துபாயில் ரேகா இசை மற்றும் நடன நிறுவனம் நடத்திய இஃப்தார் விருந்து
துபை: எஸ்.என்.ஜி. குழுமத்தைச் சேர்ந்த மெஜஸ்டிக் லேபர் சப்ளை சர்வீஸஸ் சோனாப்பூர் தொழிலாளர் முகாமில் உள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு ரேகா இசை மற்றும் நடன நிறுவனத்தினர் இஃப்தார் விருந்து அளித்தனர்.
புனிதமிகு இரமலான் மாதத்தில், நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி இஸ்லாமிய மக்களால் அனுசரிக்கப்படுகிறது. ரமலான் மாதத்தில் நோன்பு இருக்கும் இஸ்லாமியர்கள், மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு தொழுகை நடத்திய பின்னர் உண்ணும் உணவே இஃப்தார் எனப்படுகிறது.
இஃப்தார் என்றால் நோன்பை முடித்துக் கொள்வது என்பது பொருளாகும். துபை தொழிலாளர் முகாமில் ரேகா இசை மற்றும் நடன நிறுவனம் இஃப்தார் விருந்து நிகழ்ச்சி நடத்தியது.
இஃப்தார் விருந்து
இந்நிகழ்வில் ரேகா நிறுவனர்கள் ரேணுகா ஷர்மா, ஹாரிதா வஹாப்தீன், ப்ரேம் குமார், ரமா மலர், பாலாஜி, விஜய் பாஸ்கர், முத்து லட்சுமி, ஜோதிப் பிரியா, சங்கர், ஶ்ரீனிவாசன் மற்றும் ரேகா நிறுவன உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்து, தொழிலாளர்களுடன் இஃப்தாரில் கலந்து கொண்டு, தங்களது மனமகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நினைவு பரிசு
ரேகா நிறுவனத்தின் இத்தகைய சிறப்பான தொண்டுகளைப் பாராட்டி எஸ்.என்.ஜி குழும பொது மேலாளர் அரிகேசவநல்லூர் எஸ்.எஸ். மீரான், நிறுவனர்கள் ரேணுகா ஷர்மா மற்றும் ஹாரிதா வஹாப்தீன் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கினார்.
விருந்துக்கு நன்றி
இஃப்தார் நிகழ்ச்சியை மெஜஸ்டிக் லேபர் சப்ளை சர்வீஸஸ் தொழிலாளர் முகாமில் நடத்தியதற்கு மேலாளர் யூஸூஃப் ரேகா நிறுவனத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
தொழிலாளர்களுடன் இஃப்தார் விருந்து
மனித நேயத்தையும், சகோதரத்துவத்தையும், குறிப்பாக நலிந்தோரின் பசியை வலியோரும் உணரச் செய்யும் புனிதமிகு இரமலான் மாதத்தில், நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சியில் தொழிலாளர்களுடன் ஒன்றாக அமர்ந்து பங்கேற்கும் வாய்ப்பு வழங்கியதற்காக மெஜஸ்டிக் நிறுவனத்திற்கு ரேகா நிறுவனத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.