மார்கழி பூஜை- திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி
திருப்பாவை - 25
ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,
தரிக்கிலானகித் தான்தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே? உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருகி யாகில்,
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
ஒப்பற்ற தேவகிக்கு மகனாகப் பிறந்த நீ, அன்று இரவிலேயே ஒப்பற்ற யசோதைக்கு மகனாகப் போனாய். உன் பிறப்புதான், கம்சனுக்குத் தெரியக் கூடாதென்று மறைக்கப்பட்டதென்றால், உன் வளர்ப்பும் அப்படியே அமைந்தது. அதனால் நீ, ஒளித்து வளர்க்கப் பட்டாய். அதைப் பொறுக்காத கம்சன், தானே, இக்குழந்தையைக் கொல்ல வேண்டும் என்று நினைத்துச் செய்த தீங்குகளை எல்லாம், நிறைவேறாத படிச் செய்தாய் நீ. தீயவனான அந்தக் கம்சனின் வயிற்றில், நெருப்பாக இருந்த பெருமாளே!
உன்னிடம் யாசகம் கேட்டு வந்திருக்கிறோம் நாங்கள். எங்கள் வேண்டுகோளை நீ நிறைவேற்றினால், லக்ஷ்மி தேவிக்கு ஈடான உன் செல்வத்தையும், உன் வீரத்தையும் நாங்கள் பாடுவோம். உன் பிரிவினால் உண்டான வருத்தமும், குளிரில் வந்த வருத்தமும் நீங்கி, நாங்கள் மகிழ்ச்சியடைந்து வாழுவோம்.
திருப்பள்ளியெழுச்சி - 5
பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக் கண்டறிவாரை!
சீதம்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரியாய்! எங்கள்முன்வந்து
ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டு அருள்புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!
விளக்கம்:
நீர் வளத்தால் குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறைக்கு அரசனாகச் சிவ பெருமான் கோவில் கொண்டிருக்கிறார். காண்பதற்கு மட்டுமல்ல, நமது சிந்தனைக்கும் அரிய அவர், தாமே முன்வந்து நமது குற்றங்கள், குறைபாடுகளைப் போக்கி நம்மை ஆட்கொள்ளக் கூடியவர்.
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களிலும், அவற்றால் உண்டான அனைத்து உயிர்களிலும் பொருட்களிலும் இறைவன் வியாபித்துள்ளார். ஆனால் இவற்றை விட்டு அவர் போவதில்லை என்றும், இவற்றை நோக்கி அவர் வரவில்லை என்றும் பலவாறாகப் புலவர்கள் பாடுகிறார்கள், ஆடுகிறார்களே தவிர, இறைவனைக் கண்ணாரக் கண்டதாக எவரும் கூறி நாம் கேட்டதில்லை. அவர் அறிதுயிலில் இருக்கிறார். அவரை எம்பெருமானே, எழுந்திருங்கள் என மாணிக்க வாசகர் பாடுகிறார்.