பேரவை தமிழ்விழாவில் இணையமர்வு.. அமெரிக்க பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் அசத்தல்!
அமெரிக்க பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் சார்பில் டெக்ஸாஸில் நடைபெற்ற பேரவை தமிழ்விழாவில் இணையமர்வு நிகழ்ச்சி நெறிப்படுத்தப்பட்டது.
டெக்ஸாஸ்: அமெரிக்க பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் சார்பில் டெக்ஸாஸில் நடைபெற்ற பேரவை தமிழ் விழாவில் இணையமர்வு நிகழ்ச்சி நெறிப்படுத்தப்பட்டது.
டெக்ஸாஸ் மாநிலம் , டாலஸ் மாநகரில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 31ஆவது தமிழ் விழாவில் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் - அமெரிக்கா அமைப்பின் இணையமர்வு ஜூலை முதலாம் நாளன்று சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஓவியர் மருது , கவிஞர் அறிவுமதி, பேராசிரியர் உல்ரிக் நிக்கல்ஸ ,பதிப்பாளர் ஒளிவண்ணன் உள்ளிட்ட தோழர்களுடன் பொதுமக்களும் அரங்கம் நிரம்பக் கலந்துகொண்டனர்.
தோழர் கார்த்திகேயன் தெய்வீகராஜன் வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சியைத் துவக்கி வைக்க, நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்கள் பயனாடை அணிவிக்கப்பட்டுச் சிறப்புச் செய்யப்பட்டார். இவர்களுடன், படிப்பு வட்டத்தின் வலைதளத்தைக் கட்டமைத்து நிறுவிய தோழர் சௌந்தர், பெரியார் பன்னாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் சோம. இளங்கோவன் ஆகியோரும் பயனாடை அணிவித்துச் சிறப்புச் செய்யப்பட்டனர்.
படிப்பு வட்டத்தின் கடந்த ஆண்டுச் செயற்பாடுகளையும் அடுத்த ஆண்டிற்கான செயற்திட்டங்களையும் விளக்கியதோடு இணையமர்வு நிகழ்ச்சியையும் தோழர் கனிமொழி நெறிப்படுத்தினார். ஓவியர் மருது வரைந்த பெரியார் அம்பேத்கர் உருவப்படம் பொறித்த பனியனை படிப்பு வட்டத்தினர் வெளியிட்டனர் .
இதனை ஓவியர் மருது அவர்கள் பெரிதும் பாராட்டி அந்த ஓவியம் வரையப்பட்ட சூழல் குறித்தும் பெரியார்-அம்பேத்கர் குறித்தான தனது கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார். திராவிடமும் தமிழ்த்தேசியமும் ஒன்றுதான்; வெவ்வேறல்ல என்றும், இரண்டிற்கும் இடையான முரண்கள் களையப்பட்டு நாம் அனைவரும் ஒற்றைப்புள்ளியில் நின்று நம் மக்களுக்கான நல்ல செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்று கவிஞர் அறிவுமதி அறிவுறுத்தினார்.
மேலும் மருத்துவர் சோம இளங்கோவன், பேராசிரியர் உல்ரிக் நிக்கல்ஸ ,பதிப்பாளர் ஒளிவண்ணன் , உள்ளிட்டோர் உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து பங்கேற்பாளர்களும் தங்கள் வினாக்களையும் கருத்துகளையும் பகிர்ந்துகொண்டு கலந்துரையாடினர். இறுதியாக முனைவர் ரவிசங்கர் கண்ணபிரான் நன்றியுரை வழங்கினார்.
தோழர் மதிவாணன் அவர்களின் ஒருங்கிணைப்பில் ஜூன் 30, ஜூலை 1 ஆகிய நாட்களில் படிப்பு வட்டத்தின் புத்தக அங்காடி இடம்பெற்றது. இதில் பகுத்தறிவு சார்ந்த புத்தகங்களுடன் பெரியார் அம்பேத்கர் இலச்சினை பொறித்த பனியங்களும் இடம்பெற்றன. விழாவின் இறுதி நாளான ஜூலை-2 ஆம் நாள் பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக "Globalizing Periyar " என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பெரியாரின் தத்துவங்களை உலகம் முழுக்கக் கொண்டு செல்வதற்காக வழிமுறைகள் குறித்து, அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சோம.இளங்கோவன் தலைமையில் ஆலோசிக்கப்பட்டது.
பேரவை விழாவில் கலந்துகொண்ட பலரும் படிப்பு வட்டத்தின் செயற்பாடுகளைப் பாராட்டியதோடு, தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்காக ஊக்கங்களையும் வழங்கினர். அறிவாசான்கள் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் தத்துவங்களின் உதவியோடு, பகுத்தறிவுக் கோட்பாட்டைப் பொது மைய நீரோட்டத்தில் கொண்டுசெல்வதற்கான செயற்திட்டங்களைப் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்- அமெரிக்கா அமைப்பு தொடர்ந்து முன்னெடுக்குமென்று படிப்பு வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.