சேலை கட்டிய தேவதைகள்.. சாக்பீஸ் பிடித்த வளைக்கரங்கள்.. சல்யூட்!
சென்னை: பள்ளிக்கு செல்லும் பருவம் கடந்தாச்சு. ஆனாலும் செப்டம்பர் 5 என்றதும் ஆசிரியர் தினம் என்பது மட்டும் நினைவுக்கு வந்து போகாமல் இருப்பதில்லை. அது மட்டுமா கூடவே அழகான சுகமான நினைவுகளும் அல்லவா வந்து ஒட்டிக்கொள்கிறது.
பள்ளித்திடல் நினைவுக்கு வந்து போகிறது. மாணவனாய் சீருடையோடு சுற்றியது நினைவுக்கு வருகிறது. அங்கு எங்களோடு சுற்றிய தேவதைகள் நினைவுக்கு வருகிறார்கள். ஆம் சேலை கட்டி கொண்டு மைதானத்தில் சுற்றிய தேவதைகள் அவர்கள். ல்.கே.ஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை எத்தனையோ ஆசிரியர்களை கடந்து வந்திருப்போம் நாம் ஒவ்வொருவரும். ஆனால் செப்டம்பர் 5 என்றதும் நினைவுக்கு வருவது ஒரு சில ஆரியர்களின் பிம்பங்கள் மட்டுமே. ஆம் நம் மனதில் பதிந்துபோன உருவங்கள் அவை.
ஆசிரியர்கள் பிடித்துப் போன பின்பு பிடிக்காத பாடங்கள் கூட பிடித்துப்போன மாயங்கள் உங்களுக்கும் எனக்கும் நிகழ்ந்திருக்கும் கட்டாயம். அறியாத வயதில் ஆசிரியரின் ஆடைக்கு, கம்மல் அசைவுக்கு, சாக்பிஸ் பிடித்த கையோடு அசையும் வளையல் என நிச்சயம் ரசித்து இருப்போம். அவர் காட்டிய அன்பில் அந்தப் பேச்சில் நம் அம்மாவை அவர் முகத்தில் கண்டிருப்போம். அவர் அக்கறையில் ஒரு தந்தையையும் கண்டிருப்போம். ஏன் ஆசிரியரின் பேச்சுக்கு மயங்கி போன காலங்களும் உண்டு. (சில ஆசிரியர்களின் பேச்சு அப்படியே தூங்க வைக்கும் அது வேற கதை:))
அறிவியலை அதிசயித்து பார்க்க வைத்த அறிவியல் ஆசிரியர் டப்பாவுக்குள் பூச்சியோடும் கையில் பூவோடும் வகுப்புல நுழைந்த ட்ரைனிங் டீச்சர், கணக்கு கடினம் அல்ல எளிது தான் என்று அன்போடு படிப்படியாக சொல்லிகொடுத்த கணித ஆசிரியர் சுஷீலா மிஸ், ஆங்கிலம் அந்நிய பாடம் என்றாலும் அவ்வளவு தூரம் இல்லை நமக்கு என்று எளிய எளிய வார்த்தைகளை டிக்டேட் பண்ணி எழுத வைக்கும் ஆசிரியை தெரசா மிஸ், ஆங்கிலம் பேசுவது எப்படி என்று விழுங்கி விழுங்கி பேசிய பருவத்தில் ஆங்கிலம் எல்லாம் அம்புட்டு தான் பேச பேச வந்துடும் பாஸ் என்று வகுப்பில் இரண்டு இரண்டு பேராக எழுப்பி விட்டு எதாவது பேசுங்க என்று சிரித்தபடி கைகட்டி நின்று எங்களை பேச வாய்த்த கல்லூரி ஆசிரியர் செல்லப்பா சார், வரலாறை ரசித்து படிக்க எங்களை கடந்த காலத்துக்கு கூட்டிப்போன வரலாறு ஆசிரியர், வேண்டாம் வேண்டாம் என்று ஒதுங்கி நின்றாலும் நீ உயரமாய் இருக்கே நல்லா பண்ணுவே என்று கூடைப்பந்தில் சேர்த்து உற்சாகப்படுத்திய உடற்பயிற்சி ஆசிரியை , அறநானூறு புறநானூறு காதல் கதைகளை எல்லாம் சொல் நயத்தோடும் முகபாவதோடும் சொல்லித் தந்த தமிழ் அம்பிகா மிஸ் என்று இதயத்தை தொட்டுப் போன முகங்கள் இன்று பசுமையாக நினைவுக்கு வந்து போகிறது .
இந்த ஆசிரியர்களின் பெயர்கள் உங்கள் வாழ்வில் மாறி இருக்க கூடும் அனால் கண்டிப்பாக இது போன்ற முகங்கள் உங்கள் மனதில் எப்போதும் இருக்கும். நமது மனசில் இருக்கும் அந்த முகங்கள் மேல் நமக்கு இருக்கும் பேரன்புக்கும் மரியாதைக்கும் இந்த படைப்பு சமர்ப்பணம். நிச்சயம் இது போன்ற அற்புதமான மனிதர்களை கடந்து அவர்கள் காட்டிய படிகளில் ஏறியே நாம் இன்று இருக்கும் உயரத்தை அடைந்திருப்போம். கடமைக்காக வாங்குகின்ற சம்பளத்துக்காக பனி செய்து ஏதோவென்று கல்வி கற்று தராமல் ஒரு நல் ஆசானை போல ஆசையோடும் அன்போடும் அழகாய் சொல்லித்தந்த உயர்ந்த உள்ளங்களுக்கு வணக்கங்களோடு ஆரியர் தின வாழ்த்துக்கள்.
- இங்க்பேனா