அபாகஸ் கணிதத்தில் புலி.. ஷார்ஜா அரசின் விருது பெற்ற தமிழ் மாணவர்!
அபாகஸ் கணிதத்தில் சிறந்து விளங்குவதற்காக ஷார்ஜா அரசின் விருதினை தமிழ் மாணவர் ஆதித்ய ஷர்மா பெற்றுள்ளார்.
ஷார்ஜா: அபாகஸ் கணிதத்தில் சிறந்து விளங்குவதற்காக ஷார்ஜா அரசின் விருதினை தமிழ் மாணவர் ஆதித்ய ஷர்மா பெற்றுள்ளார்.
இந்த விருதை ஷார்ஜாவின் பட்டத்து இளவரசரும், துணை ஆட்சியாளருமான ஷேக் சுல்தான் பின் முகம்மது சுல்தான் அல் காசிமி வழங்கி கௌரவித்தார்.
துபாயில் உள்ள அவர் ஓன் பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சுற்றுச்சூழல் மற்றும் படிப்பில் அதிக ஆர்வமுடன் திகழ்ந்து வருகிறார். இவர் படிப்பில் மட்டுமல்லாது, பழைய மொபைல் போன்களை சேகரித்து அதனை சுற்றுச்சூழல் அமைப்பில் ஒப்படைத்து வருகிறார். இதன் காரணமாக பழைய மொபைல் போன்கள் பாதுகாப்பான முறையில் மறுசுழற்சி செய்யப்படுகிறது.
அபாகஸ் எனப்படும் கணிதத்திறமையில் வல்லமையுடையவராக திகழ்ந்து வருகிறார். இதில் பத்து லெவல் வரை இந்த அபாகஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதன் காரணமாக எத்தகைய எண்களை கொடுத்தாலும் அதனை மனப்பாடமாக எளிதில் விடை கொடுக்கும் திறமையை பெற்றுள்ளவர் ஆவார்.
அமீரக அளவிலும், சர்வதேச அளவிலும் கணித ஒலிம்பிக் போட்டியில் முறையே 7 மற்றும் 85-வது இடங்களை பெற்றுள்ளார். மேலும் ஆஸ்திரேலியா கல்வி கவுன்சில் தேர்வுகளிலும் சிறப்பிடம் பெற்றுள்ளார். பள்ளிக்கூடத்தில் நடந்த வினாடி வினா போட்டியிலும், அமீரக அளவில் நடந்த வினாடி வினா போட்டியிலும் அதிகமான பரிசுகளை பெற்றுள்ளார்.
யுனிசெப் அமைப்பின் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் உலக அளவிலான கல்வி குறித்த விளையாட்டுப் போட்டியில் 3,148.14 புள்ளிகள் பெற்று அமீரக மாணவர்களிலேயே முக்கிய இடத்தை பெற்றிருப்பது தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பதாக இருந்து வருகிறது.
இவரது பெற்றோர் பெயர் ஸ்ரீராம் சர்மா மற்றும் ஹேமாவதி ஆகியோர் ஆவர். இதுபோன்ற பணிகளின் மூலம் சமூகத்தில் ஒரு முன்மாதிரி குடிமகனாக இருக்க வேண்டும் என்பதே தனது இலட்சியம் என தெரிவித்தார்.
இந்த ஆர்வம் காரணமாக இவரது சகோதரர் அமித் சர்மா பல்வேறு திறமைகளை கொண்டு இருந்து வருகிறார். இதற்காக அவர் இளைய சுற்றுச்சூழலாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். மேலும் படங்கள் வரைவதில் ஆர்வத்துடன் பங்கேற்று பரிசுகளையும் பெற்றுள்ளார்.
விருது பெற்ற மாணவருக்கு ஈமான் கல்சுரல் செண்டரின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான், அல் அய்ன் தமிழ் குடும்பத்தின் முபாரக் முஸ்தபா, இனிய திசைகள் மாத இதழின் ஆசிரியர் முனைவர் சே.மு.மு. முகமது அலி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.