ஹூஸ்டனில் புதிய தமிழ்ச் சங்கம்.. சித்திரைத் திருவிழாவுடன் தொடக்கம்!
ஹூஸ்டன்(யு எஸ்): அமெரிக்காவின் பெட்ரோலிய நகரமான ஹூஸ்டனில் புதிய தமிழ் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.
அங்குள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திலும், பெட்ரோலிய நிறுவனங்களிலும் ஏராளமான தமிழர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
ஹூஸ்டனில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோவில் தமிழர்களால் உருவாக்கப்பட்டது. தமிழக கோவில் கட்டிடக் கலையில் வடிவமைக்கப்பட்டது.
பத்துக்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் மாநகரப் பகுதிகளில் இயங்கி வருகின்றன. 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் மொழியை பயின்று வருகிறார்கள்.
ஹூஸ்டனிலும் மாநகரத்தின் நாலாபுறமும் உள்ள கேட்டி, சுகர்லேண்ட், பியர்லேண்ட், சைப்ரஸ், உட்லண்ஸ் போன்ற புறநகர்ப் பகுதியிலும் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் வசித்து வருகிறார்கள்.
ஏப்ரல் 15ம் தேதி, ஹுஸ்டன் பெருநகரத் தமிழ்ச் சங்கம் என்ற புதிய தமிழ்ச் சங்கம் தொடங்கப் பட்டது. ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ப் பள்ளியின் சுகர்லேண்ட் கிளை அரங்கத்தில் தொடக்க விழா நடைபெற்றது.
நிறுவனர் கரு.மலர்ச்செல்வன் திருக்குறள் கூறி ஆரம்பித்து வைக்க, தொடர்ந்து முன்னோடிப் பெண்கள் குத்துவிளக்கு ஏற்றினர்.
சங்கத் தொடக்க விழா சித்திரைத் திருவிழாவாகவும் கொண்டாடப் பட்டது. தமிழ்ப் பள்ளித் தலைவர் கரு.மாணிக்கவாசகம் வரவேற்புரை ஆற்றினார்.
உள்ளூர் கலைஞர்கள் சதீஷ் மற்றும் மூர்த்தியின் பங்களிப்பில் நகைச்சுவை விருந்து இடம் பெற்றது. தொடர்ந்து 'தாயகம் தாண்டிஅமெரிக்காவில் வசிப்பதில் அதிகம் பெறுவது அல்லலா? ஆனந்தமா?' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது
வாஞ்சிநாதன், ராதா , சங்கீதா ஆகியோர் அமெரிக்கா வந்தும் கஷ்டம்தான் படுறோம் என்று அங்கலாய்த்தாலும், நகைச்சுவை ததும்ப பேசினார்கள்.
'அட போங்கப்பா, அமெரிக்கா வந்தும் அனுபவிக்கத் தெரியாதவர்கள் நீங்கள்' என்று எதிரணியினர் அமெரிக்காவின் சுக போகங்களை பட்டியலிட்டார்கள்.
பாண்டிமாதேவி, கவிதா மற்றும் முத்து 'ஆனந்தம் விளையாடும் அமெரிக்கா' என்ற ரீதியில் பேசினார்கள்.
சந்தடி சாக்கில் இந்தியாவில் ஆங்கிலம் தெரிந்தும், நம்மிடம் இந்தியில் பேசும் வட நாட்டவர்களை வெளுத்து வாங்கினார்கள்.
அந்த இந்தித் தொல்லை எல்லாம் அமெரிக்காவில் இல்லையே என்றார்கள் (அமெரிக்காவிலும், சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம், இந்தியில் வலுக் கட்டாயமாக பேசும் 'ஹிந்தியர்கள்' ஏராளமானோரை பார்க்கலாம்ங்க)
நடுவர் இராமன் சொக்கலிங்கம் அல்லல் இருந்தாலும் அமெரிக்கா ஆனந்தம் தான் என்று முடித்து வைத்தார்.
தமிழ்ச் சங்கம் உருவாக்கமும் நோக்கமும் குறித்து படத்துடன் விளக்கம் தந்தார் ஜெகன். கோபால் கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். தாமோதரன் நன்றியுரை ஆற்றினார்.
இரவு உணவுடன் விழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை கோபால் கிருஷ்ணன், வெங்கட், பாலாஜி, தாமு ஆகியோர் சுகர்லேண்ட் தமிழ்ப் பள்ளி பொறுப்பாளர்களுடன் இணைந்து செய்திருந்தார்கள்.
- இர தினகர்