டல்லாஸில் தமிழ் இசை... அசத்திய அமெரிக்கக் குழந்தைகள்!
டல்லாஸ்(யு.எஸ்): அமெரிக்காவில் குழந்தைகள் மழலைத் தமிழ் பேசினாலே பெருமை கொண்ட காலம் போய், தமிழ்ப் பள்ளிகளில் படிப்பது சாதாரணமாகி விட்ட நிலையில், திருக்குறள் ஒப்புவிக்கும் அளவுக்கு உயர்ந்து, தற்போது தமிழ் இசையிலும் அசத்தி வருகிறார்கள்.
இந்த ஆண்டு டல்லாஸில் நடந்த தமிழ் இசை நிகழ்ச்சியில் ஏராளமான தமிழ்க் குழந்தைகள் பங்கேற்றுப் பாடினர்.
தமிழ் இசையின் தலை நகரம்
அமெரிக்காவில் உள்ள க்ளீவ்லேண்ட் நகரில் ஆண்டு தோறும் தமிழகத்தின் திருவையாறு போல் கர்நாடக சங்கீத உற்சவம் நடைபெற்று வருகிறது. அங்கு தெலுங்கு தமிழ் கன்னடம் உட்பட அனைத்து கீர்த்தனைகளும் பாடப்படுகின்றன. தமிழ் இசையில் மட்டுமே குழந்தைகள் பாடும் விழா நடத்த வேண்டும் என்ற முனைப்புடன் டல்லாஸ் அவ்வை தமிழ் மையம் இரண்டாவது ஆண்டாக தமிழ் இசை விழாவை நடத்தியது. சுமார் 90 குழந்தைகள் பங்கேற்ற இந்த விழாவில் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம், மழலைக் குரல்களில் தமிழ் இசை அருவியாக பொழிந்தது.
புரவலர் பால்பாண்டியன் நேரில் வாழ்த்து
அமெரிக்காவில் பல்வேறு தமிழ்த் தொண்டாற்றி வரும் புரவலர் பால் பாண்டியன் விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தினார். இசைக்கு மொழி தேவை இல்லாவிட்டாலும் மொழிக்கு இசை தேவை என்று குறிப்பிட்ட பால்பாண்டியன், தொல்காப்பியம் சங்க கால நூல்கள், காப்பியங்கள் சிலப்பதிகாரம் ஆகியவற்றில் தமிழ் இசை பற்றிய தகவல்கள் இருப்பதாகவும் கூறினார்.
விழா ஏற்பாட்டாளர்களையும், இசை ஆசிரியர்களையும் பாராட்டிய அவர், டல்லாஸில் தமிழ் இசை மென்மேலும் தழைத்தோங்கவும் வாழ்த்து தெரிவித்தார். ஃபெட்னா, தமிழ் நாடு அறக்கட்டளை, மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் ஆகிய வட அமெரிக்க தமிழ் அமைப்புகளை முன்னின்று உருவாக்கியவர் பால்பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் இசைக்கென தனியாக இன்னிசை அறக்கட்டளையை உருவாக்கி நடத்தி வருகிறார்.
புறநானுற்றுப் பாடலுடன் நிறைவு
வீணா இசைப்பள்ளி, நாகலட்சுமி இசைப்பள்ளி, கர்நாட்டிகா இசைப்பள்ளி, சப்த ஸ்வரா இசைப்பள்ளி, லலிதா இசைப்பள்ளி மற்றும் கோஸ்பல் தேவாலய இசைக் குழுமம் ஆகியவற்றில் இசை பயிலும் குழந்தைகள் பங்கேற்றனர். வெவ்வேறு ராகங்களுடனும் இசை அறிஞர்கள் பாடல்கள், பக்திப்பாடல்கள் என பல்வேறு பாடல்களுடனும், நடைபெற்ற விழா புற நானூற்றுப் பாடலுடன் நிறைவுபெற்றது.
பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் அன்ன மயில் என்ற மாணவி பாடிய இந்த புற நானுற்றுப் பாடல் அவையின் பலத்த கரகோஷத்துடன் வரவேற்பைப் பெற்றது.
ஆசிரியர்களுக்கு பால் பாண்டியன் நினைவுப் பரிசுகள் வழங்கினார்.
ஒக்லஹோமா தமிழ்ச் சங்கத்தை உருவாக்கிய பெரியவர் மாசிலாமணி, டல்லாஸ் தமிழ்ச் சங்கத் தலைவர் கீதா அருணாச்சலம், அவ்வைத் தமிழ் மையத்தின் நிர்வாகிகள் விவேக் வாசுதேவன், மோகன் தண்டபானி, சங்கர் சண்முகசுந்தரம், கேசவன் ஶ்ரீரங்கம், ஜெபா செல்வராஜ், ஶ்ரீதர் இராகவேந்திரன் ஆகியோர் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினர்.
அடுத்த ஆண்டும்
விவேக் வாசுதேவன் வரவேற்றார். அனிதா சங்கர் மற்றும் உமா விவேக் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். மோகன் தண்டபானி நன்றி கூறினார்.
அடுத்த ஆண்டு இன்னும் அதிக பங்கேற்பாளர்களை எதிர்ப்பார்ப்பதாக விழாக்குழுவினர் தெரிவித்தனர். ஆண்டு தோறும் இந்த விழா தொடர்வதன் மூலம் மூலம்,அமெரிக்காவில் தமிழ் இசையின் தலை நகரமாக டல்லாஸ் உருவெடுக்கும் என நம்பலாம்.