வெளிநாட்டு வாழ்க்கை..சுகமா? சோகமா?: மஸ்கட்டில் 'நீயா நானா' கோபிநாத்தின் சூடான விவாதம்
மஸ்கட்: விஜய் டிவியின் ‘நீயா நானா'புகழ் கோபிநாத் அவர்களின் ‘நேருக்கு நேர்'நிகழ்ச்சி மஸ்கட், அல்பலாஜ் கிராண்ட் ஹாலில் கடந்த 28ம் தேதி மாலை சிறப்பாக நடைபெற்றது.
மஸ்கட்டில் இயங்கிவரும் ‘விடியல்' தமிழ் அன்பர்களும், மேஜஸ்டிக் மஸ்கட் நிறுவனமும் இணைந்து ‘நமது அயலக வாழ்க்கை ... சுகமா? சோகமா? எனும் தலைப்பில் ‘நேருக்கு நேர்'விவாத நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியின் நடுவராக விஜய் டிவியின் ‘நீயா நானா'புகழ் கோபிநாத் செயல்பட்டார். நிகழ்ச்சியில் மஸ்கட்டின் தலை சிறந்த இருபத்தைந்து பேச்சாளர்கள் கலந்து கொண்டு பேசினர்.
கோபிநாத்தின் சிந்திக்கவும், சிரிக்கவும், உணர்வுப் பூர்வமாக ரசிக்கவும் வைத்த பேச்சு அரங்கத்தின் பார்வையாளர்கள் அனைவரையும் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகக் கட்டிப் போட்டது என்றால் அது மிகையாகாது.
அதிரடியாகவும், ஆவேசமாகவும், உணர்ச்சிப் பூர்வமாகவும் பேசிய பேச்சாளர்களின் அட்டகாசமான பேச்சுக்கும், விவாதத்துக்கும், கோபிநாத்தின் சிந்திக்கவும், ரசிக்கவும் வைத்த நகைச்சுவைகளுக்கும் பார்வையாளர்களின் அதிரவைத்த கைத்தட்டல்களால் தங்கள் அங்கீகாரத்தைத் தந்து சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியை விடியல் குழுமத்தின் தலைவர் திரு, மு. பஷீர் தொடங்கிவைத்து, தொகுத்து வழங்கிப் பேசினார். துணைத் தலைவர் திரு. சுரேஷ்குமார் வரவேற்புரையாற்றினார். பொருளாளர் திரு. ராஜசேகர் நன்றியுரை வழங்கினார்.
விடியல் குழுமத்தின் நினைவுப் பரிசினை அனுசரணையாளர் திரு. ராஜேந்திரன் அவர்கள் திரு. கோபிநாத்துக்கு வழங்கி சிறப்பித்தார். பதிலுக்கு அவருக்கு கோபிநாத் பரிசு வழங்கினார்.
நிர்வாகக்குழு உறுப்பினர்கள் திருமதி. விசாலாட்சி, திரு. ரகுமுத்துக்குமார், திரு. கிருஷ்ணன், திரு. சபரிக்குமார், திரு. வெங்கடேஷ்பாபு ஆகியோர் விவாதத்தில் பங்கேற்ற பேச்சாளார்களை மேடைக்கு அழைக்க திரு. கோபிநாத் அவர்கள் நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவித்தார். முன்னதாக தமிழ்க் குழந்தைகளின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே தொடங்கியது.
மஸ்கட்டில் இது ஒரு மாபெரும் வெற்றி நிகழ்சியாக அமைந்தது என விழாவில் பங்கேற்ற அனைவரும் விடியல் தமிழ்க் குழுமத்தையும் அதன் ஒன்பது நிர்வாகக் குழுவினரையும், பேச்சாளர்களையும் பாராட்டினர்.