தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரரைக் கண்டித்து லண்டனில் போராட்டம்- இந்து அமைப்புகள் வாதம்!
தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரரைக் கண்டித்து லண்டனில் போராட்டம் நடைபெற்றது.
லண்டன்: தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கும் போது எழுந்து நிற்க மறுத்த காஞ்சி சங்கர மட விஜயேந்திரரைக் கண்டித்து லண்டனில் அம்பேத்கர்- பெரியார் படிப்பு வட்டத்தினர் கண்டனப் போராட்டம் நடத்தினர்.
காஞ்சி சங்கர மட விஜயேந்திரருக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனை திசை திருப்பும் வகையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர், நாங்களும் சோடா பாட்டில் வீசுவோம் என கூறினார். இப்போது ஆண்டாளிடம் மன்னிப்பு கோரினேன் என்கிறார் ஜீயர்.
இதனிடையே வைரமுத்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி லண்டனில் இந்திய தூதரகம் முன்பாக 'இந்துக்கள்' என்ற பெயரில் ஒரு சமூகத்தினர் போராட்டம் நடத்தினர். இதற்கு பதிலடியாக விஜயேந்திரரை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி இந்திய தூதரகம் முன்பாக போராட்டம் நடத்தப்பட்டது.
அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தினர் இந்தப் போராட்டத்தை நடத்தினர். அங்கும் இந்துத்துவாவாதிகள் இடையூறு செய்ய முயன்றதால் இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.