மார்கழி பாவை நோன்பு: திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள்- 10
மார்கழி மாதம் பிறந்து விட்டது. திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை அதிகாலையில் பாடி இறைவனை வணங்க வேண்டும்.
திருப்பாவை - 10
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
முற்பிறவியில் எம்பெருமான் நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக்கின்ற பெண்ணே! உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான். முன்னொரு காலத்தில், கும்பகர்ணன் என்பவனை தூக்கத்திற்கு உதாரணமாகச் சொல்வார்கள். உன் தூக்கத்தைப் பார்த்தால், நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது. சோம்பல் திலகமே! கிடைத்தற்கரிய அணிகலனே! எந்த தடுமாற்றமும் இல்லாமல் கதவைத் திறந்து வெளியே வா என்று அழைக்கின்றனர்.
திருவெம்பாவை - 10
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்.
விளக்கம்: இறைவனின் திருவடிக் கமலங்கள், கீழ் உலகம் ஏழுக்கும் கீழாய், சொல்லுக்கு அளவு படாதவையாய் இருக்கும்; மலர்களால் அழகு செய்யப்பட்ட அவனது திருமுடியும், மேலுள்ள உலகங்கள் அனைத்திற்கும் மேலானதாய் முடிவிடமாய் இருக்கிறது. உமையை ஒருபாகத்தில் கொண்ட இறைவன் ஒரேவகையானவன் அல்லன்; அவன் எல்லாமும் ஆனதால் ஒருவனேயும் அல்லன். வேதங்களும் வானவரும் மானுடரும் துதித்த போதும் அவன் புகழ் வற்றாதது; அவனோ இணையற்ற உயிர்த்தோழன். அவனுக்கு அடியாரோ கணக்கற்றவர். அத்தகைய குற்றமற்ற குலத்தவனான அரனின் கோவிலைச் சார்ந்த பெண்பிள்ளகளே! அவனது ஊர் எந்த ஊர்! எதை அவனது பெயர் என்று கூறுவது? அவனுக்கு யார் உறவினர், யார் அயலவர். அவனை என்னவென்று சொல்லிப் பாடுவது!' என்று இந்தப்பாடலும் சிவபெருமானின் பெருமைகளைப் போற்றிக் கூறுகிறது.