சுவிட்சர்லாந்தில் சைவமும் தமிழும் பரிசளிப்பு விழா: திருக்குறளும், திருப்புகழும் பாடிய குழந்தைகள்
பேர்ன்: சுவிட்சர்லாந்து நாட்டில் பேர்ன் மாநிலத்தில் சைவநெறிக்கூடத்தால் பேர்ன், லவுசான், மர்த்தினி, ஜெனீவா ஆகியா நகரங்களில் நடாத்தப்பட்ட சைவமும் தமிழும் போட்டி நிகழ்வின் பரிசளிப்பு 25. 10. 2016 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தெய்வத் திருமுறைகளும், திருக்குறளும், திருப்புகழும் குழந்தைகள் பாடி ஒப்புவித்து பரிசுகளை பெற்றனர். 833 வெற்றிக் கோப்பைகள் குழந்தைகளுக்கு பரிசாக வழங்கப்பட்டன.
சுவிட்சர்லாந்தின் நான்கு திசைகளிலிருந்தும் பலநூறுப்பிள்ளைகள் 7 சைவத் தமிழ்ப் போட்டிகளில் பங்கெடுத்து, தமது வெற்றிக்கிண்ணத்தினையும் வெற்றிச்சான்றிதழ்களையும் பெற்றுச் சென்றனர். திருவேடம் தாங்கல் பரிசளிப்பு மேடையில் போட்டி நிகழ்வாக நடைபெற்றது.
2002ம் ஆண்டு முதல் சைவநெறிக்கூடத்தால் நடத்தப்படும் இப்போட்டி நிகழ்விற்கு 2007ம் ஆண்டு முதல் அருள்ஞானமிகு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் நல்கை வழங்கி வருகிறது. காலை 09.00 மணிக்கு தொடங்கப்பெற்ற நிகழ்வுகள் மாலை 5 மணிக்கு நிறைவுற்றன. 11.30 மணிமுதல் 1.00 மணிவரை இடைவேளை விடப்பட்டு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலால் நல்கப்பட்ட நண்பகல் உணவு விருந்தாக யாவருக்கும் அளிக்கப்பட்டது.
பரிசளிப்பு விழா
சைவத் தமிழ்பெரியோர்களும், செந்தமிழ் இசைவல்லுணர்களும் பிள்ளைகளுக்கு பரிசுகளை வழங்கி மதிப்பளித்தனர். சுவிட்சர்லாந்திற்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி. சூசி லெவின் (Suzi LeVine) சைவநெறிக்கூடத்தின் அழைப்பில் தனது கணவருடன் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் பங்கெடுத்து சிறப்பித்தார்.
தமிழ்முறைப்படி விழா
ஈழத்தில் இருந்து அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் திருவிழாவிற்கு இசை வழங்க வந்திருந்த திருநிறை. மதுசூதனன் இசைக்குழுவினர் தமிழிசை முழங்க வரவேற்பு அளித்தனர். ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் உகந்தளிக்க தூதுவர் தன் கணவருடன் தமிழ் முறையில் மேடையில் மாலை மாற்றிக்கொண்டார். தொடர்ந்து இளந்தமிழ்ப் பிள்ளைகளுக்கு சான்றிதழ்களையும், வெற்றிக்கிண்ணத்தையும் மதிப்பளித்து அளித்தார்.
அமெரிக்க தூதுவர் சிறப்புரை
அமெரிக்கத்தூதுவர் தனது சிறப்புரையினை மேடையில் ஆற்றினார். எந்த இனத்தவர்களும் எங்கு சென்றாலும் தங்கள் மொழி, பண்பாடு, சமயத்தினைப் போற்றுவது போற்றுதலிற்கு உரிய செயல். அவ்வகையில் தமிழர்கள் இன்று இந்நிகழ்வினை நடாத்துவது சாலச்சிறந்தது எனவும், தான் சைவநெறிக்கூடத்தின் நிகழ்வில் பங்கெடுத்து இன்று மேடையில் தன் கணவருடன் மாலை மாற்றிக்கொண்ட 3நிமிட மணித்துளிகள் தன்வாழ்நாளில் என்றும் மறக்குமுடியாப்பதிவு என்றும் கூறினார்.
உற்சாக விழா
மிகு உற்சாகத்துடன் நடந்த நிகழ்வின் நிறைவாக திருவேடம்தாங்கி மேடையில் இறை உருவங்களாகத் திகழ்ந்த பிள்ளைகளுக்கு வெற்றிக்கிண்ணம் வழங்கி சைவமும் தமிழும் போட்டி நிகழ்வு 2016 இனிதே நிறைவுற்றது. திருநிறை அரியபுத்திரன் நிமலன் அவர்கள் தனது சிறப்பான தனித்திறனால் நிகழ்வுகளை அழகாக தொகுத்தளித்தார். குழந்தைகள் விருப்புடன் மேடையேறிச் சிறந்தனர்.
சுவிட்சர்லார்ந்தில் ஒலித்த தமிழ்
பேர்ன், ஜெனீவா, மர்த்தினி தமிழ் ஆசிரியர்களும், வலே மாநில சைவநெறிக்கூட அன்பர்களும் நிறைந்த பங்களிப்பினை இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற வழங்கியிருந்தனர். தெய்வத் தமிழில் இறைபாடல்கள் நிறைந்தொலித்த ஞானலிங்கேச்சுரம், நிறை இளந்தமிழ்ச் செல்வங்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் நிறைந்து சூழ, தமிழா வழிபடு, தமிழில் வழிபடு எனும் மகுடத்துடன் நிறைந்தது.