நிறைகுடமென நிரம்பி வழிந்து கொண்டுதான் இருக்கிறது.. ஆனால் எது காதல்?
Recommended Video
- லதா சரவணன்
பிப்ரவரி 14ந்தேதி காதலர் தினமாக களை கட்டிக் இருக்கிறது. இத்தனை நாள் ஒரு நாள் விழாவாக இதைக் கொண்டாடியவர்கள் இப்போது ஒருநாளைக்கு ரோஸ்டே, ஹக்டே, கிஸ் டே, புரோபசல் டே என்று ஒருவாரம் கொண்டாடுகிறார்களாம். நேற்று ஒரு செய்தியில் படித்தேன். அதே பத்திரிக்கையின் மற்றொரு பக்கத்தில் தான் காதலித்த பெண்ணை நண்பர்களுடன் நாசம் செய்த காதலனைப் பற்றியும் படித்தேன்.
எதிர்பார்ப்புகளை நிறைய வளர்த்துக் கொண்டு இருக்கிறது இன்றைய காதல் அது அன்பின் வெளிப்பாடாக இல்லை என்பதுதான் கவலை,
இந்த கட்டுரை எதைப் பற்றியது காதலர்களை கொண்டாடுவதா ? அல்லது காதல் தின எதிர்ப்பினவாதிகளுக்கு ஆதரவாகவா ? இரண்டுமே இல்லை எதார்த்தம் கலந்தது. தினம் தினம் நாம் சந்திப்பது. உலகம் ஆரம்பிக்கும் போதே ஆதாம் ஏவாளுக்கு ஏற்பட்ட காதல், அதேபோல் ரோமியோ ஜீலியட், அனார்கலி சலிம், இவர்கள் மனித இனமாகப் பிறந்து காதலுக்காய் வாழ்ந்து இறந்தவர்கள்.
முருகன் வள்ளி, கிருஷ்ணன் ராதா இன்னும் எத்தனையோ கடவுள்கள் அன்பையும் காதலையும் உணர்த்தியதைப் போன்ற கதைகளைக் கேட்டிருக்கிறோம் அதற்குப் பிறகு காப்பியங்களிலும், இதிகாசங்களிலும் பிழியப் பிழிய காதல் வழிந்திருக்கிறது. உலகில் எப்போதும் நிறைகுடமென காதல் நிரம்பி வழிந்து கொண்டுதான் இருக்கிறது. ஏற்கனவே பிறந்து இறந்த, பிறந்த, பிறக்கப்போகிற என எல்லா உயிர்களின் காதல் தாகத்தைத் தீர்க்க அந்த நிறைகுடம் தழும்பிக்கொண்டுதான் இருக்கிறது. இனியும் தீர்க்கும்.
காலங்காலமாக மட்டும் அல்ல தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர் சிவாஜி, ரஜினி கமல் தொட்டு , அஜீத் விஜய், தனுஷ் சிம்பு ஏன் இப்போதையை 96 வரையில் காதை அறுத்து நாக்கை அறுத்து, உயிரைத் தொறந்து பைத்தியமாகி, காதலித்த பெண் இறந்துவிட்டால் என்றதும், அவளுடனே மின்சார சுடுகாட்டில் உடன்கட்டை ஏறும் காதலன் வரையிலும் பார்த்தாகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால், காதலை எதார்த்தமாக காண்பிக்கிறேன் பேர்வழி என்று 5வயது பிள்ளைகளுக்குள் ஏற்படும் நேசம், பள்ளிக் கல்லூரி அலுவலகம், குடும்ப உறவுகளுக்கும் ஏற்படும் அநியாய காதல் என்று எல்லா வகையும் குழப்பி பார்த்தாகிவிட்டது. பேய்க்கு கூட காதல் பிறந்திருக்கிறது இந்த யுகத்தில்.
சினிமாவில் மட்டுமல்ல, கார்ட்டூனில் கூட 7வயது பையன் 5வயதுப் பையனை எப்படி கரெக்ட் செய்வது என்பதை குழந்தைகள் மனதில் பதிய வைக்கிறார்கள். இதெற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற் போல் விளம்பரங்கள் இன்னபிற வெப்சைட்டுகள் என்று எத்தனையெத்தனை மனதைக் கலைக்க, இவையெல்லாம் மீறித்தான் நாம் பிள்ளைகளை வளர்க்க வேண்டியிருக்கிறது.
காதலுக்கு கண்ணில்லை என்பது பழைய வாதம் இப்போதைய காதல் எதார்த்தத்தை புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் நிஜம். ஒரு காதல் திரைப்படத்தின் கதாநாயகனாகவும், கதாநாயகியாகவும் தன்னை நினைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு பிள்ளைகள் தள்ளப்படுகிறார்கள். தன் தோழீகள் மற்றும் தோழர்களுக்கு மத்தியில் தனக்கு ஒரு காதலனோ காதலியோ இல்லையென்றால் கெளரவக் குறைச்சலாக கருதுகிறார்கள். சமூகத்தின் அவலங்களை அறியாப் பிள்ளைகளினால் பெற்றோர்களின் நிலைமைதான் மிகவும் மோசம்.
என்னிடம் ஒரு பெற்றோர் அவர்களின் பெண்ணை அழைத்துக் கொண்டு வந்தனர். இவள் என் மகள் பத்தாம் வகுப்பு படிக்கிறாள் நன்கு படிக்கும் பெண் ஆனால் தற்போது சில நாட்களாக மதிப்பெண்கள் கம்மியாகிறது அவளின் பழக்கவழக்கங்களும் நடவடிக்கைளும் சந்தேகத்தை உண்டு பண்ணுகிறது என்று கவலையோடு பேசினார் நான் அந்த பெண்ணைக் கூப்பிட்டு பேசினேன். ஆமாம் என் பெற்றோர் மிகவும் ஏழ்மைப்பட்டவர்கள், நான் கேட்கும் எதையும் அவர்களால் வாங்கித் தர இயலவில்லை, என் வகுப்புத் தோழிகள் அத்தனைபேரும் பகட்டுடோடு வலம் வரும்போது என்னால் மட்டும் எந்த சந்தோஷத்திலும் கலந்து கொள்ளமுடியவில்லை, அப்போது என் தோழி ஒருத்தி இப்படித்தான் நானும் இருந்தேன் என் பெற்றோரால் வாங்கித் தர முடியாததை என் காதலன் வாங்கித் தருவான் என்று சொன்னாள். அதன்பிறகு நானும் யோசித்து என் தோழியின் அண்ணனை விரும்புகிறேன் அவனும் நான் விரும்பும் இடங்களுக்கு எல்லாம் அழைத்துப்போவதோடு எனக்கு வேண்டியவற்றை வாங்கித் தருகிறான் என்றாள்.
இன்றைய காதல் படுத்தும் பாடு இப்போது புரிகிறதா ? இன்னொன்று எங்கள் பெற்றோர்கள் காதல் திருமணம் தான் புரிந்து கொண்டார்கள் நான் காதலித்தால் மட்டும் எதிர்க்கிறார்கள் என்று ஒரு இளம் ஜோடி....இருவிநாடி பார்த்தலும், அரைஇருட்டு தைரியத்தில் தொடுதலும், சில எச்சில் முத்தங்களும் கூட சில நேரங்களில் இந்த காதலுக்கு நம் பிள்ளைகளை அடிமைப்படுத்தி விடுகிறது. பிள்ளைகளே முதலில் உண்மைக் காதல் என்னவென்பதை உணருங்கள். விடிந்தும் விடிவதற்கும் முன்னாடி ஏதாவது பொய் சொல்லி துப்பட்டாவின் உபயத்தில் முகத்தை மறைத்துக் கொண்டு முதுகோடு முதுகாக பீச்ரோட்டில் பைக்கில் பறப்பது காதல் இல்லை, அரையிருட்டு சினிமா கொட்டகையில் இடுப்புவரையில் கை பரப்பி தைரியம் காண்பிப்பது காதல் இல்லை, ஒரே ஸ்டிராவில் ஜீஸ் குடிப்பதும், உதட்டு முத்தங்களும் உடல்களின் உரசல்களும் காதல் இல்லை இது ஹார்மோன் படுத்தும் பாடுதான்.
வெறும் இன ஈர்ப்புதான். அப்படியானால் எதுதான் காதல், நெஞ்சில் நேசம் முளைத்த பிறகு அதை வளர்க்க அந்த நேசத்தை அடைய, தன்னையும் தன்னைச் சார்ந்த பெண்ணையும் உயர்த்திக் கொள்கிறானே அதுதான் காதல். தானும் சீரழிந்து தன்னை பெற்றோர்களையும் அழித்துக் கொள்வது இல்லை காதல்.
காதலுக்கு எதிர்ப்பாய் இருந்த தாயை கொல்லும் பிள்ளைகள் தான் இப்போதைய காதலை வாழவைத்துக் கொண்டு இருக்கிறாள். சுயநலம் மிகுந்து விட்டது இப்போதைய காதலில்!
வாலெண்டின் மீம்ஸ்