அட்லாண்டிக் கரையில், அமெரிக்க வானில்.. அதிர வைத்த பறையடி.. நியூஜெர்ஸி பள்ளியில் தமிழ் விழா!
-புவனா கருணாகரன்
நியூ ஜெர்ஸி: தென் பிரண்ஸ்விக் நகரில் உள்ள குமாரசாமி தமிழ்ப் பள்ளி, தனது மூன்றாவது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது.
அமெரிக்க மண்ணில் வாழும் தமிழ் பெற்றோர் உலகின் தொன்ம மொழியான நம் தாய்த் தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல ஒரு தமிழ் பள்ளியை 2014 ஆம் ஆண்டு நியூ ஜெர்ஸி, தென் பிரண்ஸ்விக் நகரில் துவங்கினார்கள்.
அமெரிக்க வாழ் குழந்தைகளுக்குத் தமிழில் எழுத, படிக்க, பேசக் கற்று தருவதே இந்தப் பள்ளியின் முக்கிய நோக்கமாக இருந்தாலும், தமிழ் கலாச்சாரம், இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழின் சுவை, பண்டை தமிழனின் வாழ்க்கை, வணிக முறைகள், தமிழ் வரலாறு இங்கே கற்றுத் தரப்படுகிறது.
ஐம்பது குழந்தைகளுடன் ஆரம்பித்த இந்தப் பள்ளியில் தற்போது மழலை முதல், 16 வயது வரை உள்ள 180 குழந்தைகள் ஒவ்வொரு சனிக்கிழமையிலும் தமிழ் கற்று வருகிறார்கள். பெற்றோர்களாலும் தன்னார்வலர்களாலும் நடத்தப்படும் இப்பள்ளி அமெரிக்க தமிழ்க்கல்விக் கழகம் (American Tamil Academy) கல்வித்திட்டத்தின் கீழ் செயல்படுகிறது.
3வது ஆண்டு விழா
இப்பள்ளியின் மூன்றாவது ஆண்டு விழா, ஜுன் 11 ஞாயிரன்று சோமெர்செட் நகரில் நடத்தப்பட்டது. சுமார் 10 மணியளவில் துவங்கிய இவ்விழாவில் குழந்தைகளும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாலை 5 மணி வரை வெவ்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.
ஒரு நிமிடம் பேச்சு
குழந்தைகள் "ஒரு நிமிடம் பேச்சு" என்ற நிகழ்ச்சியில் "தமிழின் தன்மை, தன்னம்பிக்கை" இன்னும் பல தலைப்புகளில் பேசினார்கள். பின் திருவள்ளுவர், கம்பர், இளங்கோவடிகள், பாரதியார் போன்ற கவிஞர்களாக மாறினர்.
வினாடி வினா
வினாடி வினா, பழமொழி கூறுதல், தமிழ் உச்சரிப்பு விளையாட்டு போன்றவை நிகழ்ந்தது. இதமான கிராமியப் பாடல்களும், இனிமையான ஆடல்களும், திருவிளையாடல் போன்று பல நாடகங்களும் மாணவர்களால் அரங்கேற்றப்பட்டது.
பறையடி
இந்த விழாவின் முக்கிய சிறப்பு தமிழனின் பறையடி. உழைப்பின் களைப்பு போக, ஊர்கூடி அமர்ந்து ஒன்றாய்க் கதைப்பேச, ஒவ்வொரு விசேடங்களையும் உற்சாகம் செய்ய, ஊருக்கான சேதியை உரக்கச் சொல்ல, உள்ளிருக்கும் உணர்வை தட்டி எழுப்ப தமிழன் கண்டுபிடித்த இசைக்கருவியான பறையை நெஞ்சைப் பிழியும் வகையில் பெற்றோரும் மாணவரும் அழகிய நடனத்துடன், அளவிலா குதூகலத்துடன் அடித்து மகிழ்ந்தனர்.
அட்லாண்டிக் கரையில்
தமிழ் நாட்டில் கூட மறைந்து வரும் இந்தக் கலையை அட்லாண்டிக் கரையில், அமெரிக்க வானில் குழந்தைகள் அடிக்க கேட்டது, மனதிற்கு பெரும் உற்சாகத்தை ஊட்டியது. தமிழையும், அதன் உன்னதக் கலாச்சாரத்தையும், அடுத்தத் தலைமுறைக்கு பாதுகாத்து எடுத்து செல்லும் குமாரசாமி பள்ளி நிர்வாகிகள், பெற்றோர், தன்னார்வலர்கள் மற்றும் மாணவ, மாணவியர்க்கு வாழ்த்துகள். பாராட்டுகள். மேலும் தகவலுக்கு http://sbtamilschool.org.