மஸ்கட் இந்திய தூதரகத்தில் இசையுடன் கூடிய சகஜ யோகா சிறப்பு நிகழ்ச்சி
மஸ்கட்: மஸ்கட் இந்திய தூதரகத்தில் இசையுடன் கூடிய சகஜ யோகா சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் இந்திரமணி பாண்டே தலைமை வகித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் இரண்டாவது சர்வதேச யோகா தினம் வரும் ஜுன் 21-ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. இதையொட்டி யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக இசையுடன் கூடிய சகஜ யோகா சிறப்பு நிகழ்ச்சி இந்திய தூதரகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசிய இந்திய தூதர் இந்திரமணி பாண்டே கூறுகையில்,
ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் 2014-ன் படி யோகாவை சர்வதேச அளவில் கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு சர்வதேச அளவில் முதல் முறையாக ஜுன் 21ம் தேதி அன்று சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்த ஆண்டு இரண்டாவது சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட இருக்கிறது. இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இதில் பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்று வருவது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.