மார்கழி பூஜை: திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள்
திருப்பாவை பாடல் - 3
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.
விளக்கம் :
இந்தப் பாடலில் வாமன அவதாரத்தை பாடுகிறாள் ஆண்டாள். திருமாலின் பாதம் பட்டால் மோட்சம் நிச்சயம். அதனால், அதை உத்தம அவதாரம் என்று வேறு போற்றுகிறாள். பகவானை வணங்கினால் எல்லா வளமும் சித்திக்கும் என்கிறாள் ஆண்டாள்.
ஓங்கி உலகளந்த உத்தமன் புகழைப் பாடி நீராடி, பாவை நோன்பு இருந்து வழிபட்டால், தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பொழியும். அதாவது எந்த ஒரு சேதத்தையும் பயிர்களுக்கோ, மனிதர்களுக்கோ, இதர ஜீவராசிகளுக்கோ ஏற்படுத்தாதபடி அளவோடு மழை பெய்யுமாம். அப்படி மழை வளத்தால் வயல்களில் செழித்து வளர்ந்திருக்கும் நெற்பயிர்களின் ஊடாக தேங்கி இருக்கும் நீரில் மீன்கள் துள்ளி நீந்தியபடி இருக்குமாம்.
தேன் நிறைந்த பூக்களில் எல்லாம் தேனைப் பருகுவதற்காக திரிந்துகொண்டிருக்குமாம். வீடுகளில் கட்டப்பட்டு இருக்கும் பசுக்கள்கூட, தங்கள் கன்றுக்கு ஊட்டியது போக, கறப்பவர்களுக்கு அவர்களுடைய குடம் நிறையும்படி பாலமுதைப் பொழியும் என்கிறாள் ஆண்டாள்.
திருவெம்பாவை - பாடல் 3
முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்
அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே
எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்
விளக்கம்:
ஒருநாள் கோயிலுக்கு போவது, ஆண்டவனை விழுந்து விழுந்து வணங்குவது, மறுநாள் ஏதோ விரக்தியில் அல்லது எதிர்பார்ப்பு நிறை வேறாமல் போனதும் அவனை வணங்குவதை விட்டுவிடுவது...இதெல்லாம் நிஜ பக்தியாக முடியாது என்கிறது இந்த பாடல்.
முத்தைப் போன்ற வெண்மையான பற்களை உடையவளே... நாள் தோறும் நீ எங்கள் முன்பு வந்து இறைவனைப் பற்றி அவன் அமுதம் போன்றவன் என்று வாய் அன்னம் தித்திக்கும் படியாக பேசுவாய்... இனிமையாக பேசுவாய்... இப்போதோ உறங்குகிறாய். எழுந்து வந்து உன் வாயிற் கதவைத் திறவாய் என்று வீட்டிற்கு வெளியே நின்று உறங்கும் பெண்ணை எழுப்புகின்றனர்.
அதற்கு அவளோ... பற்றுடையவர்களே... இறைவனிடத்தில் பேரன்புடைவர்களே... நீங்கள் சிவனது பழைய பக்தர்கள்... உங்களுக்கு நோன்பு என்றால் என்னவென்று தெரியும்... நான் புதியவள்... என்னுடைய தவறை பொறுத்து எனக்கு நீங்கள் கற்றுக்கொடுத்தால் அது தீங்காகிவிடுமோ என்று கேட்கிறாள்.
அதற்கு வெளியில் இருக்கும் பெண்களோ... இறைவன் மீது நீ எத்தகைய அன்பு வைத்திருக்கிறாய் என்று எங்களுக்கும் தெரியும்... உன்னுடைய அன்புக்கு முன்னால் இந்த செய்முறை தெரியாவிட்டால் இது பெரிய விசயமா? பரவாயில்லை என்று கேட்கின்றனர்.
அதற்கு உறங்கும் பெண்ணோ... சித்தம் தூய்மையாக இருந்தால் சிவனைத்தானே பாடவேண்டும் என்று கேட்கிறாள். ஆனால் என்னைப்பற்றி ஏன் பேசுகிறீர்கள் என்றும் அவள் கேட்கிறாள்.
அதற்கு வெளியில் இருக்கும் பெண்களோ... உன்னை எழுப்ப வந்த பெண்களுக்கு இதுவும் வேண்டும்... இன்னமும் வேண்டும் என்று கூறுகின்றனர். இறைவனை பாடவும் நோன்பு நோக்கவும் எழுப்புவதாகவும், அதற்கு உறங்கும் பெண் பதிலளிப்பது போலவும் அமைகிறது இந்த பாடல்.