சிங்கப்பூரில் தமிழர் அறிவியலை போற்றி தமிழ் மொழி விழா கொண்டாட்டம்
சிங்கப்பூரில் தமிழ் மொழி விழா கொண்டாடப்பட்டது.
சிங்கப்பூர்: வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் தமிழ் அமைப்புகள் பல ஒன்றிணைந்து சிங்கப்பூரில் தமிழ் மொழி விழாவை நடத்தின.
சிங்கப்பூர் அண்ணாமலைப் பல்கலைக் கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் தமிழ் மொழி விழா கொண்டாடப்பட்டது. தமிழர்களின் அறிவியல் சார்ந்த முற்போக்கு சிந்தனைகள் மற்றும் வாழ்வியல் முறைகளை உலகம் உள்ள வரை போற்றும் விதமாகவும், இளையோர்களின் தமிழ் மொழி ஆர்வத்தை மேலும் ஊக்குவித்து அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் "தமிழர் அறிவியல்" என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்பட்டன.
கட்டடக் கலை, மருத்துவம் போன்ற தலைப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து உயர்நிலை, தொடக்கக்கல்லூரி மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 30க்கும் மேற்பட்ட குழுக்களிலிருந்து சிறந்த 2 படைப்புகள் நேற்று உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் படைக்கப்பட்டன. தொடக்கக் கல்லூரிப் பிரிவில் முதல் பரிசை குளோபல் அனைத்துலக இந்தியப் பள்ளி (Global Indian International) வென்றது. உயர்நிலைப் பள்ளிப் பிரிவில் துமாசிக் தொடக்கக் கல்லூரியின் IP திட்டத்தில் பயிலும் உயர்நிலை 2 வகுப்பு மாணவர்கள் முதல் பரிசை வென்றனர். இந்தப் போட்டி தங்களுக்குத் தமிழ்மொழியிலும் வரலாற்றிலும் அதிக ஆர்வத்தைத் தூண்டியதாக மாணவர்கள் கூறினர்.
இந்நிகழ்வில் தமிழக ஐஏஎஸ் அதிகாரி வெ.இறையன்பு சிறப்புரையாற்றுகையில், தமிழர்களின் அறிவியல் இன்றளவும் எவ்வாறு அனைத்து துறைகளிலும் (கட்டிடக்கலை, உழவுத்தொழில், வானவியல், கடல்சார் அறிவியல் மற்றும் பல துறைகள்) பயன்பாட்டில் உள்ளதையும், சங்ககால இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள தமிழர்களின் அறிவியலை மேற்கோள்காட்டியும், நவீன அறிவியலில் இன்றைய காலத்தில் வளர்ந்த நாடுகள் கூட தமிழனின் பேரானந்த நடனத்தினை போற்றி கொண்டாடுவதிலிருந்தே தமிழர்கள் அறிவியல் அறிவை அறியலாம் என்றார்.
வளர்தமிழ் இயக்கத்தின் துணைத் தலைவர் நஷீர் கனி உட்பட பல்வேறு தமிழ் அமைப்புகளை சார்ந்தவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முன்னாள் மாணவர்கள் சங்க உறுப்பினர்களின் குடும்பத்தார்கள் அனைவரும் பங்கேற்றனர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முன்னாள் மாணவர்கள் சங்கம் சிங்கப்பூரின் தலைவர் அ.இளங்கோவன் வரவேற்புரையாற்றினார். சங்கத்தின் செயலாளர் சங்கர் நன்றியுரையை வழங்கினார்.
வ.வடிவேல்