செண்பகவள்ளி திருவேங்கடம், இரத்தினவேங்கடேசனுக்கு சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்ற பெரியார் விருது
செண்பகவள்ளி திருவேங்கடம், இரத்தின வேங்கடேசனுக்கு சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் பெரியார் விருதுகள் வழங்கப்பட்டன.
சிங்கப்பூர்: பெரியார் சமூக சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் பெரியார் விழா கடந்த 12-ந் தேதி சிறப்பாக நடைபெற்றது. மாலை 6 மணிக்கு தொடங்கி பல்வேறு நிகழ்வுகளுடன் மாலை 9 மணிக்கு விழாநிறைவுபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நியமன நாடாளுமன்ற உறுப்பினர் கா.தனலட்சுமி நிகழ்வை பாராட்டி உரைநிகழ்த்தினார். முன்னதாக பெரியார் பிறந்தநாள் பட்டிமன்றத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் மற்றபோட்டிகளில் கலந்துகொண்ட மாணவர்களுக்கும் சிறப்பு விருந்தினர்களால் பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும் முற்றிலும் மாணவர்களை கொண்டு பெரியாரும்-கோசாவும் என்ற சிறப்பு நாடகம் பல்வேறு வரலாற்று செய்திகளோடு அரங்கேறியது. 40-க்கும் மேற்பட்ட குழந்தைகளை தத்தெடுத்து வளர்ந்துவரும் வளர்ப்பு அன்னை செண்பகவள்ளி திருவேங்கடத்தைப் போற்றும் விதமாக பெரியார் விருது வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு பெரியார் விருதைப் பெற்ற முனைவர் இரத்தினவேங்கடேசனுக்கு அவ்விருது மேடையில் வழங்கப்பட்டது.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக வந்திருந்த பேராசிரியை முனைவர். பர்வீன் சுல்தானா, "பெரியாரும் பெண்கள் முன்னேற்றமும்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பெரியாரின் சீர்திருத்த சிந்தனைகளை அரங்கம் முழுவதும் நிரப்பினார் முனைவர் பர்வீன் சுல்தானா.
பெரியார் சமூக சேவை மன்றம் நடத்திய இந் நிகழ்வில் பல்வேறு அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள், தமிழார்வளர்கள், பொதுமக்கள் என 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
செய்தி: க.தங்கமணி
படம்: தியாக இரமேஷ்.