எப்படி சூழ்நிலைகள் நமது வசமாகும்?
இருங்கப்பா தாத்தா என்னதான் பதில் சொல்றானுன்னு பார்க்கலாம் என்று மறுபடியும் ஆரம்பித்தான் தமையன். சொல்லுங்கள் தாத்தா
- எழுத்தாளர் லதா சரவணன்
வாட்ஸ்அப்பில் மூழ்கி, பேஸ்புக்கில் கடலை போடும் நம்மாள் ஒருவன் இதற்கு விளக்கம் கேட்டான் தன் மூத்த தலைமுறையான தாத்தாவிடம் !
வயசான காலத்திலே அவரை ஏண்டா வம்பிற்கு இழுக்கிறே ?
இருங்கப்பா தாத்தா என்னதான் பதில் சொல்றானுன்னு பார்க்கலாம் என்று மறுபடியும் ஆரம்பித்தான் தமையன். சொல்லுங்கள் தாத்தா
தம்பி நான் உனக்கு இப்போது ஐம்பது ரூபாய் தருகிறேன் ஐந்து வருடங்கள் கழித்து 50 ஆயிரம் தருகிறேன் என்று வைத்துக் கொள், நீ எதை விரும்புவாய். இன்று கிடைக்கும் ஐம்பது ரூபாயா அல்லது ஐந்து வருடம் கழித்து கிடைக்கும் 50 ஆயிரம் ரூபாயா ?!
அய்யோ இப்போது அம்பது ரூபா தாங்க டாப்அப் பண்ணிக்கிறேன். நான் உங்க பேரன் தாத்தா சொத்தே எனக்குத்தான் என்பதால ஐந்து வருடம் கழிச்சி உங்க சொத்தே வரப்போகுதே, அதனால இப்போ கிடைக்கிற ஐம்பதும் எனக்குத்தான் ஐம்பதாயிரமும் எனக்குத்தான். சொல்லாடலுக்கு புதிய விளக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்காத தாத்தா கையிலிருந்த ஐம்பது ரூபாயைத் தொலைத்துவிட்டு பாவமாய் மகனைப் பார்த்தார். நான் தான் அப்பவே அவன்கிட்டே பேசாதீங்கன்னு சொன்னேனே ! இப்படித்தான் சூழ்நிலைகளை தங்களுக்குத் தகுந்தாற் போல மாற்றிக் கொள்பவர்களே சந்தோஷமாக வாழ்கிறார்கள்.
எப்படி சூழ்நிலைகள் நமது வசமாகும், இடுக்கன் வருங்கால் நகுக என்று வள்ளுவன் சொன்னார். எல்லா சூழ்நிலைகளிலும் நாம் சிரிக்க இயலுமா ? என்று குறுக்கு கேள்வி கேட்பவர்களுக்கு சிறுவிளக்கம். ஒரு பெரிய நிகழ்ச்சி. தொழிலதிபர் ஒருவர் தன் குடும்பத்துடன் கலந்துகொள்வது கெளரவம் என்று நினைக்கிறார். அவர் குடும்பத்தைப் பொறுத்தவரையில் இது அபூர்வம். அவரால் எப்போதும் குடும்பத்தோடு நேரம் செலவழிக்க முடிவதில்லை என்ற மனத்தாங்கல் பிள்ளைகளுக்கு மட்டும் அல்ல மனைவிக்குமே உண்டு. உழைத்தால்தான் சமூகத்தில் வாழ முடியும் என்று பணம் தேடும் ஓடும் கணவர்களின் அலட்சியங்களை மனைவிகள் பொறுத்துக் கொள்கிறார்கள். அப்படியொரு குடும்பம் சென்ற இடத்தில் கூட்டத்தில் விழாவின் பொறுப்பாளர்களால் கவனித்துக்கொள்ள முடியவில்லை, நம்மாளுக்கு செம பசி வேறு ! நெருங்கியவர்கள் என்பதால் உணவை முடித்துக்கொள்ளலாம் என்று நம்பி வந்துவிட்டார்.
ஆனால் அன்று பசி காரணமாக நேராக அவர்கள் ஒரு ஓட்டலுக்கு சென்று சாப்பிட வேண்டிய சூழ்நிலை, பசி ஒருபக்கம் எத்தனை முக்கிய வேலைகளை விட்டுவிட்டு விருந்துக்கு வந்தோம் கூட்ட நெரிசலில் வரவேற்றதோடு சரி மற்றபடி கவனிக்கவில்லையே என்ற வருத்தமும் ஆத்திரமும் அவர் கண்ணை மறைக்க நண்பரை நினைத்து வருந்தினார். ஆனால் அவரின் பிள்ளைகளும் மனைவியும் மகிழ்வுடன் ஒருவரையொருவர் சீண்டிக்கொண்டு சாப்பிட, இவருக்கு கோபம். நான் எத்தனை கஷ்டத்தில் இருக்கிறேன் நீங்கள் என்னை வெறுப்பேற்றுவதைப் போல் சிரித்துக்கொண்டே இருக்கிறீர்களே ?
அதற்கு பிள்ளைகளோ எப்போதும் நாங்கள் எங்கேனும் வெளியே அழைத்தால் வேலையைக் காரணம் காட்டுவீர்கள் இப்போது பாருங்கள் சென்றவருடம் உங்கள் திருமண நாளைக் கொண்டாட வெளியே வந்தோம் அதுவும் பத்தே நிமிடங்கள். நீங்கள் மீட்டிங் என்று சென்றுவிட்டீர்கள், ஆனால் யாருக்காகவோ ஒதுக்கப்பட்ட இன்றைய நேரம் இது எங்களுக்கு உங்களுடன் செலவழிக்க ஏதுவாகிவிட்டது. இதற்கு நாங்கள் ஏன் வருந்த வேண்டும் மாறாக எங்களுடன் இந்த இரவை இன்பமாய் கழிக்கத்தான் அங்கே கூட்டமாய் இருந்தது என்று சந்தோஷப்படுகிறோம். அப்பா உங்கள் அருகாமையை அமைத்து தந்த இந்த மோசமான சூழ்நிலையை நீங்கள் எங்களுடன் சந்தோஷமாக செலவழியுங்கள் என்று சொன்னார்களே பார்க்கலாம்
சூழ்நிலைகளைக் கூட அழகாக கையாண்ட மகள்களை பெருமிதத்துடன் பார்த்த அந்தத் தொழிலதிபர் அதன் பிறகு, மாதம் ஒரு முறை குடும்பத்தினருடன் வெளியே செல்லும் பழக்கத்தை உருவாக்கிக்கொண்டார்.