அன்புள்ள ரஜினிகாந்த் அவர்களுக்கு.. இப்படியே வேணும் நீங்க எங்களுக்கு.. ப்ளீஸ்!
ரஜினி சார், இப்படியே வேணும் நீங்க எங்களுக்கு
அன்புள்ள ரஜினிகாந்த் அவர்களுக்கு,
அந்த இரும்பு கேட்டை ஸ்டைலாக திறந்து விட்டு "ஸ்ருதி பேதமாக" வந்தபோதிலிருந்து உங்களை ரசித்த ஒரு ரசிகையாக இந்த அன்புக் கடிதம். (லேட்டஸ்டாக கூட "பேட்ட" படத்தில் நீங்க கேட்டைஸ்டைலாக திறந்து விட்டீங்க பாருங்க.. அந்த ரஜினியின் ரசிகையாக எழுதுகிறேன்)
தமிழகமே இன்று உங்களை விமர்சித்து வருகிறது.. உங்களை வைத்து மீம்ஸ்கள் உலா வருகின்றன.. உங்களை வைத்து ஹேஷ்டேக் வைரலாகி வருகின்றன.. இதுவரை பேசாதவர்கள் கூட இன்று உங்கள் நிலைப்பாட்டை கேலிக்குரியதாக்கி வருகிறார்கள்.. இதற்கெல்லாம் காரணம் யார் என்றால் சாட்சாத் நீங்களேதான்!
ஆளுமை மிக்க தலைவர்களான, கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல், தமிழகம் தத்தளித்துக் கிடக்கும்போது, ஒரு மாற்றத்தை தர வேண்டும் என்று நீங்கள் நினைத்தது சரிதான்..ஊழல் இல்லாத ஒரு மாற்று சக்தியை உருவாக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தும் அன்று லீலா பேலஸில் பேசியதும் கூட மிக மிக நியாயமே!
எதற்காக அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தீர்கள்? எதற்காக இப்போதுகூட வர தயங்குகிறீர்கள் என்ற கேள்வியை இனியும் எங்களால் கேட்கமுடியாது.. காரணம், உங்கள் உடல்நிலை.. உங்களைப் போலவே நாங்களும் அதில் அதிக அக்கறை கொண்டுள்ளோம்.
பொதுவாக, டயாலிசிஸ் செய்து கொண்டிருப்பவர்களின் நிலை அனைவரும் அறிந்த ஒன்றுதான்.. அது சொல்ல முடியாத நரக வேதனை.. நினைத்ததை சாப்பிட முடியாது, நினைத்ததை செய்யவும் முடியாது.. நிறைய கட்டுப்பாடுகள், நிறைய வழிமுறைகள் இருக்கின்றன.. டாக்டர்கள் சொல்படி நடந்தால்தான் இதுபோன்றவர்களுக்கு பாதுகாப்பு.
ஒரு துளி சிறுநீரை வெளியேற்ற அவர்கள் படும்பாடு என்னவென்று அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். அதிலும் நீங்கள் வயது முதிர்ந்தவர்.. உங்கள் உடல்நலனை கவனமாக பார்த்து கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நிறையவே உள்ளது. சிறு கவனக்குறைவு ஏற்பட்டாலும் சிக்கல்தான்.
உடல்நிலையை கொஞ்சம்கூட மனிதாபிமான முறையில் யோசிக்காமல் அரசியலுக்கு உங்களை பயன்படுத்த துடிக்கும் அற்பர்களுக்கு மனசாட்சி இல்லையா? உங்கள் அபிமானிகளாக அவர்கள் இருந்தாலும், நலம் விரும்பிகளாகவே இருந்தாலும், அரசியலுக்கு அழைப்பது இப்போதைக்கு உசிதம் இல்லை. அதை நீங்கள் இப்போதாவது வெளிப்படையாக சொல்லியாக வேண்டும்.
இப்போது கொரோனா காலம் வேறு.. இந்த கொடூரனுக்கு சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் தெரியாது.. எப்பேர்பட்ட விஐபிக்களையும் இழுத்து சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நீங்கள் கவனமுடன் இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.. நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு மட்டுமல்ல.. இந்த தமிழ்நாட்டுக்கும் கூட மிக மிக முக்கியமானவர்.
உங்களை தந்தையாக, அண்ணனாக, மகனாக, சகோதரனாக ஏற்றுக் கொண்ட எத்தனையோ பேர் தமிழகத்தில் உள்ளனர். அவர்களுக்கெல்லாம் "ரஜினிகாந்த்" என்ற அன்பு உள்ளம்தான் முக்கியமே தவிர.. அவர் அரசியலுக்கு வந்து கஷ்டப்பட வேண்டும் என்று அவர்கள் நினைக்கவில்லை.. இவர்களில் பலர் உங்களது ரசிகர்களாகவும் இல்லை. உங்களது அபிமானிகள்.
இதோ இப்போதுகூட உங்கள் வீட்டு முன்பு தலைவா என்று அடிநாதத்தில் இருந்து கூப்பாடு போட்டு கொண்டிருக்கும் அந்த ரசிகர்களின் கண்களில் கனத்த நம்பிக்கையை சற்று பாருங்கள்.. எங்களுக்கு நீங்க எப்பவுமே வேணும் ரஜினி சார்.. காரணம் எங்களுக்கு இருப்பது ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான்.. ஆனால் அரசியல்வாதியாக வேண்டாம்.. இதே ரஜினியாக.. இதை ஸ்டைல் மன்னனாக எப்போதும் எங்க கூடவே இருங்கள்.. அதுதான் ரஜினியிடமிருந்து நாங்க எதிர்பார்க்கிறோம்.. அந்த இமேஜ் ஒருபோதும் பிறருடைய சுயநலனுக்காக பறி போய் விடக் கூடாது...!
இப்படிக்கு,
உங்கள் ரசிகை