ஆஸ்திரேலியா: உலக தவில் மாமேதை தெட்சணாமூர்த்தியின் ஆவணப்படம், நூல் வெளியீடு
சிட்னி: உலக தவில் மாமேதை தெட்சணாமூர்த்தி அவர்கள் பற்றி தெட்சணாமூர்த்தி அறக்கட்டளையின் ஆதரவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த படைப்பாளி அம்ஷன்குமார் தயாரித்த ஆவணப்படமும் மற்றும் 'தெட்சணாமூர்த்தி: எட்டாவது உலக அதிசயம்' எனும் நூல் ஆஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வு மார்ச் மாதம் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் புடைசூழ தூங்காபி சமூக மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் தெட்சணாமூர்த்தியின் புதல்வர் உதயசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
ஈழத்தின் தலைசிறந்த நாதஸ்வர, தவில் கலைஞர்களும் உள்ளுர் கலைஞர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
மங்கல இசை
இந்த நிகழ்ச்சி உள்ளுர் கலைஞர்களின் மங்கல இசையுடன் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. தெட்சணாமூர்த்தியின் திருவுருவப்படத்துக்கு உதயசங்கர் அவர்கள் மாலை அணிவிக்க மங்கல விளக்கேற்றப்பட்டது.
தமிழ்தாய் வாழ்த்து
தமிழ்த்தாய் வாழ்த்து ஆஸ்திரேலிய கீதம் மற்றும் மௌன அஞ்சலி ஆகியனவும் இடம்பெற்றன. நிகழ்வுகளை கலாநிதி பாலவிக்னேஸ்வரன் அவர்கள் ஆரம்பித்து வைத்திருந்தார். தொடர்ந்து, நிகழ்வினை நவரட்ணம் ரகுராம் அவர்கள் வழி நடத்த வரவேற்புரையினை சந்திரவதி தர்மதாஸ் வழங்கினார்.
இசைப்பாடல்
தொடர்ந்து பின்னணி இசையின்றி "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா" எனும் பாடலை திருமதி நித்யகல்யாணி சத்யமூர்த்தி அவர்கள் பாடி சபையோரை மெய்லிர்க்க வைத்தார்.
சிறப்பு கவிதை
இளமுருகனார் பாரதி அவர்களின் சிறப்பு கவிதையோடு உரைகள் ஆரம்பித்தன. முதலில் தமிழறிஞர் திரு ம.தனபாலசிங்கம் அவர்கள் 'தமிழனின் வாழ்வியலில் தவில்' எனும் பொருளில் உரையாற்றினார்.
தெட்சணாமூர்த்தி நினைவுகள்
இதனைத் தொடர்ந்து, 'தெட்சணாமூர்த்தி ஒரு மேதை' எனும் தொனிப்பொருளில் திருமதி கார்த்திகாயினி கதிர்காமநாதன் அவர்களும் நிறைவாக இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த எழுத்தாளர் சந்திரசேகர சர்மா தனது நினைவுகளை பகிர உரைகள் நிறைவுற்றன.
ஆவணப்படம் வெளியீடு
தொடர்ந்து, தவில் நாதஸ்வர கலைஞர்களிடமிருந்து ஆவணப்படம் மற்றும் நூல் பிரதிகளை மண்டபத்தில் இருந்த ரசிகர்கள் பெற்றுக் கொண்டதனைத் தொடர்ந்து கலைஞர்களின் சார்பில் உள்ளுர் கலைஞர் திரு மா.சத்தியமூர்த்தி அவர்கள் ஏற்புரை வழங்க, திரு கானா பிரபா அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
நாதஸ்வர, தவில் கச்சேரி
நிகழ்வின் நிறைவில் மகுடம் வைத்தது போல் இலங்கை கலைஞர்களின் நாதஸ்வர, தவில் இசைக்கச்சேரியோடு மதியம் 12.30 மணிக்கு நிகழ்வு நிறைவு பெற்றது.
அறக்கட்டளைக்கு நிதி
இந்நிகழ்வில் சேகரிக்கப்பட்ட நிதி முழுவதும் இலங்கையில் மங்கல இசை கற்கும் அடுத்த சந்ததிக்கான ஊக்க நிதி அறக்கட்டளைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.
ஆவணப்படத்திற்கு தேசிய விருது
ஆவணப் படங்களை இயக்குவதில் முத்திரை பதித்தவர் தமிழகத்தைச் சேர்ந்த படைப்பாளி அம்ஷன்குமார் அவர்கள். இவர் மகாகவி சுப்ரமணிய பாரதியார் உள்ளிட்ட ஆளுமைகளை திரை ஆவணப்படுத்தியவர். லய ஞான குபேர பூபதி தெட்சணாமூர்த்தி அவர்களின் வாழ்க்கைப் பதிவினைத் திரையாக்கம் கொள்ள முனைந்த போது திரு.அம்ஷன்குமாரைத் தேர்ந்தெடுத்தது எவ்வளவு பொருத்தம் என்பதை இந்தப் படைப்பின் சிறப்பு வெளிக் கொணர்ந்திருக்கிறது. அத்தோடு இந்த வாரம் அறிவிக்கப்பட்ட 63 வது இந்தியத் தேசிய விருதுகளில் Best Arts/Cultural Film என்ற உயரிய விருதை தெட்சணாமூர்த்தி ஆவணப்படம் பெற்று சிறப்பு சேர்த்துள்ளது.