இயல், இசை, நாடகத்தை அடுத்து அறிவியல் தமிழ் இருக்க வேண்டும்
கோவை: இயல், இசை, நாடகத்தோடு அறிவியல் தமிழுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று நாகப்பட்டினம் மீன் வளப் பல்கலைக்கழக துணை வேந்தர் பெலிக்ஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி வேளாண் அறிவியல் தமிழ் இயக்கம் சார்பில் மூன்றாம் ஆண்டு வேளாண் அறிவியல் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தது.
பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் அண்ணா அரங்கில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட நாகப்பட்டினம் மீன் வளப் பல்கலைக்கழக துணை வேந்தர் பெலிக்ஸ் பேசியதாவது,
இன்றைய உலகில் அறிவியல் வளர்ச்சி அத்தியாவசியமான ஒன்று. அறிவியல், தொழில்நுட்பத்தை பயிற்றுவிக்க ஆங்கிலம் தான் தேவை என்பது உண்மை இல்லை என்பதற்கு சீனா சிறந்த உதாரணம்.
நம் மாணவர்கள் விஞ்ஞானிகளாகவும், தொழில்நுட்ப வல்லுனர்களாகவும் ஆகி வருகிறார்கள். இயல், இசை, நாடகத்தோடு அறிவியல் தமிழுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணை வேந்தர் திலகர் பேசும்போது கூறியதாவது,
நம் தொழில்நுட்பங்கள், ஆய்வு முடிவுகளை விவசாயிகளுக்கு ஏற்ற மொழிகளில் அளிக்கிறோமா என்பதை கவனிக்க வேண்டும். விவசாயிகளின் பொருளாதார நிலை மேம்படும் வகையில் வாணிபம், சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட அடிப்படை கட்டுரைகள் வெளியிட வேண்டும் என்றார்.