For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருப்பாவை, திருவெம்பாவை -13

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருப்பாவை - 13

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண்! போது அரிக்கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்த்து கலந்து ஏல் ஓர் எம்பாவாய்.

Sri Andal's thiruppavai

விளக்கம்:

பறவை வடிவம் கொண்டு வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அழிக்கவும், சீதையை கவர்ந்து போய் பிறன் மனை நாடிய ராவணனின் தலையைக் கொய்யவும் அவதாரம் எடுத்த நாராயணனின் புகழைப் பாடிய படியே, நம் தோழியர் எல்லாரும் பாவை விரதம் இருக்கும் இடத்திற்கு சென்று விட்டனர். கீழ்வானத்தில் வெள்ளி முளைத்து விட்டது. வியாழன் மறைந்து விட்டது. பறவைகள் கீச்சிட்டு பாடுகின்றன. தாமரை மலர் போன்ற கண்களையுடைய பெண்ணே! விடியலை உணர்த்தும் இந்த அறிகுறிகள் தெரிந்தும் உடல் நடுங்கும்படி, குளிர்ந்த நீரில் நீச்சலடித்து குளிக்க வராமல் என்ன செய்கிறாய்? அந்தக் கண்ணனை நினைக்கும் ஒவ்வொரு நாளும் நன்னாளே! மார்கழியில் அவனை நினைப்பது இன்னும் சிறப்பல்லவா? எனவே, தூக்கம் என்கிற திருட்டை தவிர்த்து எங்களுடன் நீராட வா என்று படுக்கையில் இருக்கும் பெண்ணை எழுப்புகின்றனர்.

திருவெம்பாவை - 13

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.

விளக்கம் :

நீர் நிரம்பிய குளத்தில் பசுமையும், கருமையும் கலந்த குவளை மலர்கள் உள்ளன அவை அன்னை பார்வதியைப் போல உள்ளன. அதில் பூத்துள்ள செந்தாமரை மலர்கள் எம்பெருமானின் செந்நிற மேனியை நினைவுபடுத்துகின்றன. இங்கே பறவைகளினால் பல தரப்பட்ட ஒலி உண்டாகிறது. உடலில் உள்ள அழுக்கைப் போக்க பலர் நீராட வருகிறார்கள். ஆகவே இந்தப் பொய்கை எமது இறைவியும், இறைவனும் இணைந்தது போல் காணப்படுகிறது. இத்தகைய பொய்கையில் பாய்ந்து, பாய்ந்து கைகளில் அணிந்துள்ள வளையல்கள் ஒலிக்கவும், காற்சிலம்புகள் கலந்து ஆரவாரம் செய்யவும், கொள்ளும் கைகள் பூரிப்படையவும், அந்த கைகளால் குடைகின்ற பொய்கை நீர் மேலோங்கவும், இந்த தாமரைப் பூங்குளத்து நீரில் பாய்ந்து நீராடுவோம் எல்லோரும் பாவை விளையாடுவோம்.

English summary
Sri Andal, One of the twelve Alwars and the only female saintess, lived in the first half of 8th century A.D. Andal imagined herself as a cow-girl at the time of Sir Krishna, collecting all girls at Ayarpadi at dawn during the Margazhi month, day after day performing the ritual on the banks of the river Yamun
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X