திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி
திருப்பாவை - 24
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.
விளக்கம்: கண்ணன் பாலகனாக இருந்தபோது செய்த வீரதீர சாகசங்களையும், வாமன அவதாரம் எடுத்தபோது, ராமாவதாரத்தின் போதும் செய்த செயல்களையும் போற்றி பாடுகிறாள் ஆண்டாள்.
மகாபலி இந்த உலகத்தை ஆண்ட போது தேவர்களுக்காக வாமன் அவதாரம் எடுத்து மூவடியால் உலகை அளந்தவனே உன் பாதங்களை போற்றுகிறோம். ராமாவதாரம் எடுத்த போது, சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வெற்றி கொண்டவனே! உன் வீரத்தைப் போற்றுகிறோம். சக்கர வடிவம் எடுத்து சகடா சூரன் அழியும் படி காலால் உதைத்தவனே உன்னுடைய புகழை போற்றுகிறோம்.
கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே! உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு மங்களம் உண்டாகட்டும். கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே! உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறோம்.பகைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களை உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே! அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம். உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம்.
இந்த பாசுரம் மிக முக்கியமானது. இதை தினமும் நாம் பாராயணம் செய்யலாம். இந்த பாசுரத்தை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து, கண்ணன் பாலகனாக இருந்த போது நிகழ்த்திய வீரச்செயல்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இதன் மூலம் அவர்கள் தைரியத்தை வளர்த்துக் கொள்வார்கள்.
திருப்பள்ளியெழுச்சி - 4
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
விளக்கம்:
திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே! இந்த அதிகாலைப் பொழுதில் வீணைக்கலைஞர்களும், யாழ் வாசிப்பவர்களும் இசை எழுப்பியபடி ஒருபுறம் நிற்கிறார்கள். ரிக் உள்ளிட்ட வேதங் களால் உன்னை வணங்குவோரும், தோத்திரப்பாடல்களைப் பாடுவோரும் ஒருபுறம் உன் சிறப்பைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். கையில் நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட மலர்மாலைகளுடன் உன்னுடைய பக்தர்கள் ஒருபுறம் நிற்கிறார்கள். வணங்குவோரும், கண்களில் கண்ணீர் பெருக பிரார்த்திப்போரும், உன்னை நினைத்து நெகிழ்ந்து மயங்கியவர்களுமாக சிலர் ஒருபுறம் இருக்கிறார்கள். தலையில் கைகூப்பி நீயே சரணாகதி என்று சொல்வோர் ஒருபுறம் காத்திருக்கிறார்கள். இப்பேர்ப்பட்டவர்கள் இருக்கையில், எளியவனான எனக்கும் அருள் செய்யும் என் இறைவனே! பள்ளி எழுந்தருள்வாயே!