பதறாத காரியம் சிதறாது.. பரபரப்பு மனசுக்கு ஆகாது!
- எழுத்தாளர் லதா சரவணன்
நம் வலியைப் போல சந்தோஷத்தையும் பிறர் எடுத்துக் கொள்ள முடியாது. வாழ்க்கையில் சில நேரங்களில் நம்மிடையே பரபரப்பு தொற்றிக்கொள்ளும் !
காலையில் வெளியே முக்கியமான இடத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தபடியே படுத்து இருப்போம். அதிகாலையில் சுகமானத் தூக்கத்தில் புரண்டு கொண்டு இருப்போம் நம்மால் எழ இயலாது. இரு இமைகளை இழுத்துப் போர்த்திச் சிறை வைத்ததைப் போல் இருக்கும்.
தாமதமாக விழிப்போம் யாரையும் அறியாமல் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளும். குளிப்பது, உடை உடுத்துவது, கிளம்பும் வரையில் எல்லாமே எந்திரகதியில் நடக்கும். அன்று மட்டும் ரஜினி கண்டுபிடித்த ரோபோவாக நாம் மாறிப்போய் இருப்போம். எடுத்த காரியம் முடியும் வரையில் நம் அருகில் எவரும் வரவும் முடியாது. அதிகாலையில் ஏகப்பட்ட கலவரங்களை சுமந்த மண்ணைப் போல் நம் மனது ரணகளமாக இருக்கும். கண்ணில் யார் பட்டாலும் அவர்கள் ஆயுதம் ஏந்தி வரும் கயவர்களைப் போல் தெரிவார்கள். எடுத்த காரியம் முடியும் வரை அந்தப் பரபரப்பு விடாது கருப்பு போல நம்மைத் தொடர்ந்து கொண்டே இருக்கும்
அப்படி அட்டையாய் தொற்றிக்கொண்டு பரபரப்பு நம் நியாபக ரத்தத்தை உறிஞ்சிவிடும். ஒரு உறவினர் வீட்டுக்கு வெளியூரில் இருந்து நண்பர் சென்றிருக்கிறார். நீண்ட நாள் கழித்து வருவதால் அவருக்கு அந்த வீட்டின் முகவரி மறந்துபோய் விட்டது. நம்மூரில் தான் ஆட்டோ ஒட்டுநர்களின் நிலை அறிந்ததுதானே புதியதாய் வருபவர்கள் என்றால் பக்கத்துத் தெருவிற்கே கறந்துவிடுவார்களே. அப்படித்தான் ஒரு ஆட்டோ ஒட்டுநரிடம் மாட்டிக்கொண்டு கடுமையான கோபத்தோடு உறவினர் வீட்டு வாயிலில் நின்றார். இடம் தெரியாத இடத்தில் நான் வருகிறேன் என்று வாக்கு கொடுத்த உறவினர் வராததால் எத்தனை சிக்கலை அனுபவிக்கவேண்டியதாய் போய்விட்டது என்ற கோபம் அவர் மனதில் மூண்டு இருந்தது,
கதவு திறந்தது. உழக்கு போல ஒரு பையன் எட்டிப் பார்த்தான். உங்களுக்கு யார் வேண்டும் ?
நண்பரோ கையில் பாரத்துடன். வீட்டில் அப்பா இல்லையா தம்பி ?
இல்லை வெளியே போயிருக்கார்.
தாத்தா பாட்டி ?
ஊருக்குப் போயிட்டாங்க
சித்தப்பா ?
மேட்சுக்குப் போயிருக்கார்.
சரி அம்மாவாவது இருக்காங்களா ?
அவங்களும் கோவிலுக்குப் போயிருக்காங்க
இவருக்கு கடும் கோபம் வந்து விட்டது. வீட்டுக்கு வாருங்கள் என்று அப்படி வருந்தி வருந்தி அழைத்துவிட்டு இதென்ன அசட்டுத் தனம் என்று அந்த சிறுவனிடம், நீ மட்டும் ஏன் இங்கே இருக்கு நீயும் போக வேண்டியது தானே என்று கோபமாய் கேட்டார்.
நான் எதிர்வீடு அங்கிள் அதனால்தான் நான் இங்கிருக்கிறேன் என்று கூலாக சொல்லிவிட்டு கதவைத் திறந்து போய்விட்டான் அந்தப் பொடியன். அவர் பதட்டப்படாமல் பேசியிருந்தால் பார்வையிலேயே அந்தப் பையன் உறவுக்காரரின் மகள் இல்லை என்று புரிந்திருக்கும். இப்படித்தான் அநேக விஷயங்கள் நம் கண்களில் இருந்து மறைக்கப்படுகிறது பதறாத காரியம் சிதறாது என்று பெரியவர்கள் சொன்னார்களே அது இதை வைத்துதான் இருக்குமோ!