For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தைவான் தமிழ்ச்சங்கத்தின் ஐந்தாம் தமிழ் இலக்கிய அமர்வு

தைவான் தமிழ்ச்சங்கத்தின் ஐந்தாம் தமிழ் இலக்கிய அமர்வு தைபேயில் நடைபெற்றது.

Google Oneindia Tamil News

தைபே: தைவான் தமிழ்ச்சங்கத்தின் ஐந்தாம் தமிழ் இலக்கிய அமர்வு தைபேயில் நடைபெற்றது.

தாய் தமிழ்நாடு விட்டுவந்த போதும், அயல்மண்ணில் தமிழையும் அதன் சொல்லின் சிறப்புதனையும் தைவானில் வாழும் தமிழ் மக்களிடம் கொண்டுச்செல்லும் சீரியபணிதனை தைவான் தமிழ் சங்கம் செவ்வனே செய்து வருகிறது. அவ்வண்ணமே, தைவான் தமிழ்ச்சங்கம் சார்பில் தொடர்ச்சியாக நடத்தப்படும் தமிழ் இலக்கிய அமர்வின் ஐந்தாம் அமர்வு தைபே (Taipei) நகரில் உள்ள தேசிய தைபே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (National Taipei University of Science and technology) சிறப்பாக நடைபெற்றது. முனைவர். சுப்புராஜ் அவர்களின் சீரிய தலைமையில் குபேந்திரன் அவர்கள் அவை முன்னவராக இருந்து வழிநடத்தினார்.

The fifth Tamil literature session of Taiwan Tamil Sangam held in Taipei

இலக்கிய நோக்கில் தமிழர்களின் வாழ்வியல் முறைகள்

முதலாவதாக 'இலக்கிய நோக்கில் தமிழர்களின் வாழ்வியல் முறைகள்' என்ற தலைப்பில் கோவை ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ப் பணியாற்றும் பேராசிரியர் முனைவர் ந. சண்முகம், தலைவர், தமிழ் ஆராய்ச்சி துறை மற்றும் வர்மக்கலை ஆசான் காணொளி மூலமாக நேரடியாக பேசினார். அவர் தன் உரையின் தொடக்கமாக தைவான் தமிழ்ச்சங்கத்தின் சீரிய தமிழ் தொண்டினை பாராட்டியும் அது மென்மேலும் வளர வாழ்த்துகளும் கூறினார் .

The fifth Tamil literature session of Taiwan Tamil Sangam held in Taipei

தமிழ் மொழியின் தொன்மை, பழமை, செழுமை ஆகியவற்றை இவ்வுலகம் நம் முன்னோரின் கூற்றுகள் மூலம் அறிய இயலும். எனவேதான் பேரறிஞர்கள் பலரும் உலகில் தோன்றிய மொழிகளில் முதன்மையானது தமிழ் எனக்கூறுகின்றனர். தமிழ் என்ற சொல்லை பலமுறை சொல்லும்போது அமிழ்து என வரும். எனவேதான் பாரதிதாசன் தமிழுக்கு அமிழ்து என்று பேர் என்றார். அமிர்தம் எனப்படும் அமிழ்தை உண்டவர்க்கு அழிவில்லை என்பர் அதுபோலவேதான் தமிழை பேசியவர்கள், பேசுபவர்கள், தமிழை சுவாசிப்பவர்கள் இருக்கும்வரை தமிழுக்கும் தமிழர்களுக்கும் அழிவில்லை. இதற்கு 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கணியன் பூங்குன்றனாரின் வாக்கே சான்று. இந்த உலகில் எத்தனையோ மொழிகள் இருந்தும் எதிலும் சொல்லப்படாத ஒரு அற்புதமான தத்துவம்.

The fifth Tamil literature session of Taiwan Tamil Sangam held in Taipei

உலகில் உள்ள அனைவரையும் உறவினர்களாக பார்க்கவேண்டும் என்ற இத்ததுவத்தை தமிழனை தவிர வேறுஎவராலும் சொல்லபபடவில்லை. மேலும் ஐந்தாம் நூற்றாண்டில் திருமூலரால் சொல்லப்பட்ட 'ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்', இரண்டாம் நூற்றாண்டில் வள்ளுவனால் சொல்லப்பட்ட 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்', 'காக்கை குருவிகளும் எங்கள் சாதி' என்ற பாரதியின் கூற்று, 'வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்', என்ற வள்ளலாரின் கூற்று என பழந்தமிழின் கூற்றுகள் பலவற்றையும் அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த உலகிற்கு இந்தகைய உயரிய தத்துவங்களை தமிழனால் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு தமிழ் சித்தாந்தங்களை எடுத்துரைத்து ஐம்புலன்கள் எவ்வாறு நம் அறிவை வளர்த்துக்கொள்ள உதவுகிறது என்பதையும் தமிழ் மொழி மேலும் பல வாழ்வியல் நெறிமுறைகளை இந்த உலகிற்கு கொடுத்துள்ளது என்பதை பற்றியும் சிறப்பாக பேசினார்.

The fifth Tamil literature session of Taiwan Tamil Sangam held in Taipei

பெண் ஏன் அடிமையானாள்

இரண்டாவதாக 'பெண் ஏன் அடிமையானாள்; என்கிற தலைப்பில் தேசிய தைவான் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் N.ரஜிஷ்குமார் குமார் பேசினார். அவர் தனது உரையின் தொடக்கமாக சமத்துவத்தின் அடையாளமே தோழர் என்ற சொல் எனவும் தற்போதய பெண்களின் மீதான தாக்குதல்களுக்கு வருத்தத்தையும் கண்டனத்தையும் பதிவு செய்தார். பெண்களின் மீதான தாக்குதல்களுக்கு நம் சமூகம் எப்பொழுதுமே அவர்களின் மீதான அடக்குமுறைகளையே தீர்வாக சொல்கிறது. இதற்கு முக்கிய காரணமே ஆணாதிக்க சிந்தனைதான். காதல் என்பது உன்னதமானது, தெய்வீகமானது, மென்மையானது மற்றும் கண்டவுடன் வரும் காதலே சிறப்பானது என்ற தவறான கண்ணோட்டமானது திரைப்படங்களின் மூலமாக பரவியிருக்கிறது.

The fifth Tamil literature session of Taiwan Tamil Sangam held in Taipei

ஆனால் யதார்த்த வாழ்க்கையில் காதல் அப்படி வருவதல்ல‌. ஒவ்வொருவரும் தங்களுக்கென்று தனி வரைமுறைகளை வைத்துக்கொண்டு அதனை அடிப்படையாக கொண்டே தங்களுடைய காதலை தேர்ந்தெடுக்கிறார்கள். இதிலும் பெண்களின் ஒருதலைக்காதல் தற்கொலையிலும் ஆண்களின் ஒருதலைக்காதல் கொலையிலும் முடிகிறது. இது பெண்களின் மீதான ஆணாதிக்க சிந்தனை எத்தகைய கொடூரமாக திணிக்கப்படுவதை காட்டுகிறது. கற்பு என்ற வார்த்தைக்கு அகராதிப்படி உண்மைத்தண்மை என்ற பொருள். ஆனால் இன்று அந்த வார்த்தை அப்படியான பொருள்படவா இருக்கிறது.

The fifth Tamil literature session of Taiwan Tamil Sangam held in Taipei

ஒரு பெண் தனக்கான துணையை தானே தன் விருப்பபடி தேர்ந்தெடுத்து உடலுறவு கொண்டால் அது கற்பிழப்பு எனவும், அதுவே பெற்றோர்களால் தெரிவு செய்யப்பட்ட ஆணுடன் இருந்தால் நேர்மையானது உண்மையானது எனவும் அப்பெண் கற்புடன் வாழ்ந்தால் என்றும் போற்றப்படுகிறது. இங்கே கற்பு என்பது ஆண்களுக்கு பொருந்துவதில்லை, அதனை பெண்களுக்கு மட்டுமே உரியதாக‌ நம்முடைய சமூகம் சுருக்கிவிட்டது. பெண் என்பவள் கற்பு என்கிற விடயத்தின் மூலமாக அடிமையாக்கப்படுகிறாள். இத்தகைய அடிமைப்படுத்துதல் ஆதிகாலத்தில் இருந்து நம் சங்க இலக்கிய காலம் தொட்டு இன்றளவும் தொடர்கிறது.

The fifth Tamil literature session of Taiwan Tamil Sangam held in Taipei

இதற்கு சான்று சிலப்பதிகாரம் முதல் பல தமிழ் நூல்களில் காணக்கிடைக்கிறது. தற்பொழுதய சமுதாயம் பெண்களை அவர்களின் உடற்கூறுகளை வைத்து வீட்டிலே அடிமைபடுத்தி வைத்திருக்கிறது. ஆனால் வேட்டையாடும் இனத்தில் பெண் என்பவள் சமமாகவோ அல்லது அதற்கும் ஒருபடி மேலானாவளாகவோ தான் இருந்திருக்கிறாள். ஆனால் ஒரு கட்டத்தில் ஆணாதிக்க மனோபாவம் மேலோங்கி பெண்களை அடிமைபடுத்திவிட்டார்கள். சாதி, மதங்கள் அனைத்தும் பெண் ஒரு பொருள், அவளை மூடி வைத்துக்கொள் என்கின்றன. தற்பொழுதிய கார்பரேட் உலகத்தில் பெண் ஒரு பொருள் அவளை திறந்து விடு என்கிறது. இதற்கு தற்பொழுது வருகின்ற விளம்பரங்களை பார்த்தாலே தெரியும். ஆக மொத்தத்தில் பெண்களை உயிருள்ள மனிதராக யாரும் நடத்தவில்லை.

The fifth Tamil literature session of Taiwan Tamil Sangam held in Taipei

ஆதிகாலம் முதலே அனைத்து மதங்களிலும் சரி, பின்னாளில் சாதியகூறுகள் வந்தபோதும் சரி பெண்களுக்கு கல்வி என்பது மறுக்கப்பட்டே வந்துள்ளது. நம் இந்திய திருநாட்டில் அறிஞர்கள் பலர் வந்தாலும் அண்ணல் அம்பேத்காரும், தமிழ்நாட்டில் தந்தை பெரியாரும் பெண் கல்வியை மிகவும் போராடி பெற்று தந்தனர். மேலும் அவர் தன் உரையில் பல்வேறு சான்றுகளை எடுத்துரைத்து பெண் ஏன் அடிமையானாள் என விளக்கினார்.

English summary
The fifth Tamil literature session of Taiwan Tamil Sangam was held in Taipei.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X