மஸ்கட்டில் சிறப்பாக நடந்த நவராத்திரிசிறப்பு நிகழ்ச்சி
மஸ்கட்: மஸ்கட்டில் உள்ள கிருஷ்ணன் கோவில் அரங்கத்தில் கடந்த 10ம் தேதி நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மஸ்கட் கிருஷ்ணன் கோவில் அரங்கத்தில் நவராத்திரியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை, லலிதா சஹஸ்ரநாம லட்சார்ச்சனை ஆகியவை இனிதே நடந்தேறியது.
காலையில் மஸ்கட்டின் பூசாரி திரு. ஹரிஹராத்மாஜன் விநாயகர் பூஜையை செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைக்க,சென்னை ஆழ்வார்பேட்டை எல்லையம்மன் ஆலய சிவாச்சாரியார் திரு. பால கணபதி அவர்கள் துர்கா லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்ரம் லலித சஹஸ்ரநாம அர்ச்சனை ஆராதனை மற்றும் திருவிளக்கு போற்றி ஓதி 108 திருவிளக்கு பூஜையை செய்வித்தார்.
கும்பத்தில் மகாலக்ஷ்மியாகவும் கன்னிகா பரமேஸ்வரி கீழே அமர்ந்திருக்க சமயபுர அம்மனாக அலங்கரிக்கபட்ட அம்மனை காணும் போது இது சமயபுரமோ என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்தது. இதில் 108 பெண்களும் ஒரே போல உடை உடுத்தி பூஜை செய்தது அங்கு நிறைந்த சமத்துவத்தை வெளிப்படுத்தியது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
அன்று மாலை இறை இசை தென்றல், கலைமாமணி டாக்டர் திரு. வீரமணி ராஜு அவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பிரபோ கணபதி என்று ஆரம்பித்து பழனி ஆண்டவர், இருமுடி தாங்கி, ரக்ஷ ரக்ஷ, மருதமலை மாமணி, குறையொன்றும் போன்ற ஜனரஞ்சக ஆன்மிக பாடல்களை பாடி மக்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தினார். அவர் பாடிய மானளக்கும் தாயே, கருப்பன் வரான், எங்கே மணக்குது போன்ற பாடல்களை கேட்டு பக்தர்கள் பலர் அருள் வந்து ஆடினார்.
திரு. வீரமணி ராஜு குழுவினருக்கு மஸ்கட்டின் பிரபல தொழிலதிபர் திரு கே.ஆர்.எஸ். ராஜா அவர்கள் மற்றும் விழா அமைப்பாளர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்க அன்றைய நிகழ்ச்சிகள் இனிதே நிறைவடைந்தது.
இந்த பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் பலர் இதை பெரும் பாக்கியமாக கருதுவதாக தெரிவித்தனர். மேலும் பலர் அடுத்த ஆண்டும் இது போன்று நிகழ்ச்சிநடத்தவும் அதில் கலந்துகொள்ளவும் விருப்பம் தெரிவித்தனர்.