வால்மார்ட் தலைநகரில் ஐந்தாவது ஆண்டாக 'மண்வாசனை'... அமர்க்களப்படுத்திய தமிழ் தெருக்கூத்து!
பெண்டன்வில் (யு.எஸ்): வால்மார்ட் நிறுவனத்தின் தலைமையிடமான பெண்டன்வில் நகரில் ஐந்தாம் ஆண்டாக தமிழர்கள் கொண்டாடிய பொங்கல் சிறப்பு ‘மண்வாசனை' விழா நடைபெற்றது.
இதில் தெருக்கூத்து முதல் த்ரோன் லைட் நடனம் வரை அசத்தல் நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. விழா நடைபெற்ற ரோஜெர்ஸ் உயர் நிலை பள்ளி அரங்கம் முழுவதும் மாவிலை மற்றும் கண்ணைக் கவரும் வண்ண வண்ணத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது
அமெரிக்கத் தமிழர்களின் மற்றுமோர் உறைவிடம்
உலகத்தின் முதன்மை சில்லரை வணிக நிறுவனம் என்றாலும் வால்மார்ட்டின் தலைமையிடம் அதனை தோற்றுவித்த சாம் வால்டனின் சொந்த ஊரான அர்க்கான்சா மாநிலத்தின் சிறிய ஊரான பெண்டன்வில் ஆகும். வால்மார்ட் தலைமையிடத்தால் அந்த ஊர் விரிவடைந்து விமான நிலையம் உட்பட அனைத்து பெரு நகர வசதிகளையும் பெற்றுள்ளது. ஆனாலும் நியூயார்க், சான் ப்ரான்ஸிஸ்கோ, சிகாகோ, டல்லாஸ் போன்ற மாநகரங்கள் அளவுக்கு இன்னும் பெரிதாகவில்லை. டல்லாஸ் நகரிலிருந்து ஐந்து மணி நேரம் கார் பயணத்தில் செல்லலாம். அங்கே வசிக்கும் தமிழர்களில் பெரும்பாலோனோர் வால்மார்ட் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள்தான்.
இது தமிழர்களின் மண்வாசனை
அமெரிக்காவின் பெரிய நகரங்களைப் போல் தமிழர்கள் விழா இல்லையே என்ற குறையைப் போக்க, ஐந்தாண்டுகளுக்கு முன்னர் பொங்கல் விழாவை ‘மண்வாசனை' என்ற பெயரில் கொண்டாடத் தொடங்கினர். ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். இந்த ஆண்டு நிகழ்ச்சியில் தெருக்கூத்து கலைஞர்கள் விவரிப்பது போல் நடனங்கள் இடம் பெற்றன. தெருக்கூத்து கலைஞராக பிரபல எழுத்தாளர் சோலையின் மகன் மாதவன் ஆடிப் பாடி மகிழ்வித்தார்.
உழவுக்கு வந்தனை செய்வோம்
தலைவாழை இலையில் 16 வகையான அறுசுவை மதிய உணவு முதலில் பரிமாறப்பட்டது. சுமார் 1250 பேருக்கு பந்தி நடைபெற்றது. அருகேயே சிறுவர்களுக்கான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, இசைக் கச்சேரியாக களை கட்டியது. மதியம் 12.30 மணிக்கு மேல், அமெரிக்க விவசாயி ஒருவர் குத்து விளக்கு ஏற்றி வைத்து விழாவைத் தொடங்கி வைத்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில், தமிழர்களின் பாரம்பரியமிக்க உழவர்களின் சூரிய வழிபாடு, குறவஞ்சி நடனம், பரதம் ஆகியவற்றை நினவு கூறும் வகையில் நிகழ்ச்சிகள் அமைந்திருந்தது
க்லூலஸ் கூட்டம்
க்லூலஸ் கூட்டம் (Klooles Kootam) நடன கலை குழுவினரின் தெருக் கூத்து நடனம் விழாவின் சிறப்பு அம்சம். மறைந்து கொண்டிருக்கின்ற தமிழர்களின் பாரம்பரியமிக்க கலைகளில் ஒன்றான தெருகூத்து நடனத்தை அரங்கேற்றி, தேய்ந்து கொண்டிருக்கின்ற கலைகளை அடுத்த தலை முறையினருக்கு எடுத்து செல்ல வேண்டிய அவசியத்தை உணர்த்தினர். தெருகூத்து, மயிலாட்டம், ஒயிலாட்டம் , காவடியாட்டம் என பார்வையாளர்களை தென் தமிழ் நாட்டின் கிராமத்திற்கே அழைத்துச் சென்றது என்றால் அது மிகையல்ல. அசோக் மற்றும் தாரணி நடனம் வடிமைத்து இருந்தார்கள்
ட்ரோன் விளக்கு நடனம்
Fabulos நடன குழுவினரின் Tron விளக்கு உடை நடனம் பார்ப்போர் அனைவரையும் வியப்பின் எல்லைக்கே கொண்டு சென்றது. பாடல் வரிகள் மற்றும் நடன அசைவிற்கேற்ப Tron விளக்குகளை மேடையின் பின்புறமிருந்து ஒருவர் இயக்கி கொண்டிருந்தார். நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மிகவும் சிறப்பாக நடனமாடி மண்வாசனை கலை நிகழ்ச்சியின் தரத்தை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றனர்.
சென்னைக்கும் உதவிக்கரம்
ஒவ்வொரு மண்வாசனை விழாவின் போதும் தமிழகத்தில் உள்ள ஏதேனும் ஒரு தன்னார்வள தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டி உதவுவர் . இம்முறை சென்னை மற்றும் கடலூர் வெள்ள நிவாரண நிதியாக 32,000 டாலர் திரட்டப்பட்டுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
டீ – பக்கோடாவுடன் பை.. பை…
சிறுவர்களுக்கான பேச்சுப் போட்டி, நட்சத்திர சமையல் போட்டி, சூப்பர் சிங்கர் போட்டி மற்றும் தமிழ்க் கவிதை போட்டியில் பங்கேற்றவர்கள் வெற்றி பெற்றவர்கள் அனைவர்க்கும் விழா மேடையில் பரிசு வழங்கி கௌரவித்தனர்
தென் தமிழ்நாடு கிராமங்களை நினைவூட்டும் கருமாரியம்மன் கூழ் கடை, வளையல் கடை, மருதாணி கடைகள் மண்வாசனை விழாவுக்கே உரித்தான சிறப்பம்சமாகும் . சுமார் 4.45 மணிக்கு விழா முடிந்து செல்லும் அனைவருக்கும்
குளிருக்கு இதமாக டீ மற்றும் பக்கோடா வழங்கப்பட்டது
பென்ட்டன்வில் மற்றும் ரோஜெர்ஸ் வாழ் தமிழர்கள் பங்கேற்பில் உணவுக் குழு, அலங்காரக் குழு, கலைக் குழு, விளம்பரக் குழு என பல்வேறு குழுக்களாக திறம்பட பணியாற்றி ஐந்தாம் ஆண்டு மண்வாசனை பொங்கல் விழாவை சிறப்பாக நடத்தி முடித்துள்ளனர்.
-இர தினகர்