ஒன் இந்தியா மற்றும் பத்திரிகையாளர் ஷங்கருக்கு அமெரிக்காவில் பாராட்டு விழா!
டல்லாஸ் (யு.எஸ்): அமெரிக்கத் தமிழர்களின் தமிழ் மற்றும் சமூகப் பணிகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் கொண்டு சேர்க்கும் பணிக்காக தமிழ் ஒன் இந்தியா தளத்தின் சேவையைப் பாராட்டி 'மக்கள் ஊடகம்' விருது வழங்கப்பட்டது.
ஒன் இந்தியா தளத்தின் செய்தியாளர் எஸ்.ஷங்கருக்கு மக்கள் பத்திரிகையாளர் விருது வழங்கப்பட்டது.
டல்லாஸில் செயல்பட்டு வரும் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் இயக்குனர் வேலுராமன், எஸ்.ஷங்கருக்கு ‘மக்கள் பத்திரிக்கையாளர்' விருதை வழங்கினார்.
மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கால்டுவெல் வேள்நம்பி, தமிழ் ஒன் இந்தியா இணையதளத்திற்கு ‘மக்கள் ஊடகம்' விருதை வழங்கினார்.
வாழ்த்துரை
சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் ராமு வேலு அனைவரையும் வரவேற்றார்.
வாழ்த்துரை வழங்கி பேசிய வேலு ராமன், "டாக்டர் ஷங்கர் தனிப்பட்ட கவனத்துடன் அமெரிக்கத் தமிழர்களின் தமிழ் மற்றும் சமுதாயப் பணிகளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார். அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நலன் சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் என்றார்.
கால்டுவெல் வேள்நம்பி தனது வாழ்த்துரையில், "டாக்டர். ஷங்கர் ஆசிரியப் பணிக்காக ஆராய்ச்சி பட்டம் பெற்ற அவர் பத்திரிக்கைப் பணியை மனமுவந்து ஏற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்துப் பெருமை கொள்கிறேன்.
ஒன் இந்தியாவுக்கு பாராட்டு
அனைத்துத் தரப்பு செய்திகளையும் மக்கள் பார்வைக்கு கொண்டு வரும் ‘ஒன் இந்தியா இணைய தளத்திற்கும் பாராட்டுகளை தெரிவிக்கிறேன். ஒன் இந்தியா தமிழ் தொடர்ந்து அமெரிக்க தமிழர்களுக்கு மேலும் உதவும் மக்கள் ஊடகமாக செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கிறேன்," என்றார்.
மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் செயலாளார் புகழ்,விசாலாட்சி வேலு, முத்தையா, மோனி, ரவி பழனி, முனைவர் சித்ரா மகேஷ், பழநிசாமி, முருகானந்தன் ஆகியோரும் பேசினர்.
ஒன் இந்தியா இணைய தளத்தின் டெக்னாலஜி மற்றும் அணுகுமுறை, அமெரிக்க ஊடகங்களுக்கு இணையாக இருப்பதாக அருண் பொன்னுசாமி பாராட்டினார்.
முனைவர் சித்ரா மகேஷ் பேசுகையில், "டாக்டர் ஷங்கர் பத்திரிக்கையாளர் என்றாலும் இலக்கியத்திலும் ஆழ்ந்த ஞானம் கொண்டவர்.
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்
செய்யக் கூடாததை செய்தால் தவறு, செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டால் அது மிகவும் தவறு என்ற வள்ளுவரின் வாக்குக்கேற்ப செயல்படுகிறார்," என்றார்.
முருகானந்தம், மோனி, ரவி பழனி ஆகியோரும் பாராட்டிப் பேசினர்.
ஆசிரியரின் ஏற்புரை
விருதுகளைப் பெற்றுக் கொண்ட ஷங்கர், "இது எனக்கு மிகவும் மகிழ்வான தருணம். பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் பணியை மறுத்து பத்திரிக்கைப் பணியில் தொடர்ந்த முடிவுக்கு, இதை விட பெரிய பரிசு கிடையாது.
நான் பாராட்டுக்குரியவன் என்றால் அந்தப் பெருமை, இன்று வரையிலும் என்னை வழி நடத்தும் எனது ஆசான்கள் 'மாலை முரசு' பா.ராமச்சந்திர ஆதித்தன், எடிட்டர் கதிர்வேல், 'தினமணி' ஆர்எம்டி சம்மந்தம் ஆகிய பத்திரிக்கைத் துறையின் ஜாம்பவன்களையேச் சாரும்.
ஒன் இந்தியா தளத்தில் தலைமை ஆசிரியர் ஏ.கே. கானில் ஆரம்பித்து ஆசிரியர் அறிவழகன் மற்றும் சக நிருபர்கள், இணை ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள், டெக்னிகல் பிரிவினர் என அனைவரும் ஒரு நண்பர் பட்டாளமாகவே பயணம் செய்து கொண்டிருப்பவர்கள்,' என்றார்.
சாஸ்தா தமிழ் அறக்கட்டளை
டல்லாஸில் செயல்பட்டு வரும் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை, ப்ளேனோ தமிழ்ப் பள்ளியை நிர்வகித்து வருவதுடன், தமிழகம் மற்றும் அமெரிக்காவில் உள்ள தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து சமுதாயப் பணிகளும் செய்து வருகிறார்கள்.
கடந்த ஐந்தாண்டுகளில், நிகழ்ச்சிகள் மூலம் சுமார் 350 ஆயிரம் டாலர்கள் நிதி திரட்டி, உதவும் கரங்கள், சக்தி கலைக்குழு, பயிர் உள்ளிட்ட அமைப்புகள் மூலம் அறப்பணிகள் செய்துள்ளார்கள்.
ப்ளேனோ தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் தன்னார்வத்துடன் பணியாற்றி வருகிறார்கள். மேலும் விவரங்களுக்கு http://stfnonprofit.org என்ற இணையதளத்தில் காணலாம்.
சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் சாதனைத் தமிழர்களை அழைத்து சிறப்பித்து வருகிறார்கள். அறக்கட்டளையினர், டாக்டர் ஷங்கரின் அமெரிக்க வருகையையொட்டி சிறப்பு நிகழ்ச்சியாக இந்த விருது விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.
-டல்லாஸிலிருந்து, இர தினகர்.