தமிழன் என்ற பெருமிதம்… அமெரிக்காவில் திருக்குறள் போட்டி உற்சாகம்
ஹூஸ்டன்: திருக்குறள் விளையாட்டு என்ற பெயரில், தமிழ் ஆர்வத்தை வளர்க்கும் விதமாக ஒரு போட்டியை தமிழ்நாடு அறக்கட்டளை-ஹூஸ்டன் கிளை சார்பில் கடந்த வாரம் இறுதியில் (ஏப்ரல் 6-7) நடத்தப்பட்டது.
இதில், ஹூஸ்டன் மற்றுமல்லாது, சுகர்லேண்ட், கேட்டி , சைப்ரஸ், போமான்ட், போன்ற நகரங்களில் இருந்தும் பிள்ளைகள்-பெற்றோர்கள் வந்து நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள். அதிகமான குறளையும் அதன் பொருளையும் கூறும் சிறார் மற்றும் 18 வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கு, ஒரு குறளுக்கு ஒரு டாலர் என்ற பரிசை வாரி வழங்கியது, தமிழ்நாடு அறக்கட்டளை. அதுமட்டுமல்லாமல், அதிகமான குறள்களை விளக்கிய பிள்ளைகளின் தாய்மார்களுக்கு திருவள்ளுவரின் உருவம் நெய்யப்பட்ட பிரத்தியேக புடவை ஒன்றை பரிசாக வழங்குகிறது.
இந்நிகழ்ச்சியை நேரில் கண்டவர்கள், தமிழன் என்ற பெருமிதத்தில் திளைத்தார்கள் என்றால் அது மிகை ஆகாது. இதுகுறித்து தமிழ்நாடு அறக்கட்டளை-ஹூஸ்டன் கிளையின் தலைவி திருமதி. மாலா கோபால் கூறுகையில், " இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே இயற்றப்பட்ட திருக்குறள் இன்றும் நம் வாழ்விற்கு பொருந்துமாறு இருப்பது வியக்கத்தக்கதே. இப்படி ஒரு பொக்கிஷத்தை நமக்காக விட்டுச்சென்ற திருவள்ளுவருக்கு நன்றி சொல்ல தமிழர்கள் மட்டுமல்லாது இந்தியர்களாக நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
திருவள்ளுவர் நமக்கு செய்த இந்த பெரும் உதவியை நாம் ஈடு செய்ய ஒரே வழி, அவர் நமக்கு போதித்த திருக்குறள்களின் சிறப்பை நம் சந்ததியினருக்கு அறிவூட்டுவதே. ஐந்தே வயதான ஒரு பிள்ளை 430க்கும் மேலாக குறள்கள் கூறியது மெய்சிலிர்க்க வைக்கிறது " என்று கூறினார்.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு அன்னையர் தின விழாவில் கொடுக்கப்படும். இந்த விழா மே மாதம் ஐந்தாம் தேதி மதியம் மூன்று மணி அளவில் வெஸ்ட்ச்செஸ்டர் அகாடெமி, 905 யார்க்செஸ்ட்டர் டிரைவ், ஹூஸ்டன் 77079ல் நடைபெற உள்ளது. இந்த விழாவை தமிழகத்திலிருந்து குறல்சூடி உமையாள் என்ற இளம் பேச்சாளர் சிறப்பிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் அனைவரின் வரவையும், பங்கேற்ப்பினையும் தமிழ் நாடு அறக்கட்டளை ஹூஸ்டன் கிளையின் அலுவலர்கள் எதிர்நோக்குகின்றனர் என்று தெரிவித்தார்.