அமெரிக்காவில் தந்தை பெரியாரின் 140வது பிறந்த நாள்... கோலாகல கொண்டாட்டம்
நியூஜெர்சி: அமெரிக்காவில் தந்தை பெரியாரின் 140வது பிறந்த நாள் விழா செப்டம்பர் 23ம் தேதி கொண்டாடப்பட்டது.
செப்டம்பர் 23 ஆம் தேதி நியூஜெர்சியில் தந்தை பெரியாரின் 140 வது பிறந்த நாள் வெகு சிறப்பாக ஒரு நாள் நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. காலை 11 மணிக்கு கருத்துக்களம் தொடங்கியது. சுயமரியாதை சமதர்மம் பெரியார் என்ற தலைப்பில் திராவிடர் கழக பொதுச்செயலாளர் அய்யா துரை சந்திரசேகரன் அவர்கள் பல்வேறு கருத்துகளை எடுத்து விளக்கி பெரியார் சமத்துவத்தின் அடையாளம் என்று உரையாற்றினார். தொடர்ந்து பெரியார் எளிய மக்களுக்கான தலைவர் என்ற தலைப்பில் முனைவர் ரவிசங்கர் கண்ணபிரான் தந்தை பெரியார் எளிமையின் உறைவிடமாக வாழ்ந்து மக்களுக்காக தொண்டாற்றினார் என்பதை பல்வேறு செய்திகளுடன் விளக்கினார்.
தொடர்ந்து கலகக்காரர் பெரியார் என்ற தலைப்பில் தோழர் ஆசிப் அவர்கள் அய்யாவின் சிறுவயது முதலே அவரின் கலகக்குரல் தான் அவரின் பகுத்தறிவு கேள்விக்களுக்கு வித்திட்டது என்பதையும் அந்தக் குரல் தான் சமூக நீதி நிலைநாட்டப்பட இறுதி வரை போராடியது என்பதையும் விளக்கி உரையாற்றினார். கருத்துக்களத்தை தொடர்ந்து பார்வையாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு விளக்கமாக திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் அய்யா துரை சந்திரசேகரன் அவர்கள் பதில் அளித்தார்கள். மதிய உணவிற்குப் பின் சரியாக 2:40 மணிக்கு மாலை நேர கலை நிகழ்ச்சிகள் தொடங்கியது!
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கும், அம்பேத்கரிய செயற்பாட்டாளர் ராஜு காம்பளே அவர்களுக்கும், தமிழறிஞர் கீ.த. பச்சையப்பன் அவர்களுக்கும் , அண்மையில் ஆணவக்கொலையால் தெலுங்கானவில் கொல்லப்பட்ட தோழர் பிரணய் அவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தெலுங்கானாவில் கொல்லப்பட்ட பிரணய்க்கு நீதி வேண்டும் என்றும் ஆணவ கொலையை எதிர்த்து கண்டனமும் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் பதிவு செய்தது.
பின் பறை இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. நியூ ஜெர்சியின் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் விடுதலை பறை இசை குழுவைச் சேர்ந்த தோழர் ரவி பெருமாள்சாமி, தோழர் பிரபு, தோழர் பாலா, தோழர் சுபாசு சந்திரன் , தோழர் கனிமொழி ஆகியோர் பறை இசைத்தனர் . அதைத் தொடர்ந்து கனெக்டிகட் பறை இசை குழுவைச் சேர்ந்த தோழர் சபரிஷ், தோழர் நிதர்சனா, தோழர் திலிப், தோழர் கார்த்திகேயன் பிரபு, தோழர் பெட்சி பறை இசைத்தனர் . அதனைத்தொடர்ந்து பெரியார் பிஞ்சுகள் கிழவனல்ல அவன் கிழக்கு திசை , பள்ளிக்கு மீண்டும் போகலாம் என்ற பாடல்களை மிக அழகாக நிக்கித்தா, ஷராவானி ஆகியோர்
பாடினர்.
கடவுள் மறுப்பு வாசகத்தை பெரியார் பிஞ்சுகள் இலக்கியா, இனியா சிறப்பாக கூறினர். அதனைத்தொடர்ந்து பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் ( நியூ ஜெர்சி ) தந்தை பெரியார் 140 வது பிறந்த நாள் சிறப்பு மலரை திராவிடர் கழக பொதுச்செயலாளர் அய்யா துரை சந்திரசேகரன் வெளியிட பேராசிரியர் அரசு செல்லையா அவர்கள் முதல் மலரை பெற்றுக்கொண்டார்கள்.
தமிழ்நாட்டில் இருந்து தந்தை பெரியாரின் 140 வது பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அய்யாவின் வாழ்த்துச் செய்தியும், மனநல மருத்துவர் ஷாலினி அவர்களின் வாழ்த்துச் செய்தியும் காணொலிகளாக ஒலித்தன.
அதன்பின்னர் சென்ற ஆகஸ்ட் 7 ஆம் தேதி நம்மையெல்லாம் மீளாத் துயரில் ஆழ்த்திச் சென்ற நமது திராவிடத் தாய் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் சாதனைகளை தொகுத்து 20 நிமிட காணொலி ஒளிபரப்பட்டது. மேலும் கலைஞரின் தாலாட்டு என்ற இசை வடிவம் வெளியிடப்பட்டது. தோழர் கனிமொழி வரிகளில், தோழர் முனைவர் ரவிசங்கர் கண்ணபிரான் இசையில் தோழர் காவ்யா ராஜ் பாடியுள்ளார். பின்னர் மக்கள் கலை இயக்கத்தின் தோழர் கோவன் அவர்களின் பாடலான ஏலே எங்க வந்து நடத்துற ரத யாத்திர? என்ற பாடலுக்கு தோழர் நிதர்சனா, தோழர் பெட்சி, தோழர் சபரிஷ், தோழர் கார்த்திகேயன் பிரபு நடனமாடினார்.
தொடர்ந்து அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக சிவாஜி கண்ட இந்து இராஜ்யம் என்ற பேரறிஞர் அண்ணாவின் நாடகம் , சுருக்கமான வடிவில் நியூ ஜெர்சி எம்ஆர்இராதா கலைக்குழுவினரால் அரங்கேற்றப்பட்டது. சிவாஜியாக தோழர் ரவிசங்கர் கண்ணபிரான், சிட்னீஸ்சாக தோழர் ஆசிப், மோராபந்தாக தோழர் வெங்கி, காகபட்டராக தோழர் கனிமொழி , ரங்குபட்டராக தோழர் பிரபு, கேசவ பட்டராக தோழர் திலிப்,பாலச்சந்திர பட்டராக தோழர் சபரிஷ் சிறப்பாக நடித்தனர் . இந்த நாடகத்தை இயக்கி , ஒலி, ஒளி உதவிகள் செய்தவர் தோழர் சுபாசு சந்திரன். இதன் சுருங்கிய வடிவை எழுதி ஆக்கித்தந்தவர் தோழர் முனைவர் ரவிசங்கர் கண்ணபிரான். அதன் பின் பெரியாரின் உழைப்பு , கலைஞரின் ஆட்சி தந்த சமத்துவ பங்களிப்புகள் இவற்றைப் பற்றி மிகச் சீரிய முறையில் உரையாற்றினார் பேராசிரியர் அரசு செல்லையா அவர்கள்.
அதனைத்தொடர்ந்து பெரியார் பிஞ்சுகளின் தலைவர்கள் வேடமிட்ட அணிவகுப்பு நடந்தது. அதில் பெரியாராக பெரியார் பிஞ்சு எயினி, திருவள்ளுவராக பெரியார் பிஞ்சு இலக்கணன், மணியம்மையராக பெரியார் பிஞ்சு இலக்கியா, நாகம்மையாராக பெரியார் பிஞ்சு இனியா, கலைஞராக பெரியார் பிஞ்சு ஆதவன், புரட்சி கவிஞர் பாரதிதாசனாக பெரியார் பிஞ்சு கோகுல் வேடமிட்டு அசத்தினர். அதன் பின் வைதீக குறியீடான பூணூலை உங்களுக்கு அணிவித்துவிட்டனரே என திருவள்ளுவரை கலைஞர் குரலில் கேட்கும் குரலொலி ஒலிக்க பெரியாராக வேடமிட்ட எயினி திருவள்ளுவரின் பூணூலை கழற்றி தூக்கி எறிதல் போன்ற காட்சி அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றது. தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த ஓவியப் போட்டியில் குழந்தைகள் மிகச் சிறப்பாக வரைந்து பரிசுகளை தட்டிச்சென்றனர்.
நியூஜெர்சி பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் தோழர்கள் சிறப்பாக விழாவை ஒருங்கிணைத்தனர். பாஸ்டனில் இருந்து தோழர் மகேஷ், அவரது இணையர் தோழர் மோகனா, மகன் ஈ.வெ.ரா கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். அதே போன்று டெலவர் தமிழ்ச்சங்கத்தில் இருந்து தோழர் துரைக்கண்ணன் மற்றும் அவரது மகள் கலந்து கொண்டனர் . நியூஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவர் தோழர் செந்தில்நாதன் அவர்கள் விழாவில் கலந்து கொண்டு விழாவைப் பாராட்டினார். இரவு உணவு அஞ்சப்பர் உணவகம் வழங்க விழா இனிதே நிறைவுற்றது.