தைவான் தமிழ் சங்கத்தின் பொங்கல் திருவிழா.. அனைவரும் வருக
தைபே, தைவான்: தைவான் தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா நடைபெறவுள்ளது.
உலகெங்கும் வியாபித்துள்ள தமிழர்கள் தங்களின் அடையாளத்தை எங்கிருந்த போதிலும் மறந்திருப்பது இல்லை. அவ்வண்ணம் கிழக்காசியாவின் வளர்ந்த நாடுகளில் ஒன்றான தைவானில் இருந்து "தைவான் தமிழ்ச் சங்கம்" சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னர் தைவான் அரசாங்கமானது தைவான் தமிழ் சங்கத்தை முறையாக அங்கீகரித்து, பதிவு செய்துள்ளது. அத்துடன் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகமும் 2017ம் ஆண்டின் 'தொல்காப்பியர்' விருதிற்காக சிறந்த தமிழ்ச் சங்கமாக 'தைவான் தமிழ்ச் சங்கத்தினை' தேர்ந்தெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
தைவான் தமிழ்ச்சங்கத்தின் ஆறாம் ஆண்டு தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் கொண்டாட்டம் வரும் சனவரி மாதம் ஆறாம் நாள் (06-01-2018) காரிகை நாளில் மாலை நான்கு மணியளவில் தைபே நகரத்தில் உள்ள பூ ஜென் பல்கலைக்கழகத்தில் நடக்க இருக்கிறது. தன் தமிழ்த் தொண்டுக்காக தமிழக அரசின் திருவள்ளுவர் விருதினையும், தஞ்சை பல்கலைகழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற தைவான் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் யூசி அவர்கள் மற்றும் தைவானின் இந்திய தைபே அசோசியேசனின் (India Taipei Assosication) முதன்மை இயக்குனர் ஸ்ரீதரன் மதுசூதனன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி தமிழர் திருநாளை சிறப்பிக்க உள்ளனர்.
தைவானில் தமிழ் மற்றும் இந்திய மக்களிடையே பேசும் ஆற்றலை ஊக்குவிக்கும் விதமாக அதிவிரைவு (3 நிமிட பேச்சு போட்டி) பேச்சுதிறன் போட்டி ஒன்றினை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தி, போட்டியில் சிறப்புற பேசும் மாணவர்களுக்கு பரிசுடன் பாராட்டு பத்திரம் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. மேலும் தைவானில் தமிழ் பேசும் மக்களை பேச்சு திறனில் ஒருங்கிணைக்கும் விதமாக "தமிழர் திருநாள் சிறப்பு பட்டி மன்றம்" ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.
தைவான் வாழ் தமிழ் மக்களோடு, தைவான் மற்றும் பிற நாட்டு மக்களும் சங்கமித்து குதூகலத்துடன் கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா- 2018 கொண்டாட்டத்தில் அனைத்து தமிழ் உறவுகளும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்க தைவான் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக அன்புடன் அழைக்கின்றோம்.