்தியது அனைவரும் இரசிக்கும் படி இருந்தது. நாடகத்தை வடிவமைத்த அனைவருக்கும், நடித்தவர்களுக்கும் இந்த நாடகத்திற்கு சிறப்பாக முன்னுரை வழங்கிய பள்ளி இயக்குனர் பாலமுருகன் இராமசாமிக்கும் விழா குழுவினர் நன்றி தெரிவித்தனர்.
இணையம் வழியாக ஒளிபரப்பு
நமது வழக்கமான தமிழ்ச் சங்க விழாவினை, முதல் முறையாக தற்போதைய சூழலுக்கு தகுந்தாற்போல் இணையம் வழியாக, எந்தவித தடங்கலும் இல்லாமல் நடத்த உதவிய திரு.தமிழ்க்கதிர், திரு.இராம் சின்னத்துரை, திரு.செந்தில்குமார் அவர்களுக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த திருமதி.இராணி செபாஸ்டின் அவர்களுக்கும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய திருமதி. இலட்சுமி சுப்ரமணியன், மினசோட்டாத் தமிழ்ச் சங்க கல்வி ஊக்கத்தொகை குறித்து பேசிய மருத்துவர் ஆறுமுகம் ஐயா, நமது தமிழ்ப் பள்ளி குறித்தும் அதன் சாதனைகள் குறித்தும் பேசிய திரு.பாலமுருகன் இராமசாமி , நன்றியுரை வழங்கிய திரு.முருகையன் சுப்ரமணியனுக்கும் விழா குழுவினர் நன்றி தெரிவித்தனர்.