சர்வம் பிரம்ம மயம்.. ஆதி சங்கரரின் வாழ்க்கை வரலாறு தமிழ் நாடகம்.. சிகாகோவில் அரங்கேற்றம்
சிகாகோ: சர்வம் பிரம்மமயம் என்ற பெயரில் தமிழ் மேடை நாடகம் ஆகஸ்ட் 25ம் தேதி சிகாகோவில் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக நாடக ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சிகாகோவில் இயங்கி வரும் லாப நோக்கற்ற CAIFA என்ற அமைப்பும், GC VEDIC என்ற அமைப்பும் இணைந்து, ஜகத்குரு ஆதிசங்கரரின் வாழ்க்கையை "சர்வம் பிரம்மமயம்" என்ற தலைப்பில் தமிழ் நாடகமாக வழங்க இருக்கின்றன. இது வருகிற ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி, சனிக்கிழமை மாலை 5.30க்கு சிகாகோவில் லெமாண்ட் நகரில் அமைந்துள்ள் ஸ்ரீராமர் ஆலயத்தின் கலை அரங்கில் நடக்க இருக்கிறது.
மகான், ஆதிசங்கரரின் பிறப்பிலிருந்து அவர் பிரம்மத்தில் கலக்கும் வரை, அவர் வாழ்வில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகள் இந்த நாடகத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. ஆதிசங்கரரின் அவதார நோக்கம், ஆதிசங்கரரின் பிறப்பு, ஆதிசங்கரர் இளமையில் சன்யாசம் பெறுவது, வியாசருடன் விவாதிப்பது, மண்டனமிஸ்ரருடன் வாதப் போரில் ஈடுபட்டு, அவரைத் தம் சீடராக்குவது போன்ற சம்பவங்கள் இந்த நாடகத்தில் விவரமாகக் காட்டப்பட இருக்கிறது.
ஆதிசங்கரரின் அத்வைத தத்துவத்தை எடுத்துக் கூறும் இந்நாடகத்திற்காக பலரும் உற்சாகத்துடன் பல வாரங்களாக பயிற்சி எடுத்து வருகின்றனர். இதற்குப் பொருத்தமான நடிகர்களாக 20க்கும் மேற்பட்ட நண்பர்கள் பங்கேற்கிறார்கள்.
அரங்க நிர்வாகத்தை, ரவிகுமார், கணேஷ் குழுவும், அரங்கப் பொருட்களை ஸ்ரீராம், ப்ரியா, இந்துவும், ஒப்பனை மற்றும் ஆடை அலங்காரங்களை சுபஸ்ரீ, அனிதா ஆகியோரும் பொறுப்பேற்று நடத்துகிறார்கள். இந்த நாடகத்தை எழுதி இயக்கியவர் சேகர் சந்திரசேகர்.
போன வருடம் இதே குழு, ராமானுஜரின் ஆயிரமாவது விழாவை முன்னிட்டு இரண்டாவது முறையாக ஸ்ரீதுஷ்யந்த் ஸ்ரீதர் (பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர்) முன்னிலையில் நடத்திய "ஏற்றம் தந்த யதிராஜர்" எனும் ராமானுஜரைப் பற்றிய நாடகம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.