தமிழோடு உறவாடு.. தைவான் தமிழ்ச் சங்கத்தின் தமிழ் இலக்கிய அமர்வு
தைபே: தைவான் தமிழ்ச் சங்கம் சார்பில் அங்கு தமிழ் இலக்கிய அமர்வு சிறப்பாக நடைபெற்றது. தமிழோடு உறவாடு என்ற பெயரில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தைவானில் தமிழ்ச் சங்கம் 2013 ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வருகிறது. தைவான் வாழ் தமிழர்களிடையே இலக்கிய ஆர்வத்தை தூண்டவும், அவர்களின் பேச்சாற்றலை அதிகரிக்கவும் இலக்கிய கூட்டங்கள் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டு அதன் முதல் இலக்கிய அமர்வு ஜூலை மாதம் 2017ல் தைபேயில் உள்ள தைவான் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் (National Taiwan university of Science and Technology) நடந்தது. முதலாம் தமிழ் இலக்கிய கூட்டத்தை சங்கர் ராமன் அவர்கள் தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தை முனைவர் பிரசன்னன் அவர்கள் அவை முன்னவராக இருந்து வழிநடத்தினார்.
இதில் "தமிழோடு உறவாடு' என்ற தலைப்பில் தேசிய மைய பல்கலைக்கழகம் (National central University) ஷொங்லி இருந்து முனைவர் திருமாவளவன் அவர்கள் பேசினார். எப்பொழுது ஆற்றங்கரை நாகரீகம் தோன்றியதோ அந்த ஆற்றங்கரை நாகரீக கலாச்சாரத்தை கவிதை வடிவில் தந்தது தமிழ் மொழி. ஒருவருடைய எண்ணங்கள், பார்க்கும் விசயத்தை பகிர்தல், காதல், அழுகை, வெற்றி என்று அனைத்தையும் உணர்வுப்பூர்வமாக வெளியிட தமிழ் மொழியால் மட்டுமே முடியும், மற்ற மொழிகள் வெறும் பேச்சு மொழியாக மட்டுமே இருக்கும்.
வள்ளுவர் சிறந்த உதாரணம்
இக்காலத்தில் ஒருவர் ஒரே துறையில் மட்டுமே சிறந்து விளங்குகிறார்கள். ஆனால் நம் பழந்தமிழர்கள் ஒன்றிற்கு மேற்பட்ட துறைகளில் சிறந்து விளங்கினார்கள். வள்ளுவரையே எடுத்துக்கொண்டால் அவர் ஒருவரால் எப்படி இத்தனை விசயங்களை எழுத முடிந்தது. அதற்கு அவருக்கு தமிழ் மொழிமீது இருந்த பற்றுதலே காரணம். காதலை சொன்ன தமிழ் தான் வீரம் தர்க்கம் என்று அனைத்தையும் சொல்கிறது. உலகமொழிகளிலே தமிழுக்கு மட்டும் தான் வாழ்த்துப்பா இருக்கிறது. "கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்" என்பார்கள் அது போல் தமிழோடு உறவாட, உறவாட அதுவே அத்தனையும் கற்றுக்கொடுக்கும் என்று கூறினார்.
தமிழும் நானும்
"தமிழும் நானும்" என்ற தலைப்பில் ஹுவாலியன் பல்கலைகழக ஆராய்ச்சி பட்ட மாணவர் தயானந்த பிரபு பேசும் போது, என்னுடைய தாய் மொழி வேறு மொழியாக இருந்தாலும் ஒருவர் எந்த மொழியில் பேசுகிறாரோ, எழுதுகிறாரோ, சிந்திக்கிறாரோ அவருடைய தாய்மொழியானது அந்த மொழியே. இதை கருத்தில் கொண்டால் என்னுடைய தாய்மொழியும் தமிழே!. தமிழ் மொழியின்பால் என்னுடைய ஈர்ப்பு அதிகமானதற்கு என்னுடைய தந்தையே காரணம். அவர் பேசிய நடிகர் சிவாஜி அவர்களின் வசனங்கள், உச்சரிப்பே காரணம். அடுத்து வானொலியில் பேசுகின்ற தென்கட்சி சுவாமிநாதன் அவர்களிடம் இருந்தும், மற்றும் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண் சாமி அவர்களிடம் இருந்தே இப்படி எல்லாம் பேசலாம் என்று கற்றுக்கொண்டேன். முதன் முதலில் படித்த இறையன்பு இஆபா அவர்களின் புத்தகம் என்னை தமிழை மேலும் படிக்க தூண்டியது. சித்திரக்கதைகள், ஜெயகாந்தன், நாஞ்சில்நாடன் என்று படிப்பார்வம் அதிகரித்தது. கதைகள் கேட்பதன் மூலமும் சொல்வதன் மூலமும் எண்ணங்களானது மொழி ஆளுமையை கொடுக்கும். தற்பொழுது நேனோ தொழில்நுட்பம் வந்திருக்கிறது. ஈராயிரம் வருடங்களுக்கு முன்னரே வள்ளுவன் நேனோ நுட்பம் தெரிந்து வைத்திருந்திருக்கிறார். அனைத்து குறளையும் படிக்க வேண்டாம், அதில் தேர்ந்தெடுத்த 5 குறள்கள் வழி வாழ்ந்தாளே போதும் என்று கூறினார்.
தமிழ் மொழியியல்
"தமிழ் மொழியியல்" என்ற தலைப்பில் ஷிஞ்சு பல்கலைகழக ஆராய்ச்சி பட்ட மாணவர் வசந்தன் திருநாவுக்கரசு பேசினார். மனித இனம் எப்படி பரிணமித்து இப்போதய நிலைக்கு வந்ததோ அது போன்று தமிழ் மொழியும் பரிணமித்து தற்பொழுதய எழுத்துரு வடிவத்தை அடைந்திருக்கிறது. தமிழ் மொழியானது கல்வெட்டுகள், பனை ஓலைகளில் எழுதப்பட்டுள்ளது. இத்தகைய எழுத்துருவை நம்மால் இப்பொழுது வாசிக்கமுடியாது. நம்மால் வாசிக்க முடிந்தது அனைத்தும் அச்சு நூல்கள் மட்டுமே. தற்பொழுது கணினியில் நன்றியை (Nantri) என்றும் வணக்கத்தை (Vanakkam) என்றும் குறிப்பிட்டுகிறோம். இப்படி போய்கொண்டிருந்தால் தங்கிலீஷ் என்ற தனி மொழி உருவாகிவிடும். ஆனால், சில ஆப்ரிக்க மொழி தங்களுடைய எழுத்துவடிவத்தை தற்பொழுது இழந்து ரோமன் எழுத்துக்கு மாறியது போல் நாமும் நம்முடைய தனித்துவ எழுத்து வடிவத்தை இழக்க நேரிடும். எனவே நாம் நம்முடைய அடுத்த கணினி தலைமுறைக்கு நம்முடைய தமிழ்
கவிக்கோவுக்கு அஞ்சலி
மொழியை, உணர்ச்சி, பொருள், நயம், வடிவம் அனைத்துடனும் கடத்தவேண்டும். கூடிய மட்டும் அனைவரும் கணினியில் தமிழ் எழுத்து வடிவிலே எழுத முயற்சி செய்யுங்கள் என்று கூறினார். "கவிக்கோ" அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பூலி பல்கலைகழகத்தில் இருந்து முனைவர் வினாயகம் அவர்கள் பேசினார். கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்கள் தனித்துவமான கவிஞர். இலக்கிய நடையில் கவிதை எழுதிகொண்டிருந்த காலத்தில் ஏன் புதுக்கவிதை எழுத கூடாது என்று கூறி அதற்கு தனி இலக்கணமே படைத்தவர். அவருக்கு சினிமாவில் பாட்டெழுத வந்த வாய்ப்புகளை "அம்மி கொத்த சிற்பி எதற்கு" என்று கூறி புறம்தள்ளினார். கவிக்கோ அவர்களின் சாகித்ய அகடாமி விருது பெற்ற "கொடுத்தல்" என்ற கவிதையை வாசித்து காட்டினார். "உதிரும் சிறகுகள்" என்ற கவிதையில் மனித வாழ்க்கை இவ்வளவு தான் என்பது போன்று சில வரிகளில் எழுதியதை சிலாகித்தார். ஒரு முறை இளையராஜா அவர்கள்
"தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது" என்ற குறள் கவிக்கோ அவர்களுக்கு சாலப்பொருந்தும் என்று பேசியதாக குறிப்பிட்டார். அவர் வாழும் காலத்தில் அவருக்கு சரியான பாராட்டுக்கள் கிடைக்கவில்லை என்று அஞ்சலி உரையை முடித்தார்.
இந்நிகழ்ச்சியில் தைவான் தமிழ்சங்க நிர்வாகிகள், தைவான் வாழ் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தைவான் வாழ் தமிழ் மாணவர்கள் பங்கேற்றார்கள்.