சிவன் மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியால் மீண்டும் பரபரப்பு.. இதுவரை நடந்தது என்ன?
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் தற்போது செம்பு அம்பு வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்: சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் செம்பு அம்பு வைக்கப்பட்டுள்ளது. இது எதற்கான அறிகுறி என பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதற்கு முன் வைக்கப்பட்ட பொருட்கள் என அவற்றின் தாக்கம் என்ன என்பது குறித்த சில தகவல்கள்..
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பழமைவாய்ந்த சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக ஆண்டவர் உத்தரவு பெட்டி வைக்கப்பட்டு பூஜை நடத்தப்படுகிறது.
பக்தர்களின் கனவில் தோன்றி ஆண்டவர் இந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைக்கவேண்டும் என கூறுவார். அதன்படி பூப்போட்டு பார்த்து அந்த பொருள் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் பூஜை செய்யப்படும்.
குறிப்பால் உணர்த்தும் ஆண்டவர்
உலகநிகழ்வை குறிப்பால் உணர்த்தும் ஆண்டவன் செயலே இது என கூறப்படுகிறது. ஒவ்வொரு முறையும் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளால் ஏதோ ஒரு துறையில் தாக்கம் ஏற்படும்.
செம்பு அம்பு வைக்க உத்தரவு
இந்நிலையில் திருவண்ணாமலையை சேர்ந்த கென்னடி என்பவரின் கனவில் செம்பு அம்பு உத்தரவானது. இதையடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்றில் இருந்து செம்பு அம்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது.
தீமை அகன்று, நன்மை பெருகும்
பக்தர்களின் கனவில், சிவன்மலை ஆண்டவர் சொல்லும் பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது செம்பு அம்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் தீமை அகன்று, நன்மை பெருகும் என பக்தர்களும் சிவாச்சாரியார்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மிளகு அருகம்புல்
அண்மையில் சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் கீழாநெல்லி, மிளகு, அருகம்புல் உள்ளிட்டவை வைத்து பூஜிக்க உத்தரவு வந்தது. அதன்படி அவை பூஜிக்கப்பட்டது. இவற்றால் மருத்துவம் பெருகும் என கூறப்பட்டது.
பணத்தின் மதிப்பு குறைந்தது
கடந்த 2011 ஆம் ஆண்டு பக்தரின் கனவில் வந்து 500 ரூபாய் பணம் வைக்கச் சொல்லி உத்தரவு வந்தது. அதன் பின்பு மக்கள் மத்தியில் 10, 20, 50 ரூபாய்க்கு மதிப்பு குறைந்து 500 ரூபாய் நோட்டு புழக்கம் அதிகரித்தது.
இரும்பு சங்கிலி
2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் கொங்கூர் சேர்ந்த கே.எம். சிவராம் என்பவரின் கனவில் இரும்பு சங்கிலி உத்தரவானது. இதையடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இரும்பு சங்கலி வைத்து பூஜை செய்யப்பட்டது. அப்போது சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்புக்கு காத்திருந்த சசிகலா, தண்டனை பெற்று சிறை சென்றார்.
உருண்டை
இதனையடுத்து மஞ்சள், குங்குமம், ருத்ராச்சம் வைத்து பூஜிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வலம்புரி சங்கு வைத்து வழிபட்ட நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் உலக உருண்டை வைத்து பூஜிக்கப்பட்டது. இதனால் போர் ஏற்படலாம் என்று கூறப்பட்டது. அதன்படி கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் ஏற்பட்டது. சீனாவும் இந்திய எல்லையில் படைகளை குவித்ததால் பரபரப்பு நிலவியது.
கணக்கு நோட்டு
கடந்த ஜனவரி மாதம் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மலர்விழி என்ற பெண் பக்தரின் கனவில் கணக்கு நோட்டு வைக்க உத்தரவாகி உள்ளது. இதனையடுத்து கணக்கு நோட்டு வைத்து பூஜிக்கப்படுகிறது. இதனால் பினாமி சொத்துகள் மீட்கப்படும் என கூறப்பட்டது.