ஆஸ்திரேலியாவைக் கலக்கிய தமிழ் விழா
பெர்த்: மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தின் பேர்த் மாநகரில் இயங்கிவரும் தெற்கு தமிழ்ப்பள்ளியின் வருடாந்திர தமிழ் விழா 23.11.2019 அன்று காலை 11 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை சிறப்புற நடைபெற்றது.
இந்நிகழ்வானது தமிழர்களின் மொழி, கலை, கலாசார மற்றும் பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்தும் வகையில் தெற்கு தமிழ்ப்பள்ளியால் மிகவும் சிறப்பாக ஒழுங்கமைக்கபட்டு வழங்கப்பட்டது.
ஆஸ்திரேலியா நாட்டின் தேசிய கீதத்துடனும் தமிழ் மொழி வாழ்த்துடனும் ஆரம்பிக்கப்பட்டு, அதனை தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவியான பறை வாத்தியம் மாணவர்களால் இசைக்கப்பட்டது.
மேலும் ஆடல், பாடல், நாடகம், விவாத மேடை, வில்லுப்பாட்டு போன்ற பல நிகழ்வுகளை உள்ளடக்கியதாக அமைந்த நிகழ்வில் அந்தப் பள்ளியில் தமிழ் பயிலும் சுமார் 350 வரையிலான சிறார்கள் பங்குகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இப்பள்ளியில் தன்னார்வ தொண்டர்களாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் மாணவர்களை திறம்பட பயிற்றுவித்து ஒவ்வொரு நிகழ்ச்சியையும் சிறப்பாக வடிவமைத்து இருந்தனர்.
பெரும் திரளான தமிழர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் தமிழர்களின் பாரம்பரியங்கள் மிகச் சிறப்பாக தத்ரூபமாக நம் கண் முன்பு கொண்டு வரப்பட்டது பார்க்கவே அத்தனை அற்புதமாக இருந்தது.