திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி
திருப்பாவை - 29
சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்;
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நா மாட்செய்வோம்;
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை பாதங்களை வணங்க வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தைக் கேள்! பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதே! நீ தரும் சிறு பொருட்களுக்காக இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை. காலம் உள்ளவரை, ஏழேழு பிறவிகளுக்கும் உன்னோடு நாங்கள் இப்போது இருப்பதைப் போன்ற அதே அன்போடும், உறவோடும் இருக்க வேண்டும். உனக்கு மட்டுமே நாங்கள் அடிமைகளாக இருக்க வேண்டும். அதை மட்டுமே எங்களுக்கு அளித்து அருள் புரிவாயாக.
திருப்பாவை - 30
வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை, அணி புதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய்.
விளக்கம் : திருப்பாற்கடலை தேவர்களுக்காகக் கடைந்த பெருமான் கண்ணனை, சந்திரன் போன்ற அழகிய முகமும் ஆபரணங்களையும் உடைய ஆய்ச்சியர் அடைந்து வணங்கிப் பாடினர். திருவாய்ப்பாடியில் தாங்கள் பறையாகிய பேற்றைப் பெற்ற அந்த விருத்தாந்தத்தை, திருவில்லிபுத்தூரில் அவதரித்த பசுமை பொருந்திய தாமரை மலர்களினால் ஆன குளிர்ந்த மாலையை உடைய பெரியாழ்வாரின் திருமகளார் ஆண்டாள் அருளிச் செய்தார். ஆண்டாள் நாச்சியார் நல்கிய இந்த முப்பது பாவைப் பாடல்களையும் பாடி வருபவர்கள், சிவந்த கண்களையும், அழகு பொருந்திய முகத்தையும், நீண்ட தோளினையும் உடைய திருமாலின் அருள் பெற்று, இந்தப் பிறவி மட்டுமல்லாமல் அடுத்த பிறவியையும் பெற்று இன்புற்று வாழ்வார்கள்.
திருப்பள்ளியெழுச்சி - 9
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே! உன் தொழுப்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச் செய்தோனே!
வண் திருப்பெருந்துறையாய்! வழியடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே!
கடலமுதே! கரும்பே! விரும்பும் அடியார்
எண்ணகத்தாய்! உலகுக்கு உயிரானாய்!
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!
விளக்கம்:
விண்ணுலகிலுள்ள தேவர்களாலும் நெருங்க முடியாத மேலான சிவபெருமானே! வளம் நிறைந்த திருப்பெருந்துறையில் வசிப்பவனே! உனக்கு பணி செய்யும் அடியவர்களை மண்ணுலகில் வந்து வாழச் செய்தவனே! பரம்பரை பரம்பரையாக உனக்கு தொண்டு செய்யும் அடியவர்களின் கண்களில் அகலாது நின்று, இன்பம் தருகின்ற இனிய தேனே! பாற்கடலில் கிடைத்த அமுதமே! கரும்பினும் இனியவனே! உன்னை வணங்கும் அடியவர்களின் எண்ணங்களில் நீக்கமற நிறைந்திருப்பவனே! இந்த உலகத்தின் உயிராகிய எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயே!
திருப்பள்ளியெழுச்சி - 10
புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்றவாறென்று நோக்கி
திருப்பெருந்துறையுறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும்
நின்னலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!
விளக்கம்: திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! பூமியில் பிறந்த அடியார்களெல்லாம் சிவனால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். ஆனால், நாம் பூமியில் பிறக்காத காரணத்தால் வீணாக நாளை போக்குகின்றோம் என்று திருமாலும், அவனது உந்தித்தாமரையில் பிறந்த பிரம்மாவும் வருந்துகின்றனர். நீயோ, உன்னுடைய பரந்த கருணையினால் எங்களை ஆட்கொள்ளவென இந்த புவியில் எழுந்தருளி எங்களை ஆட்கொள்ள வல்லவனாயிருக்கிறாய்! அரிதான இனிய அமுதத்தை ஒத்தவனே! பள்ளி எழுந்தருள்வாயாக!